நாநா சீவ வாதக் கட்டளை
ஓம் தவத்திரு சேஷாத்திரி சிவனார் அருளிய நாநா சீவ வாதக் கட்டளை (மூலம் மட்டும்) நாநா ஜீவ வாதக் கட்டளை = (ஒன்றேயான பரம்பொருளிடத்தில்) பல ஜீவர்கள் (கற்பிதமாகத்) தோன்றிய முறையைச் சொல்லுவது. சிறப்புப் பாயிரம் இப்பியி னிடையே எழும்இர சதம்போல் என்றுமாய் இலகிஇன் பாகி, ஒப்பிட ஏதும் இன்றிய பிரமத்து உற்றிடும் பகுதிமுன் னாய, அப்பிர பஞ்ச முறைமையைத் தூல அருந்ததி நியாயமே என்னச், செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத் திரிசிவன் என்னுமா தவனே. பதப்பொருள் : சேஷாத்திரி சிவன் என்னு(ம்) மாதவனே = சேஷாத்ரி சிவன் என்னும் பெயரினையுடைய பெருந்தவமுனிவர். யாரும் = (மந்தர் உள்பட) அனைவரும், தெளிவுற = தெளிவான அத்வைத ஞானத்தைப் பெற, இப்பியினிடையே எழும் இரசதம் போல் = சிப்பியில் தோன்றும் வெள்ளி போல, என்றுமாய் இலகி இன்பாகி = என்னும் உள்ளதாக, சித்தாக, ஆநந்தமாக (ஸச்சிதாநந்தமாக), ஒப்பிட ஏதும் இன்றிய = தன்னுடன் ஒப்பிட இரண்டாவதாக ஒன்றும் இல்லாததாக (அத்வைதமாக), பிரமத்து உற்றிடும் =. (இருக்கின்ற) ப்ரஹ்மத்தினிடத்தில் (கற்பிதமாகப்) பொருந்தியிருக்கின்ற, பகுதி முன்னாய = ப்ரகிருதி முதலியனவான, அப்பிரபஞ்ச முறைமையை = அந்த பிரபஞ்சம...