பாடல் : 33
சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம், ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய், தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக், காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே.
பொருள்:
சூக்கும சடம் இம்மட்டும் சொல்லினோம் = சூட்சும சரீர (அத்தியாசத்தை) இதுவரை கூறினோம்,
இப்பால் = இனிமேல்,
தூலம் ஆக்கும் ஆரோபம் தானும் = தூலதேகம் (முதலிய பிரபஞ்சத்தைச்) படைக்கும் அத்தியாரோபத்தையும், அடைவினில் மொழியக் கேளாய் = கிரமமாகச் சொல்லக் கேட்பாயாக, தாக்கும் இவ்வுயிர்க்கு = (ஸூக்ஷ்மசரீரங்களில்) சம்பந்தித்துள்ள இவ்வுயிர்களுக்கு,
தூல தநுவும் போகமும் உண்டாக = (தத்தம் கருமத்திற்குத் தக்கதாக) தூலதேகங்களும், (அவ்வத் தேகங்களுக்கு பொருத்தமான) போகங்களும் உண்டாவதற்காக,
காக்கும் அவ்வீசன் = (யாவரையும்) காவல் செய்யும் அந்த ஈச்வரன், பஞ்சீகரணங்கள் செய்தான் = (ஆகாயம் முதலான பூதங்கள் ஐந்தனையும்) பஞ்சீகரணம் செய்தனன்.
பாடல் : 34
ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி, நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட, வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும், தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம்.
பொருள்:
ஐந்து பூதமும் பத்து ஆக்கி = ஐந்து பூதங்களையும் ஒவ்வொன்றையும் சமமாக இரண்டு இரண்டு பகுதியாகப் பண்ணி, அவைபாதி நந்நான் காக்கி = அவைகளின் (ஒவ்வொரு பாதியை வைத்து) மற்ற ஒவ்வொரு பாதியை நான்கு நான்கு பகுதிகளாகப் பண்ணி, நந்துதம் பாதி விட்டு = பெரிய அரைப்பகுதியை விட்டு,
நான்கொடு நான்கும் கூட்ட = (மற்றை) நான்கு பூதங்களின் அரைப்பாகங்களோடு நான்கு பாகங்களையும் சேர்க்கவே,
வந்தன தூல பூதம் = தூலமான பூதங்கள் உண்டாயின.
மகாபூதம் இவற்றி னின்றும் = (பஞ்சீகிருத) மஹாபூதங்களான இவற்றிலிருந்தும்,
அண்ட புவன போகம் தூல தனு நான்காம்
தந்தன = (இந்திரியங்களின் விஷயமான தூலப்) பிரமாண்டமும், (பிரமாண்டத்தின் உள்ளே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் என்னும் மேலேழு புவனங்களும், அதலம், விதலம், சுதலம் தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்னும் கீழேழும் ஆகிய பதினான்கு) புவனங்களும், (ஜீவர்களின் போக்கியத்திற்கு யோக்கியமான அந்நாதி) போக விஷயங்களும், (போகத்திற்கு ஸ்தானமான சராயுஜம், அண்டஜம், சுவேதஜம், உத்பிஜம் என்னும்) நால்வகைப் பிறப்பாகிய (தேவர், மனிதர், பசுவாதிய) தூலசரீரங்களும் (ஈசுரனால்) படைக்கப்பட்டன.
சராயுஜம் = கருப்பையிலிருந்து தோன்றக்கூடிய மனிதன் முதலான உயிரினங்கள்.
அண்டஜம் =முட்டையிலிருந்து தோன்றக்கூடிய கோழி முதலான உயிரினங்கள்.
ச்வேதஜம் = வியர்வை அழுக்கு முதலானவைகள் இருந்து உண்டாகக்கூடிய கிருமிகள் முதலானவை
உத்பிஜம் = பூமியை பிளந்து கொண்டு உண்டாகக்கூடிய தாவரங்கள்.
பாடல் : 35
தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும், தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும், தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை, தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.
பொருள்:
சொல்லிய தூலமே மருவும் சீவன் விசுவ னாகும் = முன்னே சொல்லியது போல தூல உடலில் பொருந்திய ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயராகும்,
தூலமே மருவும் ஈசன் சொலும் விராட்புருடன் ஆகும் = அந்த (ஸமஸ்டி) ஸ்தூலசரீரத்தில் பொருந்தும் ஈச்வரனுக்கு விராட் புருஷன் என்று பெயராகும்.
தூலமே அன்ன கோசம் = தூல உடலே அன்னமய கோசம் ஆகும்.
துன்னும் சாக்கிர அவத்தை = இந்த தூல உடலே எல்லா இந்திரியங்களும் செயல்படும் விழிப்பு நிலைக்கு இடம் ஆகும், தூல கற்பனை ஈது என்று = தூல பிரபஞ்ச ஆரோபம் இதுவாகுமென்று,
தொகுத்தது மனத்திற் கொள்வாய் = நாம் சுருக்கமாகக் கூறியதை உன் மனதில் நிலைநிறுத்திக் கொள்வாயாக.
பாடல் : 36
சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல், ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால், காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன், வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே.
பொருள்:
சீரிய ஈசனார்க்கும் சீவர்க்கும் = சிறந்த ஈச்வரருக்கும் ஜீவர்களுக்கும்
உபாதி ஒன்றேல் =
(தூல, ஸூக்ஷ்ம) உபாதி ஒன்றானால்,
ஆரிய குருவே = ஸத்குருவே,
பேதம் அறிவதெப்படி என்றக்கால் = வேறுபாடு எப்படி அறிவது என்று கேட்டால்,
காரிய உபாதி சீவன் = காரிய (அவித்யா) உபாதியை உடையவன் ஜீவன்,
காரண உபாதி ஈசன் = காரண (மாயா) உபாதியை உடையவன் ஈச்வரன்,
வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே = (இருவரும்) மகத்துவமிக்க ஸமஷ்டியினாலும் வியஷ்டியினாலும் பேதம்(வேற்றுமை) உடையவர் என்று அறிந்துகொள்வாயாக.
பாடல்: 37
மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம், சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார், பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார், இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.
பொருள்:
மரங்கள் போல் வியட்டி பேதம் = வியஷ்டி பேதம் என்பது மரங்கள் என்பது போலாகும்,
வனமெனல் சமட்டி பேதம் = சமஷ்டி பேதம் என்பது வனம் என்பது போலாகும்,
சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார் = நகர்கின்ற உயிர்கள், நகராத செடிகொடிகள் என வேறுபட்டு தனித்தனியே இருக்கும் உடல்களை வியஷ்டி என்று சொல்லுவர்,
பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார் = பரவி இருக்கின்ற அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் காண்பதை ஸமஷ்டி என்று சொல்லுவர் (அறிஞர்),
இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே = அவித்தையினால் பலவிதமாக வேறுபட்டு இருக்கின்ற ஜீவர்களுக்கும் ஈச்வரனுக்கும் வேறுபாடு இதுவே.
பாடல் : 38
கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம், சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான், செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல, அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய்.
பொருள்:
கற்பனை வந்தவாறு காட்டினோம் = அத்யாரோபம் உண்டான வழியை அறிவித்தோம்.
காண்ப எல்லாம் = அஹங்காரம் முதலாக பிரபஞ்சம் அனைத்தும்,
சொற்பனம் போலும் என்றே = கனவு உலகம் போல (உண்மையில் இல்லாதது) என்று,
துணிந்தவன் ஞானி ஆவான் = சந்தேகமின்றி அறிந்தவனே ஞானி ஆவான்,
செற்புதை மழைக்காலம் போய் = மேகம் நெருங்கிய மழைக்காலம் போனபிறகு,
தெளிந்த ஆகாசம் போல = மேகங்கள் இன்றித் தெளிவாகத் தோன்றும் ஆகாயம் போல,
அற்புத முத்தி சேரும் = எல்லா துன்பங்களும் நீங்கி ஒப்புயர்வற்ற ஆனந்த ரூபமான மோக்ஷத்தை அடையக் காரணம் ஆகும்,
அபவாத வழியும் கேளாய் = கற்பனையை நீக்குகின்ற வழியைக் கேட்பாயாக.
பாடல் : 39
அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல்,
குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு,
புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத்,
திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண்.
பொருள்:
அரவு அன்று கயிறு என்றாற்போல் = இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும்,
ஆள் அன்று தறி என்றாற்போல் = இது மனிதன் அல்ல கட்டைதான் என்று தெளிவது போலவும்,
குரவன்சொல் உபதே சத்தால் = குரு உபதேசித்த உபதேசத்தின் தெளிவினாலும்,
கூறுநூல் ஒளியைக் கொண்டு = (அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட) வேதாந்த நூல்களின் விவேகத்தைக் கொண்டும்,
புரம் அன்று புவனம் அன்று பூதங்கள் அன்று = இது உடல் அல்ல, இது உலகம் அல்ல, இது பஞ்சபூதங்கள் அல்ல (இவை உண்மைப் பொருளல்ல),
திரஞானம் என்னும் பிரமம் என்று = ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்று,
தெளிவதே அபவாதம் காண் = ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே அபவாதம் என்று அறிந்து கொள்வாயாக.
பாடல் : 40
படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின், கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள்,
உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே, அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.
பொருள்:
காரிய காரணங்கள் = காரியத்தையும் (உலகத்தையும்) காரணத்தையும் (ப்ரஹ்மத்தையும்),
பார்க்கில் = (ச்ருதி, யுக்தி, அநுபவங்களால்) ஆராய்ந்து பார்க்குமிடத்து,
படமும் நூலும் போல் = காரியமான துணியையும் காரணமான நூலையும் போலவும்,
செய்த பணியும் பொன் னும் போல் = காரியமான நகையையும் அதன் காரணமான பொன்னையும் போலவும், கடமும் மண்ணும் போல் = காரியமான பானையையும் அதன் காரணமாக மண்ணையும் போலவும்,
ஒன்றாம் = ஒன்றுக்கொன்று வேறுபடாத ஒரே பொருளாகும்,
உடல்முதல் சுபாவம் ஈறா = தூல உடல் முதல் அவித்தை முடிவாக, ஒன்றில் ஒன்றுதித்த ஆறே = ஒன்றிலிருந்து ஒன்று தோன்றிய படியே, அடைவினில் ஒடுக்கிக் காண்பது = முறையே ஒடுக்கிப் பார்ப்பது,
அபவாத உபாயம் ஆமே = அபவாத வழி ஆகும்.
காரணம் ஸத்யம், காரியம் மித்யா.
காரணம் ஒன்று, காரியம் பல.
காரணம் நித்தியம் காரியம் அநித்தியம்.
காரணம் நிரவயவம் காரியம் ஸாவயவம்.
காரணம் நிர்விகாரம், காரியம் ஸவிகாரம்.
காரணம் ஸ்வதந்திரம் காரியம் பரதந்திரம்.