பாடல் : 54
இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம்,
புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி,
உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி,
அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான்.
பொருள் :
இதுநினக்கு அறியும் வண்ணம் = இது (ஆத்மா ஒருவனுக்கே ஏழு அவஸ்தைகளும் உண்டாகின்றது என்பது) உனக்கு நன்றாக விளங்கும்படிக்கு,
இப்படி ஒரு திட்டாந்தம் = இப்படி ஒரு உதாரணமாக,
புதுமையாம் கதை கேள் = ஆச்சர்யமான ஒரு கதையைக் கேட்பாயாக,
பத்துப் புருடர் ஓர் ஆற்றை நீந்தி = 10 நண்பர்கள் ஒரு ஆற்றைக் கடந்து,
உதகதீரத்தில் ஏறி = அந்நதியின் மறுகரையில் ஏறிய பின்னர்,
ஒருவன் ஒன்பதுபேர் எண்ணி = அவர்களில் ஒருவன் மற்ற ஒன்பது பேர்களையும் எண்ணி,
அதனொடு தசமன் தான் என்று = ஒன்பது பேரோடு தானே பத்தாமவன் என்று,
அறியாமல் மயங்கி நின்றான் = அறியாமல் ஒருவனைக் காணவில்லை என்று மயங்கி நின்றான்.
பாடல் : 55
அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல்,
பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம்,
நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக்,
குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.
பொருள் :
அறியாத மயல் அஞ்ஞானம் = தன்னை (ஒன்பது பேரோடு பத்தாவது மனிதன் தான்தான் என்பதை) அறியாத மயக்கமே அஞ்ஞானம்,
அவன் இலை காணோம் என்றல் = பத்தாவது ஆள் இல்லை, காணவில்லை என்று கூறுதல்,
பிறியா ஆவரணம் ஆகும் = நீங்காத மறைப்பு ஆகும்,
பீழை கொண்டு அழல் விட்சேபம் = (நதியில் அவன் இறந்துவிட்டான் என்று கருதி) துன்பம் கொண்டு அழுதல் விக்ஷேபம்,
நெறியாளன் = ஆப்தன் ஒருவன்,
தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லை = பத்தாமவன் இருக்கின்றான், இங்கே நிற்கின்றான் என்று கூறுதலை,
நெஞ்சில் குறியாக எண்ணிக் கொள்வது = மனதில் நிச்சயித்து கருதிக் கொள்வது,
பரோட்ச ஞானம் = பரோக்ஷ ஞானமாகும் (கேள்வி அறிவாகும்).
பாடல் : 56
புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை,
எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல்,
கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல்,
திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த மாமே.
பொருள் :
புண்ணிய பதிகன் = தர்மவானான பாதையில் செல்லும் ஓர் ஆப்தன்,
பின்னும் புருடர் ஒன்பதின்மர் தம்மை = பின்னரும் மனிதர் ஒன்பது பேரை,
எண்ணும் நீ தசமன் ஆவை என்னவே = எண்ணுகின்ற நீயே பத்தாவது மனிதன் ஆவாய் என்று சொல்லவே,
தன்னைக் காணல் = (பத்தாமவன் இருக்கின்றான், நானே அவன் என்று) தன்னை அறிந்து கொள்ளுதல்,
கண்ணினில் கண்ட ஞானம் = அபரோக்ஷ ஞானம் (நேரே கண்ட அறிவு) ஆகும்.
கரைதல் போவது நோய் போதல் = (பத்தாமவன் நதியில் போனான் என்று கருதி) அழுத துன்பம் நீங்குதலே துக்க நிவர்த்தி,
திண்ணிய மனதில் ஐயம் தெளிதல் ஆனந்தம் ஆமே = மனதில் சந்தேகமின்றி நிச்சய ஞானம் ஏற்பட்டு இன்பம் அடைதல் ஆனந்தம் ஆகும்.
பாடல் : 57
தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன்,
நிசவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான்,
சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு,
அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய்.
பொருள் :
தசபுமான் தனைக்கண் டாற்போல் = பத்தாமவன் தான்தான் என்று கண்டுகொண்டார் போல,
சற்குருமூர்த்தியே என் = ஸத்குருநாதரே என்னுடைய,
நிச வடிவினை யான் காண = என்னுடைய உண்மையான சொரூபத்தை நான் அறிந்து கொள்ள,
நீர்காட்டல் வேண்டும் என்றான் = தாங்கள் உபதேசித்து அருள வேண்டும் என்று சீடன் வினவினான்.
தொம்பதம் தத்பதங்கட்கு = த்வம் (நீ), தத் (அது = ஈச்வரன்) ஆகிய சொற்களுக்கு,
சுசி பெறும் இலக்கியார்த்தம் = உபாதி சம்பந்தம் இன்றிய தூய்மையான லட்சிய அர்த்தங்களுக்கு,
அசிபத ஐக்கியம் செய்யும் = அஸி (இருக்கிறாய்) எனும் சொற்பொருளான ஐக்கியத்தை போதிக்கும்,
அதுசெயும் உண்மை கேளாய்= அஃது அங்ஙனம் போதிக்கும் தத்துவார்த்தத்தை
உபதேசிப்போம் கேட்பாயாக!
பாடல்: 58
விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில்,
மண்ணொன்று கடவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும், எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன், நண்ணும்கூ டத்தன் சீவன் நான்குசை தந்யம் ஆமே.
பொருள்:
பாரில் = உலகில்,
விண் ஒன்றை = ஒன்றேயான ஆகாயத்தை,
மகாவிண் என்றும் = மஹாகாயம் என்றும்,
மேகவிண் என்றும் = மேகாகாயம் என்றும்,
மண்ணொன்று கடவிண் என்றும் = மண்ணினால் ஆன கடத்தில் கடாகாயம் என்றும்,
மருவிய சலவிண் என்றும் = பொருந்திய ஜலாகாயம் என்றும்,
எண்ணும் கற்பனை போல் = சொல்கின்ற கற்பனை போல,
ஒன்றே எங்கும் ஆம் பிரமம் = ஒன்றேயாக எங்கும் வியாபித்திருக்கின்ற நிர்குண பிரஹ்மம்,
ஈசன் = ஈச்வரன்
நண்ணும் கூடத்தன் = கூடஸ்தன்
சீவன் = ஜீவன் என,
நான்கு சைதந்யம் ஆமே = நான்கு சைதந்யமாக விளங்கும்.
கருத்துரை:
1-வது பிரமாண்டத்தின் உட்புறமெங்கும் ஏகரசமாய் வியாபகமாயுள்ள ஆகாசசொரூபத்தை மஹாகாச மென்பர்.
2-வது- மேகத்திற்கு அவகாசங்கொடுத்திருக்கின்ற ஆகாசத்தையும், மேகசலத்தில் பிரதிபிம்பித்துள்ள ஆகாசத்தையும் மேகாகாசம் என்பர்.
3-வது--சலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்திற்கு எவ்வளவு ஆகாசம் அவகாசங் கொடுத்திருக்கின்றதோ, அவ்வளவு ஆகாசத்தைக் கடாகாசம் என்பர்.
4 வது - ஜலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்தில் மேக நட்சத்திரங்களோடு பிரதிபிம்பித்திருக்கின்ற ஆகாச பிரதி பிம்பத்தையும் கடாகாசத்தை சேர்த்து சலாகாசம் என்பர்.
பாடல் : 59
பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும்,
வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா,
காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும்,
ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே.
பொருள்:
பூச்சிய ஈசன் = அனைவராலும் பூசிக்கத் தகுந்த ஈச்வரனும்,
சீவன் = பூகப்பவனான ஜீவனும்,
புகல் பதம் இரண்டினுக்கும் வாச்சியம் = மஹாவாக்கியத்தில் சொல்லப்படுகின்ற 'தத்' எனும் சொல் 'த்வம்' எனும் சொல் இரண்டுக்கும் வாச்யார்த்தம் ஆகும்.
லட்சியம்தான் = லட்சியார்த்தமாவன,
மலம் இலாப் பிரமம் ஆன்மா = அவித்யா மலமற்ற ப்ரஹ்மமும் கூடஸ்தனுமாம்.
காய்ச்சிய பாலில் நெய்போல் = பாலில் நெய்யானது கலந்து ஒன்றாக இருப்பது போல,
கலந்தொன்றாம் = அவ்வாச்சிய இலட்சியங்கள் (விவேகம் இன்மையால்) கலந்து ஒன்றாக இருக்கின்றன.
கடைந்தெடுக்கும் ஆச்சியம் என்ன = மத்தினால் கடைந்து எடுக்கும் நெய்யைப் போல,
உன்னை அறிந்து = விசாரத்தால் இலட்சியார்த்தமான உன்னை அறிந்து,
நீ பிறிந்து கொள்ளே = வாச்யார்த்தத்தில் இருந்து நீ வேறுபடுத்திக்கொள்.
பாடல் : 60
பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும், அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ, வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால், எறிபிரா ணனும்நீ அல்லை இராசத குணவி காரம்.
பொருள் :
பிறிவது எப்படி என்றக்கால் = (என்னை அறிந்து வாச்யார்தத்தில் இருந்து) வேறுபடுவது எவ்வாறான விவேகத்தால் என்று கேட்பாயாகில்,
பிணமாகும் உடல் நான் என்னும் = சில நாட்களில் இறந்து போகும் அந்தமயமான தூல உடல் நான் என்ற,
அறிவினைக் கொல்லல் வேண்டும் = தவறான அறிவினை அழிக்க வேண்டும்.
ஐம்பூத விகாரம் அன்றோ = இத்தூலவுடல் பஞ்சீகரணமான பஞ்சபூதங்களின் மாறுபாடு அல்லவா?
வெறியதோர் துருத்தி = வெறுமையான ஓர் தோல் துருத்தி
மூக்கின் விடுவது போல் = மூக்கினால் காற்றை விடுவது போல,
உன் மூக்கால் எறி பிராணனும் நீ அல்லை = உன்னுடைய மூக்கினால் வீசுகின்ற (சடமான) பிராணமய கோசமும் நீ இல்லை.
இராசத குண விகாரம் = அது அபஞ்சீகிருத பஞ்சபூதங்களின் ரஜோகுணக்காரியம்.