May 28, 2011

கட்டுப்பாடும் சுதந்திரமும்

    தாய் குழந்தையைக் கட்டுப்படுத்துகிறாள். பெரியவர்கள் சிறியவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவனைக் கட்டுப்படுத்துகிறார். முதலாளி தொழிலாளியைக் கட்டுப்படுத்துகிறார். மதம், ஸமுதாயம், சட்டம் ஆகியவை ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆனால் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பது ஒவ்வோர் உயிரின் பிரகடனமாகவும் இருக்கிறது. அப்பொழுது கட்டுப்பாடு என்பது எதற்கு?
    சுதந்திரதாஹமுள்ள ஓர் இளைஞன் சாலையில் ஒழுங்கின்றி குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டிருந்தான். சாலைவிதிகளைப் பின்பற்றுவது மூடத்தனம், அடிமைத்தனம், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பது அவன் கருத்து.
    அவனது தாறுமாறான பயணத்தைத் திட்டிச் சென்றனர் சிலர். வேடிக்கை பார்த்துச் சென்றன குழந்தைகள். தங்களது திறமையால் விபத்தைத் தவிர்த்துச் சென்றனர் சிலர். எதிர்பாராத ஸமயத்தில் எதிர்பார்த்திருந்த விபத்து நடந்தது. விதிமீறிப் போனவனை விதி கொண்டு போயிற்று. அந்த கறுப்புச் சட்டைக்காரன் உடலை வெள்ளைத்துணி போர்த்தி எடுத்துச் சென்றனர். எனில் சுதந்திரம் என்பது என்ன?
    சாலைவிதிகள் தடையற்ற வாஹன போக்குவரத்திற்கு இன்றியமையாதன. சாலைவிதிகளைக் கட்டுப்பாடாக தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதாக நினைக்காமல் அவற்றின் அவச்யத்தை உணர்ந்து அவனாகவே ஒழுங்குடன் நடந்திருக்கலாம். அல்லது சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தாவது சாலைவிதிகளைப் பின்பற்றியிருக்கலாம்.
    தர்மம், சட்டம் ஒழுங்கென்பது தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பது அல்ல காப்பது. எவனொருவன் சட்டம் ஒழுங்கை மீறுகிறானோ அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஒரு மனிதன் சுயநலத்தினால் இன்னொருவனுடைய சுதந்திரத்தில் குறுக்கிடும்பொழுது சட்டம் குறுக்கிட்டு இவனது சுதந்திரத்தைப் பறிக்கிறது. எனவே ஒருவன் தன் சுதந்திரத்தை இழக்காமல் இருக்க மற்றவருடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்.
    விவேகமுள்ள ஒரு மனிதன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறான். நல்ல பண்புகளையும், பழக்கவழக்கங்களையும், ஒழுக்கத்தையும், சமூகவிதிகளையும், சட்டத்தையும் கட்டுப்பாடுகளாக, தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைப்பதில்லை. விலங்குகளுக்கு விதிமுறைகள் ஏதுமில்லை. சாஸ்த்ரங்களும் ஸம்ப்ரதாயங்களும் இல்லை. எனில் சாஸ்த்ரங்களும் சட்டங்களும் மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. தனிமனித நலனுக்காகவும் சமூகத்தின் சீரான இயக்கத்திற்காகவும் இயற்றப்பட்டவை.
    ‘தர்மம் சர’ ‘ஸத்யம் வத’ ‘அறம் செய விரும்பு’ ‘பொய்யற்க’ என்று மறைநூல்கள் ஆணையிட்டாலும் இவை நமக்கு நாமே இட்டுகொள்ளவேண்டிய கட்டளைகள்; சாஸ்த்ரம் நமக்கு அவற்றை எடுத்துத் கொடுக்கின்றன, அறிவுறுத்துகின்றன என்றே விவேகமுள்ளவன் எண்ணுகிறான்.
    கல்வி கேள்வி வாயிலாக முறையாகக் கற்றவன் குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை, குடிசெயல்வகை போன்ற குடிமைப் பண்புகளை முயற்சியுடன் பயிற்சி செய்து அவற்றைத் தன் இயல்பாக்கிக் கொள்கிறான்.
    இயல்பாகவே உண்மைபேசுவதில் விருப்பமுள்ளவனுக்கு ‘பொய் பேசாதே’ என்பது கட்டுப்பாடாகத் தெரிவதில்லை. அதர்ம நாட்டமுள்ளவனே அவ்வாறு கருதுகிறான். தன் விருப்பு வெறுப்பினால் சமூகக் கட்டுப்பாட்டை மீறி அவன் பொய் சொல்கின்றபொழுது சமூகத்தால், சட்டத்தால் அவன் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுகிறான். தண்டனைக்குட்படும்பொழுது அவன் சுதந்திரம் பறிபோகிறது. அப்பொழுது அவனது சுதந்திர இழப்பிற்கு அவனே காரணமாய் இருக்கிறான். தவறு செய்யும் குழந்தையே பெற்றோரால் ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறது. ஒழுக்கமுள்ள குழந்தை அல்ல.
    எவன் தன்னை வென்றவனோ அவன் தனக்குத் தானே நண்பனாயிருக்கிறான். தன்னை வெல்லாதவன் தனக்குத்தானே எதிரியைப்போல் இருக்கிறான்.
                                                                               - ஸ்ரீமத் பகவத்கீதை 6:6
    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.                        - திருக்குறள் 121
    சுயகட்டுப்பாடுள்ள மனிதன் தன்னைத்தான் வென்றவன் ஆகிறான். அவனே எப்பொழுதும் சுதந்திரவானாக இருக்கிறான். அவனுக்கு சமூகத்தைக் கண்டு சட்டத்தைக் கண்டு அச்சமில்லை. மாறாக கீழான குணங்களுள்ளவன் அச்சத்தினாலேயே ஆசாரமுடையவனாக வாழ்கிறான். அச்சமின்றி ஆசாரத்தை மீறுபவன், கட்டுப்பாடற்று வாழ்பவன் ஆரம்பத்தில் சுதந்திரவானாக தெரிந்தாலும் காலப்போக்கில் உலக விஷயங்களுக்கு அடிமையானவன் ஆகிறான். அந்த அடிமைத்தனம் மேலும் பல விதிமீறல்களை - தவறுகளைச் செய்யச் செல்கிறது. விதிமீறலால் அவன் தன் சமூக சுதந்திரத்தை முற்றிலும் இழக்கிறான். பின் அச்சத்துடனே அவன் வாழ்வு செல்கிறது.
    எனவே, சுதந்திரம் என்பது சுயகட்டுப்பாட்டுடன் வாழ்வது. கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் வாழ்வது அல்ல.

அறன் வலியுறுத்தல்


     திருவொற்றியூர் என்னும் ஊரில் கலிய நாயனார் என்றொரு சிவனடியார் இருந்தார். அவர் ஒப்பற்ற செல்வந்தர். செல்வத்தின் பயன் அறிந்தவர்; சிவத்தொண்டினைச் சிறிதும் மறவாதவர். அவர் திருவொற்றியூர்க் கோவிலுக்கு இரவும் பகலும் விளக்கேற்றி வந்தார்.
    அவர், நாள் தோறும் ஏற்றிய விளக்குகள் ஒன்று இரண்டல்ல, பலப்பல. அவரது தொண்டின் திறத்தை உலகுக்குக் காட்ட சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
       கலிய நாயனாரது செக்குத் தொழில் சீராக இயங்கவில்லை, நலிவடைந்தது. அதனால் அவரது பெருஞ்செல்வம் சுருங்கிற்று. அப்போதும் அவர் திருவிளக்குத் திருப்பணியை விடவில்லை. அவர் தம் மரபினரிடம் சென்று எண்ணெய் வாங்கி விற்றுக் கொடுப்பார். அதற்கு அவர்கள் தரும் கூலியைக் கொண்டு, திருவிளக்கேற்றி வரும் பணியைச் செய்தார்.
    அவ்வாறு சில நாள்கள் சென்றன. எண்ணெய் கொடுத்தவர்களும் கொடுக்க மறுத்தனர். பின் கலியனார் தாமே செக்காடினார். செக்காடிக் கிடைத்த கூலியால் திருவிளக்கேற்றினார்.
     செக்குத் தொழிலாளர் பெருகினர். அதனால் கலியநாயனாருக்குச் செக்காடும் வேலையும் கிடைக்கவில்லை.
      மிகுதியும் துன்புற்ற நாயனார் தமது வீட்டை விற்று, அதனால் வந்த பொருள் கொண்டு திருவிளக்கேற்றினார். அப்பொருளும் தீர்ந்தது. பின் அவர், தம் மனைவியை விற்றுத் திருவிளக்கேற்ற எண்ணினார். தம் மனைவியை அழைத்துக் கொண்டு செல்வந்தர் வீடுதோறும் சென்று விலை கூறினார். விளையாட்டுக்குக் கூட யாரும் விலை கேட்கவில்லை.
     விளக்கெரிக்க ஒரு வழியும் நாயனாருத்குத் தெரியவில்லை. அவர் அடைந்த துன்பத்திற்கும் அளவில்லை. தம் திருப்பணியை ஏற்றுக்கொள்ளும் பக்கநாதர் கோவிலுக்குச் சென்றார். அகல்களை வரிசையாக வைத்து அவற்றில் திரிகளையிட்டார். “இன்று திருவிளக்கேற்றாமல் உயிர்வாழ்வதை விட இறப்பதேமேல். இவ்வுடலின் குருதியைக் கொண்டு விளக்கெரிப்பேன்” என்று வாள் கொண்டு தம் உடலைச் சிதைக்கத் தொடங்கினார்.
  பெருங்கருணைக் கடலாம் சிவபெருமான் அவருடைய கைகளைப் பிடித்தருளிக் காட்சி தந்தார். நாயனார்தம் உடலில்பட்ட புண் மறைந்து ஒளி வீசியது. நாயனார் கைகளை உச்சிமேல் குவித்து வீழ்ந்து வணங்கினார். அவர் சிவலோகத்தில் திருவிளக்கேற்ற சிவபெருமான் திருவருள் புரிந்தார்.

                     வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
                     வாழ்நாள் வழியடைக்கும் கல்.
                                                                                   - திருக்குறள் 38


தவம்

      உத்தானபாதன் என்றோர் அரசன் இருந்தான். அவனுக்கு சுருசி, சுநீதி என இரண்டு மனைவியர் இருந்தனர். சுருசிக்கு உத்தமன் என்றொரு மகனும் சுநீதிக்கு துருவன் என்றொரு மகனும் இருந்தனர். அவர்களுள் அரசன் உத்தானபாதனுக்கு சுருசியும் அவளது மகன் உத்தமனும்தான் மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. சுநீதியின் மகன் துருவன் நற்குணங்களும் நற்செய்கைகளும் கொண்டவன்.
    ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தந்தையைக் காண விரும்பி அந்தப்புரத்திற்குச் சென்றான்.  அங்கே அரசன், சுருசியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான். தந்தையின் மடியில் தன் சகோதரன் அமர்ந்திருப்பதைப் பார்த்த துருவன் தானும் அப்பாவின்மடியில் அமரவேண்டும் என ஆசைப்பட்டு அருகில் சென்றான். சுருசி அதை விரும்பமாட்டாள் என்பதை அறிந்திருந்த அரசன், துருவனின் விருப்பத்தை ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, சுருசி துருவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, “பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய். என் வயிற்றில் பிறக்காமல், வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாஸனத்திற்கு ஆசைப்படலாமா? நீ இந்த அரசனின் மகன்தான் என்றாலும், அதற்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன். பாக்யமில்லாத சுநீதி வயிற்றில் பிறந்ததை நீ நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ!” என்று இழிவாகப் பேசினாள். அதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, வேகமாகத் திரும்பித் தன் தாயிடம் ஓடினான்.
   கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, கோபமாக வந்த துருவனை சுநீதி தன்மடியில் அமரவைத்து, “மகனே! என்ன நடந்தது? உன் கோபத்திற்குக் காரணம் என்ன?” என்று வினவினாள். துருவன் நடந்ததை விளக்கினான்.
  “மகனே! சுருசி சொன்னவை அனைத்தும் உண்மைதான். நான் பாக்யமற்றவள். சுருசி பாக்யசாலி. கணவன் தன்னிடத்தில் பிரியமாக இருப்பதற்குப் புண்ணியம் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டும் உடையவளாக இருக்கிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் அவளுக்கு மகனாகப் பிறந்திருக்கிறான். நீயோ சொற்பப் புண்ணியம் உடையவன்; அதனால் என் வயிற்றில் பிறந்திருக்கிறாய். எல்லாம் அவரவர் விதிப்படியே நடக்கிறது. ஆகையால் ஐச்வர்யத்தை நினைத்து துக்கப்படாமல் இருப்பாயாக. சுருசி சொன்னவற்றைக் கேட்டு உனது மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மை உண்டாவதற்கு புண்ணியச் செயல்களைச் செய். தர்மாத்மாவாக இரு; நல்ல நடத்தையுள்ளவனாக, எல்லா உயிர்களிடத்தும் கருணையுள்ளவனாக, எல்லா மனிதர்களிடத்தும் அன்புள்ளவனாக இரு. நல்லவற்றைச்  செய்து நல்லவனாக வாழ்ந்துவந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச் செல்வதுபோல் செல்வங்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன” என்று சுநீதி நீதி கூறினாள்.
       அதைக் கேட்ட துருவன், “தாயே! நீங்கள் சொன்ன வார்த்தைகள் காயம்பட்ட என் இதயத்தில் பதியவில்லை. நான் மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய முயற்சி செய்யப்போகிறேன். என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என் சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்றுமகிழாமல் நானே முயன்று, அரசபதவியைவிட மிகவும் உயர்ந்த பதவியை தவத்தினால் சம்பாதிக்கிறேன்!” என்று சொன்னான்.
    அன்னையின் அனுமதிபெற்று அரண்மனையிலிருந்து விரைவாகப் புறப்பட்ட துருவன், நாட்டைக் கடந்து அருகாமையிலுள்ள காட்டை அடைந்தான். அங்கே, ஸப்தரிஷிகள் எனப் பெயர்பெற்ற ஏழுமுனிவர்களைக் கண்டான். அவர்களை வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டான். மேலும், “முனிவர்களே! நான் ராஜ்யத்தையோ மற்ற பொருள்களையோ விரும்பவில்லை; ஆனால் இதுவரை ஒருவனாலும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், எல்லா நிலைகளுக்கும் மேலானதான ஒரு நிலையை நானடைய விரும்புகிறேன். அதற்கான உபாயத்தை அடியேனுக்கு அருளவேண்டும்” என்று வேண்டினான்.
  அவர்கள், “அச்சுதனான ஸ்ரீமந்நாராயணனை சரணாகதியடைந்து வேண்டியவர், வேண்டிய பதவியைப் பெறுவர். ஆகவே நீ கோவிந்தனை ஆராதிப்பாயாக. உலக விஷயங்களைப் பற்றிய ஆசைகளைவிட்டு, விஷ்ணுவின் திருவடிகளையே நினைத்து இந்த மஹாமந்த்ரத்தை ஜபம் செய்வாயாக” என உபதேசித்தனர்.
   ஸப்தரிஷிகளிடம் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கிவிட்டு, யமுனை நதிக்கரையிலுள்ள மதுவனத்திற்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்தவண்ணம் ஸ்ரீவிஷ்ணுவைத் தியானம் செய்யத் தொடங்கினான்.
  துருவன் தன் இடக்காலை ஊன்றி வலக்காலை மடித்தும், பின்னர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும், பின்னர் ஒரே பாதத்தில் கட்டைவிரலால் பூமியில் நின்றும் கடுமையாகத் தவம் செய்தான்.
  துருவனின் தவத்தைக் கண்டு கலக்கமடைந்த தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் பூதகணங்களை ஏவி துருவனின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். பூதகணங்கள் துருவனின் தாயைப்போல உருமாறி அன்பாகப் பேசியும், பலவிதமான பயங்கரமான காட்டு விலங்குகளைப்போல உருமாறி பயமுறுத்தியும் துருவனின் தவத்தைக் கலைக்க முயற்சித்து, தோல்வியடைந்தன. துருவன் உறுதியான உள்ளத்துடன் ஸ்ரீமந் நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து, வேறொன்றும் அறியாமல் இருந்தான்.
  தேவர்கள் மஹாவிஷ்ணுவிடமே சென்று வேண்டினர். ஸ்ரீவிஷ்ணு, “கவலைப்படாதீர்கள், உங்களுடைய எந்தப் பதவியையும் விரும்பி சிறுவன் துருவன் தவம் செய்யவில்லை. நீங்கள் கலக்கமடையாமல் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவன் தவத்தை நிறுத்துகிறேன்” என்று அருளிச்செய்தார்.
   அதன்பின்னர் எல்லா உயிர்களிலும் உறைபவரான ஸ்ரீவிஷ்ணு பகவான், நான்கு திருத்தோளுடைய திருமேனியுடன் மஹாபாக்யசாலியான துருவன் முன்பு காட்சி கொடுத்து, “மகனே! உனக்கு நன்மை உண்டாகக்கடவது. நீ உனது மனத்தை என்மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன்; உனக்கு விருப்பமான வரத்தைக்கேள்!” என்றார்.
  துருவன் கண்குளிர பகவானின் திருவுருவத்தைத் தர்சித்து, அவர் திருவடிகளில் வீழ்ந்துவணங்கி, மெய்சிலிர்க்க, பக்தியுடன், “ஸ்வாமி! சிறுவனான எனக்கு உம்மை எவ்வாறு துதிப்பது என்று தெரியவில்லை. எனவே உம்மைப் பற்றிய ஞானத்தை எனக்கு அருள்வீராக” என பிரார்த்தித்தான். அவ்வாறே அருளிய பகவான், மேலும், “நீ வேண்டிய வரத்தைக் கேட்பாயாக” என்றார்.
   துருவன், “தேவதேவனே! அடியேனது விருப்பம் உமக்குத் தெரிந்தேஇருக்கும். எனது மாற்றாந்தாயான சுருசியானவள் தனது வயிற்றில் பிறவாததால் அரசபதவிக்கு நான் தகுந்தவனல்ல” என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் உலகிற்கு ஆதாரமும் எல்லாவற்றிற்கும் மேலானதும் அழிவற்றதுமான ஓர் உன்னதநிலையை அடைய நான் விரும்புகிறேன். திருவருள் புரிய வேண்டும்!” என வேண்டினான்.
    ஸ்ரீபகவான் துருவனை கருணை நிறைந்த கண்களால் பார்த்து, “பாலனே! நீ விரும்பிய பதவியை அடைவாய். மூன்று உலகங்களுக்கும் மேன்மையானதாக, எல்லா கிரக, நக்ஷத்ரங்களுக்கும் ஆதாரமானதாக, ஸப்தரிஷி மண்டலத்திற்கும் சித்தர்கள் ஸஞ்சரிக்கும் ஸ்தானங்களுக்கும் மிக மேலானதாதத் திகழும் ஸ்தானத்தை அடைந்து கல்பகாலம் வரையிலும் சுகமாக இருப்பாயாக. உன் தாயான சுநீதியும் நக்ஷத்ரரூபமாக கல்பாந்தம் வரையிலும் உன் அருகிலேயே இருப்பாள். ‘துருவ நக்ஷத்ரமாகத்’ திகழும் உன்னை யார் அதிகாலையிலும் மாலையிலும் வணங்குகிறாரோ அவர் மஹாபுண்யத்தைப் பெறுவார்” என்று அருளினார்.
     இவ்விதமாக, சிறுவனாக இருந்தாலும் மனவுறுதியுடன் கடுந்தவம் செய்து வேண்டிய வரம் பெற்று மிக உயர்ந்த நிலையை அடைந்தான் துருவன்.

                      வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
                       ஈண்டு முயலப் படும்.
                          - திருக்குறள்: 265

அடக்கம் உடைமை

    ஓர் அரசனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அரசன் சிறந்த கல்விமான். அவன் தம் பிள்ளைகள் நால்வரையும் கல்வி கற்றுக்கொள்ள ஒரு குருவினிடம் அனுப்பினான்.
      பிள்ளைகளுள் நான்காமவன் நாபாகன் படிப்பில் அதிக ஈடுபாடு உடையவன். அதனால் அவன் தன் குருவின் மனம் கோணாதபடி நடந்து வந்தான். குருவும் அவனைப் பாராட்டி அவனுக்கு நன்றாகக் கல்வி கற்றுக் கொடுத்தார்.
  நாபாகன் சுறுசுறுப்பாகப் படித்து வந்தான். மற்ற மூவரும் ஓரளவு படித்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். நாபாகன் மட்டும் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து ஆர்வமுடன் படித்துவந்தான்.
  ”நாபாகன் படிப்பிலேயே கவனமாக இருக்கிறான். ஆகையால் இனிமேல் அவன் வரமாட்டான், குருகுலத்திலேயே தங்கிவிடுவான்” என்று அவனுடைய சகோதரர் மூவரும் தந்தையிடம் கூறினர். அரசன் இருந்த சொத்துக்களை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.
  சில வருடங்களுக்குப் பிறகு நாபாகன் படிப்பை முடித்து வீட்டிற்குத் திரும்பினான்.
   தன் அண்ணன்மார்கள் பாகம் பிரித்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்து “எனக்கு என்ன பாகம் வைத்தீர்கள்?” என்று கேட்டான்.
   மற்ற மூவரும் சேர்ந்து ஆலோசித்து “உன் தந்தையையே உனக்குப் பாகமாக வைத்தோம்” என்றனர்.
  நாபாகன் தந்தையிடம் சென்று தன் அண்ணன்மார்கள் சொன்னதைச் சொன்னான்.
  தந்தை, அவர்கள் திட்டமிட்டு நாபாகனை ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். அவர்களை வெறுத்தார். செய்வதறியாது திகைத்தார். நாபாகனைப் பார்த்து   “மகனே, நீ வருத்தப்படாதே. உன்னிடம் கல்விச் செல்வம் இருக்கிறது. அது  அழியாதது. சகோதரர்களால் பங்கு போட்டுக்கொள்ள முடியாதது. திருடர்களால் திருடமுடியாதது. கற்றவனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்புண்டு. அது உன்னைக் காக்கும்; உனக்கு வாழ்வளிக்கும். நீ நான் சொல்கிறபடி செய். ரிஷிகள் யாகம் செய்கிறார்கள். நீ அங்கே போய்ப் பார். அவர்கள் பலசமயங்களில் தவறாக மந்திரம் சொல்கிறார்கள். அந்த மந்திரம் உனக்குத் தெரியும். நீ அவர்களுக்கு சொல்லிக் கொடு. அவர்கள் உன் மீது விருப்பம் அடைவார்கள். யாகம் முடிந்ததும் அதில் மிச்சமாகும் பொருளை உனக்குக் கொடுப்பார்கள். நீ அதைப் பெற்றுக்கொண்டு சுகமாயிரு” என்றார்.
  நாபாகன் கோபத்தையும் வருத்தத்தையும் விட்டான். தன் தந்தையின் சொற்படியே யாகங்களுக்குப் போனான். ரிஷிகளுக்குத் தெரியாமல் இருந்த மந்திரங்களைக் கற்றுக்கொடுத்தான். ரிஷிகள் மகிழ்ச்சியடைந்து யாகம் முடிந்ததும் அதில் மிகுதியாயிருந்த பொருட்களை நாபாகனுக்குக் கொடுத்தனர்.
  ஒருநாள் நாபாகன் அவ்வாறு பொருட்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார். அவர் நாபாகனை நிறுத்தி “யாகத்தில் மிஞ்சும் பொருள் என்னைச் சேர்ந்தது. அதை நீ எப்படிக் கொண்டு போகிறாய்?” என்று கேட்டார்.
  நாபாகன் இது எனக்குக் கொடுக்கப்பட்டது என்று மறுத்துக் கூறினான். பெரியவர் விடவில்லை,  அது தனக்குச் சேரவேண்டியது  என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியாக நாபாகன் “சரி, அப்படியானால் என் தந்தையைக் கேட்போம். அவர் சொல்கிறபடி நடப்போம்,” என்று சொல்லி அவரைத் தன் தந்தையிடம் அழைத்துக்கொண்டு போனான்.
  அரசன் நடுநிலை தவறாதவன். ஆகையினால் அவர்கள் வழக்கைக் கேட்டு ஆலோசித்து “யாகத்தில் மிஞ்சும் பொருள் ருத்ரமூர்த்தியைச் சேர்ந்தது. இவர் ருத்ரமூர்த்தியானால் இந்தப் பொருள் இவரைச் சேர்ந்ததுதான்” என்றான்.
பெரியராக வந்தது ருத்ரமூர்த்தியாகிய சிவபெருமான்தான். உடனே அவர் தன் சொரூபத்தைக் காட்டினார். நாபாகன் அவரை வணங்கி அவர் பாதத்திலே பொருளை வைத்தான்.
    ருத்ரமூர்த்தி மகிழ்ச்சிகொண்டு நாபாகனை ஆசிர்வதித்து “நாபாகா! நீ நன்றாக சாஸ்த்ரங்கனளப் படித்தாய். படித்தவன் என்பதற்கு அடையாளமாக கோபத்தை விட்டு உன் தந்தை சொல்கேட்டு நடந்தாய். அதனால் உன் மீது எனக்குக் கருணை உண்டாயிற்று. நீ நல்லவன்; குற்றமற்றவன். உனக்கு ஒரு குறையும் வராது. உன் வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருளும் கொடுத்தோம், சுகமாயிரு!” என்று கூறி மறைந்தார்.
    பிறகு நாபாகன் தனது அண்ணன்மார்களைவிட மேலான செல்வம்பெற்று சுகமாக வாழ்ந்தான்.

                      கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
                      அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
                                                                                  - திருக்குறள் 130

    கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்கவேண்டிய நூல்களை நன்கு கற்று, அடங்கி வாழ்பவனிடம் உரிய வழிகளைப் பார்த்து தர்மதேவதை சென்றுசேரும்.

அழுக்காறாமை

    ஓர் ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.  அண்ணன்  நல்ல குணங்கள் மிகுந்தவன்.  தர்மவான்.  தன்னைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்வான்.   தம்பியோ அண்ணனுக்கு நேர்எதிரான குணங்கள் உள்ளவன்.  வடிகட்டிய கஞ்சன். பேராசைக்காரன்.  பொறாமைபிடித்தவன்.  தம்பியின் மனைவியும் அவனைப்போலவே இருந்தாள்.
   ஒருசமயம் அண்ணனின் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. வறுமை அடைந்தான்.  உணவுக்கே கஷ்டமானது.  அப்பொழுது முதியவர் ஒருவர் அண்ணன் வீட்டிற்கு வந்தார்.
   “நான் வெகுதூரத்திலிருந்து வருகிறேன். மிகவும் பசிக்கிறது. தயவுசெய்து உண்பதற்கு ஏதாவது கொடுங்கள்” வேண்டினார் முதியவர்.
தன்சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த அண்ணனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.  உடனே தன் மனைவியின் தாலியை விற்றோ, அடகு வைத்தோ பணம் புரட்டலாம் என்று மனைவியின் தாலியைப் பெற்று வெளியில் சென்றான்.
   அதையெல்லாம் கிழவரும் கவனித்தார்.  அவர் அண்ணன் மனைவியை அழைத்து, “நான் குளித்த பிறகுதான் உணவு உண்பேன், எனக்கு குளிக்க வெந்நீர் தரமுடியுமா?” எனக் கேட்டார். “சரி, போட்டுத் தருகிறேன்” என்று சொல்லி விறகடுப்பில் பெரிய அண்டாவில் வெந்நீர் காயவைத்தாள் அண்ணன் மனைவி.
   வெளியில் சென்ற அண்ணன் சமையலுக்குத் தேவையான பொருட்களுடன் திரும்பி வந்தான். 
   குளிப்பதற்குத் தயாரான முதியவர் இருவரையும் கூப்பிட்டு, “என்னைத் தூக்கி வெந்நீர் அண்டாவுக்குள் இறக்குங்கள்” என்றார். அதிர்ந்துபோன அவர்கள் தயங்கி நின்றனர்.
   “பயப்படாதீர்; எனக்கு ஒன்றும் ஆகாது, நான் சொன்னதுபோல் செய்யுங்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பெரியவர். வேறுவழியின்றி கடவுளை நினைத்து கிழவரை அண்டாவுக்குள் துாக்கிப் போட்டனர் கணவனும் மனைவியும்.
   குழந்தையைப்போல் விளையாடி ஆனந்தமாகக் குளித்துவிட்டு வந்தார் பெரியவர்.
   உணவு தயாராய் இருந்தது. வயிறு நிறைய உண்டுவிட்டு, “உங்கள் துன்பங்கள் எல்லாம் இன்றோடு முடிந்தன, ஆனந்தமாக இருங்கள்”  வாழ்த்திச் சென்றார் முதியவர்.
   பெரியவர் சென்றபிறகு, ‘வெந்நீர் அண்டாவை விளக்கி வைக்கலாம்’ என அண்டாவைக் கையில் எடுத்த அண்ணன் மனைவி ஆச்சர்யத்தில் திகைத்து நின்றாள். அண்டாவில் முத்தும் பவளமுமாக நவமணிகள் பளபளத்துக் கொண்டிருந்தன.
  மிகவும் மகிழ்ந்துபோன கணவனும் மனைவியும் இறைவனுக்கு நன்றி சொல்லி, அவற்றைக் கொண்டு வறுமையைப் போக்கி, வழக்கம்போல் தான தர்மங்கள் செய்து நிறைவுடன் வாழ்ந்து வரலாயினர்.
   இதைக் கேள்விப்பட்ட தம்பியும் அவன் மனைவியும் அண்ணனைப்போலத் தாங்களும் பணக்காரராக வேண்டும் என எண்ணினர்.
   தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு  பிச்சைக்காரக் கிழவரைச் சாப்பாடு போடுவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சாப்பிடுவதற்குமுன் குளிக்கவேண்டுமெனக்கூறி அவரை வெந்நீர் அண்டாவுக்குள் தூக்கிப் போட்டனர்.  இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பிச்சைக்காரர் உடம்பெல்லாம் வெந்நீரால் வெந்துபோக “அய்யோ! அம்மா!” என்று அலறி, துள்ளி எழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார்.
   தன்னைக் கொல்ல முயற்சித்ததாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
தங்களிடம் இருந்த செல்வத்தையும் இழந்து சிறையில் அடைபட்ட  அவர்கள், பொறாமையால் தங்களுக்கு விளைந்த அவலத்தை நினைத்து தாங்கொணா துன்பத்தை அனுபவித்தனர்.

                         அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
                         தீயுழி உய்த்து விடும்
                                                                         -- திருக்குறள் 168

    பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி செல்வத்தை அழித்து நரகத்தில் கொண்டுவிடும்.  


May 26, 2011

பெருமை

  தேவலோகத்தில் ஒருநாள் தேவசபை கூடியிருந்தது. தேவர்கள் பூலோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். தேவலோக அதிபதி இந்திரன் சொன்னான், “மனிதர்கள் வாழும் உலகில் தற்சமயம் கிருஷ்ணதேவன் என்னும் அரசனே மிகவும் நல்லவன். அவனைப் போன்ற குணவானை எங்கும் காணமுடியாது. அவனே எல்லாரையும் விடச் சிறந்தவன்” என்று கூறினான்.
    கிருஷ்ணதேவனைத் தேவேந்திரன் புகழ்ந்து பேசியதைக் கேட்ட தேவன் ஒருவன் கிருஷ்ணதேவனை சோதித்துப் பார்க்க விரும்பினான். “தேவராஜனே புகழ்ந்து பேசுமளவு அப்படி என்ன கிருஷ்ணதேவனிடம் சிறப்பு இருக்கிறது! சோதித்துப் பார்த்துவிடலாம்” என்று தீர்மானித்து பூலோகம் புறப்பட்டான்.
    பூலோகம் வந்த தேவன், கிருஷ்ணதேவன் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு இறந்த நாயின் வடிவில் விழுந்து கிடந்தான். அந்த உடலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. நாயின் வாய் வேறு கிழிந்து அவலக்ஷணமாகக் காணப்பட்டது.
    கிருஷ்ணதேவன் அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த அழுகிய நாயின் உடலைக் கண்டான். “ஆகா! இந்த நாயின் பல்வரிசைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! பற்கள் எத்தனை சுத்தமாகவும் வெண்மையாகவும் இருக்கின்றன! முத்துக்களைப் போலல்லவா பிரகாசிக்கின்றன!” என்று வாய்விட்டுக் கூறினான்.
    கிருஷ்ணதேவனின் கவனம் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ அதிலிருற்து வீசிய துர்நாற்றம் பற்றியோ செல்லவில்லை. அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் பற்றியே இருந்தது. இதுதான் அவனின் சிறந்த குணம்.
    கிருஷ்ணதேவனின் உயர்ந்த குணத்தை நேரில் கண்டு மகிழ்ந்த தேவன் நாயின் உடலை விட்டு, அவன் எதிரே சுயஉருவத்தில் தோன்றினான். “அரசனே! உண்மையிலேயே தங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் காணப்படுகின்றன. தங்களைப் போன்ற மனம் உள்ளவர்களே உலகில் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்!” என்று கூறி கிருஷ்ணதேவனை ஆசீர்வதித்துவிட்டுத் தேவலோகம் திரும்பினான்.

                       அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
                        குற்றமே கூறிவிடும்.
                                                                       - திருக்குறள்  980

    பெருமையுடையவர் பிறர் குறைபாட்டை மறைத்து நிறைகளையே பேசுவர்.  மற்றுச் சிறுமை குணமையுடையவரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குறைகளையே பேசுவர்.