Jan 21, 2022

Gita Saara Thalattu கீதாசாரத்தாலாட்டு பதவுரையுடன்


கீதாசாரத் தாலாட்டு
நூலாக்கம்: திருவேங்கடநாதர்

விளக்கம்: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ


தமிழர்கள் அனைவரும் அறிந்தது தாலாட்டு. ஒரு தமிழ்த்தாய் கண்ணன் சொன்ன கீதையை, கண்ணனையே குழந்தையாக்கி தாலாட்டாகப் பாடுகிறாள். அதுவே கீதா சாரத் தாலாட்டு. 

கீதை இறுதிக்காலத்தில் படிப்பது அல்ல; இருக்கும் காலத்தில் படிக்கவேண்டியது. ஏனெனில், கீதை வாழ்க்கையைக் கவலையின்றி வாழச் சொல்லித் தருகிறது, நம்மை நாம் ஆளச் சொல்லித் தருகிறது, மரணத்திலிருந்து மீளச் சொல்லித் தருகிறது, பிறவி‌ கடைத்தேறச் சொல்லித் தருகிறது. 

உலகம் விழிக்கப் பாடிய பாடலைப், பாடினவனை உறங்கச் செய்யப் பாடிய பாடலிது!

படைத்தவன் சொன்ன வழி படித்தவன் நடந்தால் படைத்தவனுக்குப் பாரில் என்ன வேலை? பாற்கடலில் தான் பாடியதையே கேட்டுப் பள்ளி கொள்ளவேண்டியது தானே! 

கண்ணன் கேட்டுத் துயிலும் அத்தாலாட்டை, நாமும் கேட்டுக் கவலையின்றி பள்ளி கொள்வோம் பரந்தாமன் போல், சோகம் விட்டு யோக நித்திரையில்!


முகவுரை

தொண்டை நாட்டில் மாதை எனப்படும் திருவாமாத்தூர் என்னும் ஊரின் சிற்றரசராக விளங்கியவர் இந்நூலாசிரியரான திருவேங்கடநாதர்.

இவருக்கு இரு மகள்கள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாமையால் மனம் வருந்தி ஏங்கித் தவித்தாள். அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பொம்மை ஒன்றைக் கொடுத்து கிருஷ்ணனையே குழந்தையாக பாவிக்கும்படி கூறினார். அதை தாலாட்டும் பொருட்டு பகவத்கீதையின் ஞான யோகத்தின் ஸாரத்தைத் தாலாட்டுப் பாடல்களாக ஆக்கிக்கொடுத்தார். அப்பெண், தந்தையின் அருள் வாக்கின்படி பாலகிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி வர சில ஆண்டுகளில் புத்திரப் பேறு வாய்த்தது என்பது வரலாறு.

இக்கீதாசாரத்தாலாட்டு அர்ஜுனனின் ஸந்தேஹத்திற்கு, கிருஷ்ண பரமாத்மா ஸமாதானம் கூறும்விதமாக அமைந்துள்ளது. பந்த மோட்சங்களின் இயல்பு பற்றியும், ஒரு சிலர் ஞானிகளாகவும், ஒரு சிலர் அஞ்ஞானிகளாகவும் இருப்பது எதனால் என்பது பற்றியும், ஜடம் ஆன உடல் எவ்வாறு கர்மத்தைச் செய்யும், அக்கர்மபலனை எவ்வாறு அனுபவிக்கும் என்பது பற்றியுமான பல ஐயங்கள் குறித்து, மிக ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் கூறுகின்றது. சாமானியரும் ஆத்ம தத்துவத்தை உணருமாறு எளிதாகக் கூறுவது இந்நூல்.


பாடல் : சிறப்புப் பாயிரம்

மாதையர்கோன் வேதநவில் வாய்வேங் கடநாதன்,

காதையுறப் பார்த்தனுக்குக் கண்ணனருள் - கீதைக்,

கருத்துயர்தா லாட்டாகக் கட்டுரைத்தான் யாரும்,

கருத்துயர்தீர்ந்(து) எய்தக் கதி.


பொழிப்புரை :

திருவாமாத்தூர் என்னும் ஊரின் தலைவனாக வாழ்ந்த, வேதம் பயின்ற வேங்கடநாதன் என்பவர், அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் விரிவாக அருளிய பகவத்கீதையின் உயர்ந்த கருத்துக்களை, அனைவரும் கொடிய பிறவித்துன்பம் நீங்கி மோக்ஷ கதியை அடையவேண்டும் என்பதற்காக, எளிய தாலாட்டுப் பாடலாக அமைத்துள்ளார்.


இறைவணக்கம்

ஐவகைப் பொருளும் நான்கு கரணமும் குணங்கள் மூன்றும்,

செய்வினை இரண்டும் ஒன்றி யாவரும் திகைப்ப நின்ற,

பொய்யிருள் அகல ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள்,

கைவளராழிச் செங்கட் கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.


பொருள் :

ஐவகைப் பொருளும் = (1) ஆகாயம் முதலான பூதங்கள் ஐந்தும்,

(2) ஒலி முதலான விஷயங்கள் ஐந்தும்,

(3) காது முதலான அறிவுக்கருவிகள் (ஞானேந்திரியங்கள்) ஐந்தும்,

(4) வாய் முதலான செயற்கருவிகள் (கர்மேந்திரியங்கள்) ஐந்தும்,

(5) பிராணன் முதலான வாயுக்கள் (பிராணன்கள்) ஐந்தும் என, (ஐந்து பிரிவுகளாயுள்ள) ஐந்து பொருட்களையும்,

நான்கு கரணமும் = (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) நான்கு வகையான அகக்கரணத்தையும்,

குணங்கள் மூன்றும் =(சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய) மூன்றுவித குணங்களையும்,

செய்வினை இரண்டும் ஒன்றி = (நல்வினை, தீவினை என்ற) இருவிதமான செயல்களையும் பற்றிக்கொண்டு,

யாவரும் திகைப்ப நின்ற பொய்யிருள் = அனைவரையும் மயங்கி நிற்கச் செய்யும் மாயையாகிய இருளானது,

அகல = நீங்குவதற்காக,

ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள் = தத்துவஞானம் ஆகிய ஒளிக்கதிர்களைப் பரவச் செய்த தெய்வமான,

கைவளராழிச் செங்கட் கண்ணனை = சங்கு, சக்கரம் தாங்கிய திருக்கரங்களையும் சிவந்த விழிகளையும் உடைய ஞானசூரியனாகிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை,

கருத்துள் வைப்பாம் = மனதில் நினைத்து தியானிக்கின்றோம்.


பொழிப்புரை :

ஆகாயம் முதலான பூதங்கள் ஐந்தும், ஒலி முதலான விஷயங்கள் ஐந்தும், காது முதலான அறிவுக்கருவிகள் (ஞானேந்திரியங்கள்) ஐந்தும், வாய் முதலான செயற்கருவிகள் (கர்மேந்திரியங்கள்) ஐந்தும், பிராணன் முதலான வாயுக்கள் (பிராணன்கள்) ஐந்தும் என, ஐந்துபிரிவுகளாயுள்ள ஐந்து பொருள்களையும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என) நான்கு வகையான அகக்கரணத்தையும், (சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய) மூன்றுவித குணங்களையும், (நல்வினை, தீவினை என) இருவிதமான செயல்களையும் பற்றிக்கொண்டு, அனைவரையும் மயங்கி நிற்கச் செய்யும் மாயையாகிய இருளகல, தத்துவஞானம் எனும் ஒளிக்கதிர்களைப் பரவச் செய்த தெய்வமான, சங்கு, சக்கரம் தாங்கிய திருக்கரங்களையும் சிவந்த விழிகளையும் உடைய ஞானசூரியன் ஆகிய ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைத்து தியானிக்கின்றோம்.


பாடல் : 1 அவதார நோக்கம்

சீராரும் பரமார்த்த தெரிசனத்தை அருள்செய்யப்,

பேராரும் தேசிகனாய்ப் பெருமானே வந்தவரோ.


பொருள் :

பெருமானே = எங்கள் பெருமானே,

சீர் ஆரும் = சிறப்புப் பொருந்திய,

பரமார்த்த தெரிசனத்தை = பரம்பொருள் தத்துவத்தை (அர்ஜுனன் நிமித்தமாக அனைவரும்) அபரோக்ஷமாக அறிந்துணருமாறு,

அருள்செய்ய = உபதேசித்து அருள்வதற்காக,

பேராரும் தேசிகனாய்ப் = பெருமை பொருந்திய குருமூர்த்தியாய்,

வந்தவரோ = அவதரித்து வந்தவர் நீர்தானோ!


பொழிப்புரை :

எங்கள் பெருமானே, சிறப்புப் பொருந்திய பரம்பொருள் தத்துவத்தை (அர்ஜுனன் நிமித்தமாக அனைவரும்) அபரோக்ஷமாக அறிந்துணருமாறு, உபதேசித்து அருள்வதற்காக பெருமை பொருந்திய குருமூர்த்தியாய் அவதரித்து வந்தவர் நீர்தானோ!


கருத்துரை :

உலகம், உயிர், இறைவன், ஆகிய மூன்றின் தத்துவங்களையும் அர்ஜுனன் வாயிலாக எல்லா மனிதர்களுக்கும் உபதேசிக்க வேண்டும் என்று பகவானே குருவாக எழுந்தருளுகிறார்.


பாடல் : 2 ஞானோபதேசம்

திருத்தேரில் சாரதியாய்ச் சேர்ந்திருந்தும் கீதையினால்,

அருச்சுனருக்கு மெய்ஞ்ஞான மனைத்தும் உரை செய்தவரோ!


பொருள் :

திருத்தேரில் = சிறந்ததொரு தேரில்,

சாரதியாய்ச் சேர்ந்திருந்தும் = பாகனாய் இருந்தும்,

கீதையினால் = கீதா உபதேசமாக,

அருச்சுனருக்கு = அருச்சுனனுக்கு,

மெய்ஞ்ஞானம் அனைத்தும் = மெய்ப்பொருள் தத்துவம் மற்றும் அவற்றின் ஸாதனம் முழுவதையும்,

உரை செய்தவரோ = எடுத்து விளக்கி அருளியவர் நீர்தானோ!


பொழிப்புரை : 

சிறந்ததொரு தேரில் பாகனாய் இருந்தும் கீதா உபதேசமாய் மெய்ப்பொருள் தத்துவம் முழுவதையும் எடுத்து விளக்கி அருளியவர் நீர்தானோ!

கருத்துரை :

குரு உயரமான இருக்கையிலிருந்து உபதேசிப்பதும் சிஷ்யன் கீழே இருந்து கேட்பதும் மரபு. மேலும், வேறு எந்தத் தொழிலும் இல்லாமல், அமைதியான தனிமையான இடத்தில் கற்பிப்பது வழக்கம். தேரில் அர்ஜுனன் எஜமானனாக உயரே இருக்க, கிருஷ்ணன் கீழே தேரோட்டியாக இருந்தவர். இடமோ யுத்தகளம். அப்படி இருந்தும் அர்ஜுனனுக்கு ஆத்ம தத்துவத்தை பெருங்கருணையோடு உபதேசித்து அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.


பாடல் 3 : பார்த்தனின் பயம்

செஞ்சமரில் பந்துசனஞ் சேதமுறும் என்றிரங்கி, 

அஞ்சியபார்த் தன்பயமாங் ககற்றவரு ளால்நோக்கி,


வேறு பாடம்

செஞ்சமரில் பந்துசனச் சேதம்வரு மென்றிரங்கி,

அஞ்சினவன் பயந்தீர்த்தே அமர்செய்யச் சொன்னவரோ.


பதப்பொருள் :

செஞ்சமரில் = அறப்போரில்,

பந்துசனம் சேதமுறும் = (போரிட வந்திருக்கின்ற) உறவினர்கள் அனைவரும் மரணம் அடைவார்களே,

என்று இரங்கி = என்று நினைத்து இரக்கம் கொண்டு,

அஞ்சிய பார்த்தன் பயம் = அச்சமடைந்த அர்ஜுனனது பயத்தை,

ஆங்கு அகற்ற = அப்போர்க்களத்திலே (தத்துவஞான உபதேசத்தால்) நீக்கக் (கருதிய பகவான்),

அருளால் நோக்கி = கருணையுடன் பார்த்து (உபதேசிக்கத் தொடங்கினார்.)


(வேறு பாடம்)

செஞ்சமரில் = அறப்போரில்,

பந்துசனச் சேதம் வரும் = உறவு மக்களுக்கு அழிவு வந்து விடும்,

என்று இரங்கி = என்று பற்றினால் இரக்கம் கொண்டு,

அஞ்சினவன் = அஞ்சிய அர்ஜுனனுடைய,

பயம் தீர்த்தே = பயத்தைப் போக்கி,

அமர் செய்ய = போர் செய்ய,

சொன்னவரோ = கூறி அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை :

"அறப்போரில், (தர்மத்திற்கான யுத்தத்தில்) போரிட வந்திருக்கின்ற உறவினர்கள் அனைவரும் மரணம் அடைவார்களே", என்று இரக்கம் கொண்டு அச்சமடைந்த அர்ஜுனனது பயத்தை, அப்போர்க்களத்திலேயே நீக்கக் (கருதிய பகவான்) கருணையுடன் பார்த்து.. (உபதேசிக்கத் தொடங்கினார்.)


கருத்துரை :

உறவினர்களையும் குருமார்களையும் கொல்வதினால் பாபம் வரும், அவர்கள் இறப்பதினால் குலதர்மம் கெடும், சமூகஒழுக்கம் கெடும். இவை ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு மறுமையில் நரகம் கிடைக்கும்; இம்மையிலோ, அதனால் கிடைக்கும் ராஜ்ஜியம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கும், என்றெல்லாம் சிந்தித்து அர்ஜுனன் பயத்தையும் மனக்கலக்கத்தையும் அடைந்தான். யுத்தம் செய்ய சக்தி அற்றவனாக தேர்த்தட்டில் அமர்ந்தான். தன் மனக்குழப்பம் நீங்க, அறிவு தெளிவுபெற வழிகாட்டுமாறு பகவானிடம் சரண் அடைந்தான். இவ்வாறு குழப்பத்தை அடைந்திருந்த அர்ஜுனனுக்கு, புன்னகையுடன் (" சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி, அறத்தின்படி அவரவர் கடமையைச் செய்பவர் உயர்கதி அடைவார்," என்று அர்ஜுனன் நிமித்தமாக அனைவருக்கும் சொல்ல விரும்பிய பகவான்) கீதையை அருளிச் செய்கின்றார்.


பாடல் 4 : சூத்ர உபதேசம்

சுற்றமறில் சோகமெனச் சொல்லினைகற் றறிந்தவன்போல்,

கற்றுணர்ந்த பேரதனால் கலங்கார்காண் என்றவரோ.


பொருள் :

சுற்றம் அறில் = உறவினர் அழிந்துபோனால்,

சோகம் என = துக்கம், கவலை வரும் என்று,

கற்று அறிந்தவன் போல் = எல்லா சாஸ்த்திர நூல்களையும் கற்று அறிந்த பண்டிதன் போல,

சொல்லினை = சொன்னாய்,

கற்று உணர்ந்த பேர் = தர்ம, தத்துவ சாஸ்த்ரங்களை குருவாயிலாகக் கற்று அதன் உண்மைப் பொருளை அறிந்திருக்கும் சான்றோர்கள்,

அதனால் = தங்களின் ஞானத்தினால்,

கலங்கார் காண் = (மரணத்தைக் குறித்து) மனக்கலக்கம் அடையமாட்டார்கள் என்பதை அறிவாயாக!

என்றவரோ = என்று கூறி அருளிய பகவான் நீர்தானோ?


பொழிப்புரை : 

எல்லா சாஸ்த்திர நூல்களையும் கற்று அறிந்தவன் போல உறவினர் அழிந்துபோனால் துக்கம், கவலை வரும் என்று சொன்னாய்; தர்ம, தத்துவ சாஸ்த்ரங்களைக் குருவாயிலாகக் கற்று அதன் உண்மைப் பொருளை அறிந்திருக்கும் சான்றோர்கள், தங்களின் ஞானத்தினால் (மரணத்தைக் குறித்து) மனக்கலக்கம் அடையமாட்டார்கள் என்பதை அறிவாயாக!, என்று கூறி அருளிய பகவான் நீர்தானோ?


கருத்துரை : 

அறத்தைக் காப்பது அரசனின் கடமை; சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பது அறிவீனம். (சொந்த விருப்பு வெறுப்புகளால் பற்றுக்கொண்டு தன் கடமை தவறுதல் பாபம் என்று அறியாமை). கடமை தவறுதல் பாவம். உறவினர்களே தர்மத்திற்கு விரோதமாக, எதிரிகளாக இருந்தால் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்ரியனுக்குப் பாபம் ஆகாது என்பது அறிவுடையவர்‌ கருத்து. மேலும், "உடல் விதியின்படி அழியக்கூடியது, ஆத்மா அழிவில்லாதது; அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள்", என்று கற்றவர்கள் உடலின் அழிவைக் குறித்து வருந்த மாட்டார்கள்.


பாடல் 5 : அர்ஜுனனின் கேள்வி

கலங்காரோ இறப்புவரில் கற்றுணர்ந்த பேரேனும்,

மலங்காமல் நானிருக்கும் வகையுரையும் எனவினவ..


பொருள் :

கற்று = குருவாயிலாக ஞான நூல்களை விசாரம் செய்து,

உணர்ந்த = அனைத்தையும் ஆத்மாவாக உணர்ந்திருக்கும்,

பேரேனும் = ஞானிகளாக இருக்கும் மனிதர்கள்,

இறப்புவரில் = மரணம் வருகின்றபோது,

கலங்காரோ = மனக்கலக்கம் அடையமாட்டார்கள் எனில்,

நான் = நானும் (அப்படியே),

மலங்காமல் = மயக்கத்தை அடையாமல்,

இருக்கும் வகை = இருக்கும்படியான உபாயத்தை,

உரையும் = (எனக்கு) உபதேசித்து அருளுங்கள்,

என வினவ = என்று அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை :

குருவாயிலாக ஞான நூல்களை விசாரம் செய்து, அனைத்தையும் ஆத்மாவாக உணர்ந்திருக்கும் ஞானிகளாக இருக்கும் மனிதர்கள், மரணம் வருகின்றபோது, மனக்கலக்கம் அடையமாட்டார்கள் எனில், நானும் (அப்படியே), மயக்கத்தை அடையாமல், இருக்கும்படியான உபாயத்தை (எனக்கு) உபதேசித்து அருளுங்கள், என்று அர்ஜுனன் கேட்க,


கருத்துரை :

கற்றறிந்தவர்கள் மரணம் வந்தாலும் மனம் கலங்க மாட்டார்கள் என்றால், நானும் சோகத்தால் மயங்காமல் இருக்கும் வழியை அருளுங்கள் என்று (அர்ஜுனன்) கேட்கிறான்.


பாடல் 6 : பிறப்பும் இறப்பும் இல்லை

நீயுநா னும்புவிமேல் நிருபர்களும் மெய்யுணர்வால்,

ஆயுங்கால் பிறந்திறப்பது ஆர்க்குமிலை என்றவரோ!


பொருள் :

மெய்யுணர்வால் = மெய்பொருளைப் பற்றிய அறிவினால்,

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து,

நீயு நானும் = நீயும் நானும்,

புவிமேல் = இப்பூமியின் மேல் இருக்கும்,

நிருபர்களும் = அரசர்களும்,

ஆர்க்கும் = யாரும் (உடலில் உள்ள எந்த ஜீவனும்)

பிறந்து இறப்பது = பிறப்பதும் இறப்பதுவும்,

இலை = இல்லை,

என்றவரோ = என்று கூறியருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை :

மெய்பொருளைப் பற்றிய அறிவினால் ஆராய்ந்து பார்க்குமிடத்து, நீயும் நானும் இப்பூமியின் மேல் இருக்கும், அரசர்களும் யாரும் (உடலில் உள்ள எந்த ஜீவனும்) பிறப்பதும் இறப்பதுவும் இல்லை என்று கூறியருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை:

ஆத்மாவுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, இங்கு அனைத்தும் அழிவற்ற ஆத்ம சொரூபம். 


பாடல் 7 : பிறவி யாருக்கு?

ஈங்கெவர்க்கும் பிறந்திறப்ப தில்லையென்றீர் இவ்வுலகில்,

நீங்குபவம் யாருக்கிதனை நிச்சயமாகச் சொல்லுமென.


பொருள் :

ஈங்கு = இப்பூமியில் 

எவர்க்கும் = எந்த ஜீவனுக்கும்,

பிறந்து இறப்பது = பிறப்பும், இறப்பும்,

இல்லை என்றீர் = இல்லை என்று சொன்னீர்கள்,

இவ்வுலகில் = (அப்படியெனில்) இப்பூவுலகில்,

பவம் = பிறப்பும்,

நீங்கு = இறப்பும்,

யாருக்கு = எவருக்கு ?

இதனை = இதன் உண்மையினை

நிச்சயமாக = உறுதியாகச்

சொல்லுமென = சொல்லுங்கள் என்று (அர்ஜுனன் மகவானிடம்) கேட்க,


பொழிப்புரை :

இப்பூமியில் எந்த ஜீவனுக்கும் பிறப்பும், இறப்பும் இல்லை என்று சொன்னீர்கள், (அப்படியெனில்) இப்பூவுலகில், பிறப்பும் இறப்பும் எவருக்கு? இதன் உண்மையினை உறுதியாகச் சொல்லுங்கள் என்று (அர்ஜுனன் மகவானிடம்) கேட்க.


கருத்துரை :

இந்த உலகத்தில் பிறக்காமலும் இறக்காமலும் இருப்பது எது ? பிறப்பதும் இறப்பதும் எது? என்பவை அர்ஜுனனின் வினாக்கள் ஆகும்.


பாடல் 8 : என்றுமுள்ள ஆத்மா நீ

இத்தரையில் பிறந்திறப்பது எடுத்தவுடற் கடுத்தபொறி,

நித்தியமாகிய ஆன்மா நின்சொரூபம் என்றவரோ!


பொருள் :

இத்தரையில் = இந்த உலகில்,

பிறந்து இறப்பது = பிறப்பதும், இறப்பதும்,

எடுத்த உடல் = முன் வினைப்பயனுக்கு ஏற்ப சூக்ஷும உடலுக்குக்,

கடுத்தபொறி = கிடைத்த தூல உடலாகும்,

நித்தியமாகிய ஆன்மா = (பிறப்பு இறப்பு இல்லாமல்) முக்காலத்திலும் இருப்பதாகிய ஆத்மா,

நின்சொரூபம் = உன்னுடைய (யதார்த்த) ஸ்வரூபம் ஆகும்,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : 

இந்த உலகில் பிறப்பதும், இறப்பதும் முன் வினைப்பயனுக்கு ஏற்ப சூக்ஷும உடலுக்குக், கிடைத்த தூல உடலாகும். (பிறப்பு இறப்பு இல்லாமல்) முக்காலத்திலும் இருப்பதாகிய ஆத்மா, உன்னுடைய (யதார்த்த) ஸ்வரூபம் ஆகும், என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை:

சூக்ஷ்ம உடலோடு கூடிய ஜீவன், தன் புண்ணிய பாபத்தை அனுபவிப்பதற்காக ஸ்தூல உடலை எடுக்கின்றான். அத்தூல உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும்; இரு உடல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மாவே மெய்ப்பொருள். ஆத்மா மேல் கற்பிக்கப்பட்ட தாற்காலிகமான தோற்றமே உடல், தங்கத்தின் மேல் நகைகள் போல. பிறப்பு இறப்பு இல்லாத நித்தியமான ஆத்மாவே நமது யதார்த்த சொரூபம்.


பாடல் 9 : நான் யார்?

அங்கமுயிர் இந்தி(ரி)யநான் அன்றிவே றெனைக்காணேன்,

இங்குயான் வேறுண்டேல் எனக்கறியப் புகலுமென.


பொருள்:

நான் = நான் (எனும் சொல்லின் பொருளான எனது ஸ்வரூபம்)

அங்கம் = தூல உடலும்,

உயிர் = (பஞ்ச) பிராணனும்,

இந்தி(ரி)யம் = (பத்துப்) பொறிகளும்,

அன்றி = இல்லாமல்,

வேறு எனைக் காணேன் = (இவற்றிற்கு) வேறாக "ஆத்மா" எனும் நானைப் பார்க்கவில்லை,

இங்கு யான் வேறு உண்டேல் = இவ்வுடலில் நானெனும் ஆத்மா வேறு இருக்குமானால்,

எனக்கு அறிய = அடியேன் அறிந்து கொள்ளும்படி,

புகலும் என = உபதேசித்தருள வேண்டுமென (அர்ஜுனன்) கேட்டுக்கொள்ள,


பொழிப்புரை :

உடல், பிராணன், ஞான, கர்ம கருவிகள் இவையே நான் என்பதன்றி, வேறு 'நானைக்' காணவில்லை. இவ்வுடல் (முதலானவற்றை விட) வேறான 'நான்' உண்டு என்றால், அதனை இங்கு நான் அறியும்படி விளக்க வேண்டும் என்று (அர்ஜுனன்) கேட்க..


பொறிகள் = கருவிகள்.

அறிவுப் பொறிகள் (5)= மெய், வாய், கண், மூக்கு, செவி.

செயல் பொறிகள் (5) = கைகள், கால்கள், வாய், மல, ஜல உறுப்புகள். 


பாடல் 10 : அறிபவனே நீ!

மெய்யுயிரிந் தியங்களல்லால் வேறறியேன் என்றவனைப்,

பையஅவை யால்அறியப் படானும்நீ என்றவரோ!


பொருள் :

மெய் = தூல உடல்,

உயிர் = (பஞ்ச) பிராணன்,

இந்தி(ரி)யங்கள் = (பத்து) இந்திரியங்கள்,

அல்லால் = (இவையே நானாக அறிகிறேனே) அல்லாமல்,

வேறு அறியேன் = (நானாக) வேறு எதையும் நான் அறியவில்லை,

என்றவனை = என்று சொன்ன அர்ஜுனனைப் பார்த்து,

பைய = குழந்தாய்,

அவையால் = அவற்றால்,

அறியப்படானும் நீ = (அவற்றை அறிபவனும்) அவற்றால் அறியப்படாதவனும் நீ ஆவாய்,

என்றவரோ = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

தூல உடல், (பஞ்ச) பிராணன், (பத்து) இந்திரியங்கள் (இவையே நானாக அறிகிறேனே) அல்லாமல், (நானாக) வேறு எதையும் நான் அறியவில்லை, என்று சொன்ன அர்ஜுனனைப் பார்த்து குழந்தாய் அவற்றால் (அவற்றை அறிபவனும்) அவற்றால் அறியப்படாதவனும் நீ ஆவாய் என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை :

எந்த அறிவைக்கொண்டு உடல், மனம், பிராணன் இவற்றை நீ அறிகின்றாயோ அந்த அறிவே நீ. கண் முதலான கருவிகளால் ஒருபொழுதும் புறப்பொருளாக அறியப்பட முடியாதது அது. அப்படி எந்த ஒரு - அறிவு - சைதன்யம் - உயிர் - ஆத்மா - உடலிற்கு வேறாக இருக்கின்றதோ அதுவே உனது (நமது) உண்மையான நான். உடலுக்கு ஆதாரமாக இருப்பது அது. எது இருப்பதனால் உடல் இருக்கின்றதோ எது இல்லையென்றால் உடல் இருக்காதோ, அதுவே ஆத்மா. அதுவே உண்மையில் நான் என்று கருதப்பட வேண்டியது, அறியப்பட வேண்டியது. அது உடலிற்கு வேறான தனித்த சொந்தமான இருப்புடையது. அறிவே வடிவமானது அது.


பாடல் 11 : பிறப்பு எதனால்?

தேகம்வே றாகிலதைச் சேர்ந்ததிவண் ஏதெனவே,

சோகமே விளைகருமத் தொடர்ச்சியினால் என்றவரோ!


பொருள் :

தேகம் வேறாகில் = உடல் முதலானவை எனக்கு வேறானவை என்றால்,

அதைச் சேர்ந்தது = அவ்வுடலை அடைந்தது,

இவண் = இவ்விடத்து,

ஏது எனவே = எப்படி என்று அர்ஜுனன் கேட்க,

சோகமே விளை = துன்பத்தையே உண்டாக்குகின்ற,

கருமத் தொடர்ச்சியினால் = முந்திய புண்ய பாப வினைகளின் விளைவால், 

என்றவரோ! = என்றருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை :

உடல் முதலானவை எனக்கு வேறானவை என்றால் அவ்வுடலை அடைந்தது இவ்விடத்து எப்படி என்று அர்ஜுனன் கேட்க, துன்பத்தையே உண்டாக்குகின்ற முந்திய புண்ய பாப வினைகளின் விளைவால் என்றருளிய பகவான் நீர் தானோ!


கருத்துரை :

வினைப்பயனே பிறவிக்குக் காரணம்.


பாடல் 12 : முதல் வினைப்பயன் எப்படி?

தேகம்எடா முன்கருமச் செயல்வருமா றேதெனவே,

ஏகமா மரமும்வித்து மெனும்முறைபோ லென்றவரோ!


தேகம்எடா = உடல் எடுப்பதற்கு,

முன் கருமச் செயல் = முன்னர் (உடல் தோன்றுவதற்குக் காரணமாகும். புண்ணிய பாபங்களை விளைவிக்கும்) கர்மமாகிய செயல், 

வருமாறு ஏதெனவே = வரும் வழி எது? என்று அர்ஜூனன் கேட்க,

மரமும் வித்தும் = (விதை எனும் காரியம் தோன்றுவதற்குக் காரணமான) மரமும், (மரம் எனும் காரியம் தோன்றுவதற்குக் காரணமான விதையும்) 

எனும் ஏகமா(ம்) முறைபோல் = (நிமித்தம்) என்று சொல்லப்படுகின்ற இப்படி பின் பின்னுள்ள காரியங்கள் க்கு முன் முன்னுள்ள காரணங்களாக மாறுதலின்றித் தொடர்ந்து எல்லையற்றுச் செல்கிற) ஒரே தன்மைத்தான கிரமம் (பீஜ அங்குர நியாயம்) போல,

என்றவரோ! = (உடலுக்கு முன் வினையும் முன் வினைக்கு உடலும் என முடிவின்றித் தொடர்ந்து செல்லும் ஆதி தெரியாத - அநாதி - முறை) என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

உடல் எடுப்பதற்கு முன்னர் (உடல் தோன்றுவதற்குக் காரணமாகும். புண்ணிய பாபங்களை விளைவிக்கும்) கர்மமாகிய செயல், வரும் வழி எது? என்று அர்ஜூனன் கேட்க, (விதை எனும் காரியம் தோன்றுவதற்குக் காரணமான) மரமும், (மரம் எனும் காரியம் தோன்றுவதற்குக் காரணமான விதையும்) (நிமித்தம்) என்று சொல்லப்படுகின்ற இப்படி பின் பின்னுள்ள காரியங்கள் க்கு முன் முன்னுள்ள காரணங்களாக மாறுதலின்றித் தொடர்ந்து எல்லையற்றுச் செல்கிற) ஒரே தன்மைத்தான கிரமம் (பீஜ அங்குர நியாயம்) போல, (உடலுக்கு முன் வினையும் முன் வினைக்கு உடலும் என முடிவின்றித் தொடர்ந்து செல்லும் ஆதி தெரியாத - அநாதி - முறை) என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : உடல் எடுப்பதற்குமுன் முதல் வினைப்பயன் எப்படி வந்தது? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகிய மரமும் விதையும் எனும் முறை போல இது முதலும் முடிவுமின்றி தொடரும் வட்டச்சுழற்சி. ஜீவன் அநாதி என்பது முடிவு.


பாடல் 13 : கர்மம் யார் செய்வது?

காயமுந்தா னும்பிரிதேல் கன்மமெவர் செய்ததெனத்,

தீயஉடற் கலதுகன்மச் செயல்தனக்கே தென்றவரோ!


பொருள் :

காயமும் தானும் பிரிதேல் = உடலும் ஆத்மாவும் வெவ்வேறானால்,

கன்மம் எவர் செய்தது என = கர்மம் யார் செய்தது என்று அர்ஜுனன் வினவ,

கன்மச் செயல் = புண்ணிய பாபங்களைத் தரும் நல்வினை, தீவினைகளாகிய செயல்,

தீய உடற்கு அலது = குற்றமுள்ள உடலுக்கு அல்லாமல்,

தனக்கு ஏது = ஆத்மாவாகிய தனக்கு எப்படி (வரும்) ? (வராது என்பது பொருள்)

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை :

உடலும் ஆத்மாவும் வெவ்வேறானால் கர்மம் யார் செய்தது என்று அர்ஜுனன் வினவ புண்ணிய பாபங்களைத் தரும் நல்வினை, தீவினைகளாகிய செயல் குற்றமுள்ள உடலுக்கு அல்லாமல் ஆத்மாவாகிய தனக்கு எப்படி (வரும்) ? (வராது என்பது பொருள்) என்று அருளிய பகவான் நீர் தானோ!


கருத்துரை :

உடலும் ஆத்மாவும் வேறுவேறானால் கர்மம் யார் செய்ததென அர்ஜுனன் கேட்க, கர்மச்செயல் கொடிய தேகத்திற்கே அல்லாமல் தனக்கு (ஆத்மாவுக்கு) ஏது? (இல்லை) என்றருளியவர் நீர்தானோ!


பாடல் 14 : கர்மபலனை அனுபவிப்பது யார்?

படர்கருமம் உடல்செய்யில் பலமுறுவ தார்க்கெனவே,

அடர்பலமும் உடற்கேயாம் அறிவார்க்கே தென்றவரோ!


பொருள் :

படர்கருமம் உடல் செய்யில் = விரிந்திருக்கின்ற கர்மங்களை உடல்தான் செய்தது என்றால்,

பலம் உறுவது ஆர்க்கு = அவற்றின் புண்யபாப பலன்களை அடைதல் யாருக்கு உரியது,

எனவே = என அர்ஜுனன் கேட்க,

அடர்பலமும் உடற்கேயாம் = நெருங்கிய புண்ய பாப பலன்களும் உடலுக்கே ஆகும்,

அறிவார்க்கு ஏது = (சாட்சியாக இருந்து) அறியும் ஆத்மாவுக்கு இல்லை, 

என்றவரோ = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

பற்பல விதமாக விரிந்து இருக்கின்ற கர்மங்களை உடல் செய்யுமானால் கர்மங்களின் பயன் - புண்ணிய பாவங்கள் - வந்து சேர்வது யார்க்கென அர்ஜுனன் வினவ, இடைவெளியில்லாமல் மாறிமாறி வருகின்ற பலன்களும் உடலுக்கே ஆகும், அதை அறிபவர்க்கு ஏது? (சாட்சியாயிருக்கு ஆத்மாவுக்கு இல்லை) என்று அருளியவர் நீர்தானோ!


கருத்துரை :

தூல உடம்பையே நானென்று அபிமானம் கொள்கின்ற ஸூக்ஷ்ம உடலிலிருக்கின்ற அகங்காரமாகிய ஜீவனே, கர்மங்களைச் செய்கிறான். பிறகு கர்மபலனை அனுபவிப்பவனும் அவனே. ஆத்மா இரண்டிற்கும் சாட்சியாக இருக்கின்றது.


பாடல் 15 : சொர்க்கநரகம் அனுபவம் யாருக்கு?

வெய்யவினை உடற்கென்றால் மெய்யிங்கே விழவான்மா,

ஐயமற நரகசொர்க்கம் அனுபவிப்ப தேதெனவே.


பொருள்:

வெய்ய வினை உடற்கென்றால் = கொடிய வினைப் பயன்கள் உடலுக்கே (உரிமையுடையன) என்றால்,

மெய் இங்கே விழ = தூல உடலானது இவ்வுலகிலேயே பிணமாகி விழுந்து விட,

ஆன்மா ஐயம் அற = எஞ்சி நிற்கும் ஆன்மாவானது ஸந்தேஹம் இல்லாமல்,

நரகசொர்க்கம் = பாப பலனாக நரகலோகத்தில் துன்பத்தையும், புண்யப் பலனாக ஸ்வர்க்க லோகத்தில் இன்பத்தையும்

அனுபவிப்பது ஏது எனவே = (சென்று) அனுபவிப்பது எப்படி ? என்று அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை :

கொடியவினைப் பயன்கள் உடலுக்கே (உரிமையுடையன) என்றால் தூல உடலானது இவ்வுலகிலேயே பிணமாகி விழுந்து விட எஞ்சி நிற்கும் ஆன்மாவானது ஸந்தேஹம் இல்லாமல் பாப பலனாக நரகலோகத்தில் துன்பத்தையும், புண்யப் பலனாக ஸ்வர்க்க லோகத்தில் இன்பத்தையும் (சென்று) அனுபவிப்பது எப்படி ? என்று அர்ஜுனன் கேட்க..


கருத்துரை : கர்மங்களைச் செய்வதும் அதன் பலனை அனுபவிப்பதும் உடல் தான் என்றால், உடலானது மரண காலத்தில் இப்பூமியிலேயே விழுந்துவிட, எஞ்சி நிற்கும் ஆத்மாவானது நரக, சொர்க்க உலகங்களுக்குச் சென்று புண்ய, பாப பலன்களை அனுபவிப்பது எப்படி? என்பது அர்ஜுனனின் கேள்வி. 

 

பாடல் 16 : அனுபவிப்பது உண்மை இல்லை

அனுபவமே இலையதுவீண் ஆரோபித நிகழ்த்தில்,

தனுகரணச் செயல்தனதாய்ச் சார்வதுபோல் என்றவரோ!


பொருள் :

அது = ஆன்மா சொர்க்க நரகங்களை அனுபவிக்கிறது எனும் அதை,

நிகழ்த்தில் = ஆராய்ந்து சொல்லுமிடத்து,

அனுபவமே இலை = (உண்மையில் ஆன்மாவிற்கு) அனுபவமே இல்லை,

தனு கரணச் செயல் = உடலின் புலன்களின் மனதின் செயல்களை,

தனதாய்ச் சார்வதுபோல் = சாட்சியான ஆத்மாவினுடையதாக (அறியாமையினால்) வைத்துக் காண்பது போல,

வீண் ஆரோபிதம் = வீணான கற்பிதமாகும்

என்றவரோ! = என்று அருளிய பதவான் நீர் தானோ!


பொழிப்புரை : 

ஆன்மாவிற்கு சொர்க்க நரகங்களில் அனுபவமே இல்லை. அவ்வாறு இருப்பதாக நினைப்பது பற்றிக் கூறினால், உடல் மற்றும் கை முதலான கருவிகளின் செய்கைகளைத் தன்னுடைய - ஆத்மாவுடைய - செயலாகக் கருதுவது போலத், தவறான கற்பிதமாகும் என்று அருளியவர் நீர்தானோ!


கருத்துரை: 

ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூக்ஷ்ம உடலே சொர்க்க, நரகங்களை அனுபவிக்கின்றது. ஆத்மா எங்கும் வியாபித்து ஆகாயம் போல் இருப்பது. ஆத்மா தூல, சூக்கும உடல்களுக்கு ஆதாரமாக இருப்பது, இரண்டிற்கும் வேறாக, இருப்பது. ஆத்மாவின் மேல் மாயையினால் உடல்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. கற்பிதமான உடலையே தான் என்றும் அவற்றின் செயல்களை தன்னுடையது என்றும் நினைக்கின்ற ஜீவன், சொர்க்கம் முதலானவைகளையும் "நானே அனுபவிக்கின்றேன்" என்று கருதுகிறான். இது அறியாமை அன்றி உண்மை இல்லை.


பாடல் 17 : உடலை நானென நினைப்பதேன் ?

மற்றுடலின் செய்கைதன்மேல் வருமயக்கம் ஏதெனவே,

முற்றுணர்வொன் றில்லாத மோகமென்று சொன்னவரோ!


பொருள் :

மற்று உடலின் செய்கை = தனக்கு வேறான தூல சூக்ஷ்ம உடல்களின் செயல்கள், 

தன்மேல் வருமயக்கம் = ஆத்மாவாகிய தன்மேல் கற்பிதமாக வருகின்ற மோகம்,

ஏது எனவே = எதனால் என்று (அர்ஜுனன் கேட்க),

முற்று உணர்வு ஒன்று(தல்) இல்லாத = பூர்ணமான ஆத்மாவைப் பற்றி விவேகம் அடையப்படாத,

மோகம் என்று = அறியாமையாகிய மயக்கத்தினால், என்று சொன்னவரோ! = என்று கூறியருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை: 

ஆத்மாவிற்கு வேறாயுள்ள உடம்பினது செயல்கள் ஆத்மாவாகிய தன்னிடத்தில் வரும் மயக்கத்திற்கு காரணம் என்னவென்று அர்ஜுனன் கேட்க, பூரண ஆத்மஞானம் இல்லாத அஜ்ஞானமே காரணமென்று கூறியருளிய பகவான் நீர்தானோ!


பாடல் 18 : அறிவு யாருக்கு?

அறிவுதே கம்தனக்கோ ஆன்மாவிற் கோவெனவே,

பிரிவுசெயில் அசித்துடலம் பிரம்மவறி வென்றவரோ!


பொருள் :

அறிவு தேகம் தனக்கோ = பூரண ஞானம் உடலுக்கா,

ஆன்மாவிற்கோ எனவே = ஆத்மாவிற்கா என அர்ஜுனன் வினவ,

பிரிவு செயில் = (குரு சாஸ்த்ர உதவியுடன்) உடளன் சொரூபத்தையும் ஆத்மாவின் சொரூபத்தையும் பிரித்துப் பார்த்தால்,

உடலம் அசித்து = உடல் ஜடமானது,

பிரம்மம் = பிரஹ்மமாகிய ஆத்மா

அறிவு = அறிவு ஸ்வரூமானது,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை :

அறியும் தன்மை உடலுக்கு உள்ளதா? ஆத்மாவுக்கு உள்ளதா? என அர்ஜுனன் கேட்க, உடம்பையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, உடம்பு ஜடம் என்றும், பிரம்மம் (ஆத்மா) அறிவு வடிவம் என்றும் அருளியவர் நீர்தானோ!


பாடல் 19 : ஜடமான உடல் செயல்படுவது எப்படி ?

தேகமசித் தாகிலிந்தச் செயல்வருவ தேதெனவே, 

ஏகபரஞ் சோதியின்முன் இருக்கையினா லென்றவரோ!


பொருள் :

தேகம் அசித்தாகில் = உடல் ஜடமானால்,

இந்தச் செயல் வருவது ஏது = (உடலுக்கு) இயக்கம் முதலான செயல்கள் வருவது எப்படி?

எனவே = என்று அர்ஜுனன் கேட்க,

ஏக பரஞ்சோதியின் முன் = ஒன்றேயான ஆத்மவெனும் ஸ்வயம்பிரகாசமான சித்தின் முன்னிலையில்,

இருக்கையினால் = உடல் இருப்பதனால்,

என்றவரோ! = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

ஜடமான உடலுக்கு இயக்கம் முதலான செயல்கள் வருவது எப்படி? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றேயான ஆத்மவெனும் ஸ்வயம்பிரகாசமான சித்தின் முன்னிலையில் உடல் இருப்பதனால் என்றருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : 

உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது ஆகவே ஜடமானது, ஆத்மா ஸ்வயம் சைதன்யமானது. ஆத்மாவினுடைய முன்னிலையில் உடலானது இருப்பையும் இயக்கத்தையும் பெறுகின்றது.


பாடல் 20 : அதெப்படி எனில்...

இருக்கினும் அசேதனத்திற்கு இச்செயல் உண்டோ எனவே,

உருக்குப்படா காந்தம் முன்னில் ஊசிநிகர் என்றவரோ!


இருக்கினும் = சேதனமான ஆத்மா முன்னிலையில் இருந்தாலும்,

அசேதனத்திற்கு இச்செயல் உண்டோ = ஜடமான உடலுக்கு நடத்தல், காணுதல் போன்ற செயல்கள் இருக்கிறதா?, எனவே = என்று அர்ஜுனன் வினவ,

உருக்குப்படா காந்தம் முன்னில் = உருக்கப்படாத காந்தத்தின் முன்னிலையில்,

ஊசி நிகர் = ஜடமான இரும்பு ஊசிக்கு அசைவு முதலான செயல்கள் உண்டாவது போல,

(ஆத்ம முன்னிலையில் உடலிற்கு வளர்தல், பார்த்தல் முதலான செயல்கள் உண்டாகின்றன)

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

சேதனமான ஆத்மா முன்னிலையில் இருந்தாலும் ஜடமான உடலுக்கு நடத்தல், காணுதல் போன்ற செயல்கள் இருக்கிறதா? என்று அர்ஜுனன் வினவ, உருக்கப்படாத காந்தத்தின் முன்னிலையில் ஜடமான இரும்பு ஊசிக்கு அசைவு முதலான செயல்கள் உண்டாவது போல, ஆத்ம முன்னிலையில் உடலிற்கு வளர்தல், பார்த்தல் முதலான செயல்கள் உண்டாகின்றன, என்று அருளிய பகவான் நீர் தானோ!


கருத்துரை :

சேதனத்தின் முன்னிலையில் இருப்பதாலேயே ஜடமான உடம்பிற்கு செய்கை எப்படி ஏற்படும்? என்று அர்ஜுனன் கேட்க, நெருப்பினால் உருக்கப்படாத காந்தத்தின் முன்னிலையில் ஊசியானது அசைவது போலும் ஆத்ம சைதந்யத்தின் பிரதிபிம்பத்தின் ஸம்பந்தத்தினால் ஸூக்ஷ சரீரம் இயக்கம் பெற்று, ஸ்தூல சரீரத்தை இயக்குகிறது. இதை சூசிகாந்த நியாயம் என்பர். சூசி = ஊசி. காந்தமும் ஆத்மாவும் செயலற்று (நிஷ்கிரியம்) இருக்கின்றன. அவற்றின் ஸந்நிதியில் ஊசியும் உடலும் செயலுற்று (ஸகிரியம்) இருக்கின்றன என்பது விவேகம்.


பாடல் 21 : சுகதுக்கம் யாருக்கு?

சொன்னசெயல் உடற்கானால் சுகதுக்கம் யார்க்கெனவே,

அன்னசுக துக்கமுந்தான் அவ்வுடற்கே என்றவரோ!


பொருள் :

சொன்ன செயல் உடற்கானால் = முற்கூறியபடி செயல்கள் உடலுக்கு என்றால்,

சுக துக்கம் யார்க்கு = (அவற்றால் உண்டாகும் பயன்களான) இன்பமும் துன்பமும் யாருக்கு.

எனவே = என்று கேட்பாயாகில்,

அன்ன சுக துக்கமுந்தான் = அத்தகைய இன்பமும் துன்பமும்,

அவ்வுடற்கே என்றவரோ! = அந்த உடலுக்கே என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

முற்கூறியபடி செயல்கள் உடலுக்கு என்றால் (அவற்றால் உண்டாகும் பயன்களான) இன்பமும் துன்பமும் யாருக்கு என்று கேட்பாயாகில், அத்தகைய இன்பமும் துன்பமும் அந்த உடலுக்கே என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை :

ஆத்மா நித்யமுக்த ஸ்வரூபமானது. ஆத்மாவின் ஸந்நிதியில் தாற்காலிகமாக சேதனத் தன்மையைப் பெறும் சரீரமே இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது. ஏற்கனவே 'படர்கருமம்' எனத் தொடங்கும் 14ம் பாடலில் தூல சரீரத்தைக் குறித்து இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. இங்கு ஸூக்ஷ்ம சரீரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.


பாடல் 22 : ஜடமான உடலுக்கு எப்படி?

சேதனமாம் ஆந்மாவைச் சேராத துக்கசுகம்,

ஓதுசடமாம் உடலை உற்றிடுமோ சொல்லுமென..


பொருள் :

சேதனமாம் ஆந்மாவை = ஞானஸ்வரூபமான ஆத்மாவை,

சேராத துக்க சுகம் = அடையாத துன்பமும் இன்பமும்,

ஓது சடமாம் உடலை = முன் சொல்லியபடி ஜடமான உடலை,

உற்றிடுமோ சொல்லுமென = எப்படிப் பொருந்தும்? எனச் சொல்ல வேண்டுமென அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை :

ஞானஸ்வரூபமான ஆத்மாவை அடையாத துன்பமும் இன்பமும் முன் சொல்லியபடி ஜடமான உடலை எப்படிப் பொருந்தும்? எனச் சொல்ல வேண்டுமென அர்ஜுனன் கேட்க,


கருத்துரை : 

சேதனமான ஆத்மாவுக்கு சுகதுக்கங்கள் இல்லையென்றால், ஜடமான உடல் எப்படி இன்பதுன்பங்களை உணரும்? என்பது அர்ஜுனனின் கேள்வி.


பாடல் 23 : இன்பதுன்பம் மனதுக்கு 

பூதம்ஐந்தோ டைந்துயிர்கள் புலன்கள்பத்து மனம்முதல்நான்கு,

ஈதிருமெய் இதில்மனத்துக் கின்பதுன்பம் என்றவரோ!


பொருள் :

பூதம்ஐந்தோடு = ஆகாய முதல் ஐந்து பூதங்களும், 

ஐந்து உயிர்கள் = பிராணன் முதலான ஐந்து வாயுக்களும், 

பத்து புலன்கள் = ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்களான புலன்கள் பத்தும்,

மனம் முதல் நான்கு = மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகக்கரணங்கள் நான்கும், 

ஈது இரு மெய் = (என 24 தத்துவங்கள் ஆகிய) இவை இரண்டு சரீரங்கள் ஆகும். 

இதில் மனத்துக்கு இன்ப துன்பம் = இவற்றுள் மனதிற்கே இன்பதுன்பங்கள் பொருந்தும் 

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

ஆகாய முதல் ஐந்து பூதங்களும் (தூல சரீரம்), பிராணன் முதலான ஐந்து வாயுக்களும், ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்களான புலன்கள் பத்தும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகக்கரணங்கள் நான்கும் (ஸூஹ்மசரீரம்), (என 24 தத்துவங்கள் ஆகிய) இவை இரண்டு சரீரங்கள் ஆகும். இவற்றுள் மனதிற்கே இன்பதுன்பங்கள் பொருந்தும் என்று அருளிய பகவான் நீர்தானோ!


பாடல் 24 : இருவுடல்களுக்கும் காரணம் எது?

இந்தஇரு வகைத்தனுவிற் கேதுவேது எனவினவ,

முந்தையகா ரணமதனால் மூன்றுதனு என்றவரோ!


பொருள் :

இந்த இருவகைத் தனுவிற்கு = இப்பொழுது கூறிய இரண்டு வகையான உடல்களுக்கும்,

ஏது ஏது என வினவ = காரணம் (ஹேது) எது ? என்று அர்ஜுனன் கேட்க,

முந்தைய காரணம் = (இவ்விரண்டு உடல்களுக்கும்) முதன்மையாய் உள்ள காரணம் அஜ்ஞானம் ஆகும்.

அதனால் மூன்று தனு = அதனால் (அந்தக் காரண உடல் ஒன்று இருத்தலால்) மூன்று உடல்கள்,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை : இப்பொழுது கூறிய இரண்டு வகையான உடல்களுக்கும் காரணம் எது என்று அர்ஜுனன் கேட்க, இவ்விரண்டு உடல்களுக்கும் முதன்மையாய் உள்ள காரணம் அஜ்ஞானம் ஆகும். அதனால் (அந்தக் காரண சரீரம் ஒன்று இருத்தலால்) மூன்று சரீரங்கள் என்றவரோ!

கருத்துரை : பூதங்கள் ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து தோன்றியது ஸ்தூல சரீரம்(பருவுடல்), கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, பிராணன் 5, அகக்கரணங்கள் 4, ஆக 19 தத்துவங்கள் சேர்ந்தது சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்). அவித்யா காரணசரீரம். இம்மூன்றும் சேர்ந்ததே ஜீவசரீரம். இவற்றுள் மனத்தில் ஆத்மசைதந்யம் பிரதிபிம்பிக்க ஜடமான உடல்கள் சேதனத் தன்மையைப் பெறுகின்றன.


பாடல் 25 : மனமும் ஜடம் அல்லவா ?

மனமறியும் துக்கசுக வரவென்றீர் அம்மனமும்,

வினவில சேதனமலவோ விரித்தெனக்கு விளம்புமென.


பொருள் :

துக்க சுக வரவு = துன்ப இன்பங்களின் வருதலை,

மனம் அறியும் என்றீர் = மனம் அறிகிறது என்று சொன்னீர், 

அம்மனமும் = அந்த மனமும், 

வினவில் = ஆராய்ந்து பார்க்குமிடத்து (மற்ற தத்துவங்கள் போல), 

அசேதனம் அலவோ = ஜடமானது அல்லவா! 

எனக்கு விரித்து விளம்பும் என = எனக்கு (ஜடமான மனம் இன்ப துன்பங்களை உணரும் விதத்தை) விளக்கமாக அருளுங்கள் என்று அர்ஜுனன் கேட்க.


பொழிப்புரை : வரும் இன்பத் துன்பங்களை மனம் அறிகிறது என்று சொன்னீர், அந்த மனமும் ஆராய்ந்து பார்க்குமிடத்து (மற்ற தத்துவங்கள் போல) ஜடமானது அல்லவா! (ஜடமான மனம் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் விதத்தை) எனக்கு விளக்கமாக அருளுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

கருத்துரை : மனம் ஸூக்ஷ்ம பஞ்சபூதங்களின் ஸமஷ்டிஸத்துவ குணத்திலிருந்து தோன்றியது. பஞ்சபூதகாரியமானதால் மனமும் ஜடமானதே. ஜடமான ஒன்று எவ்வாறு இன்ப துன்பங்களை அறியும் ? என்பது அர்ஜுனனின் கேள்வி.


பாடல் 26 : ஆன்ம ஸம்பந்தத்தினால்

அம்மனத்தி லான்மா அபேதம்போல் தோன்றுதலால்,

விம்முதுக்க சுகத்தைமன மேவுமென்று சொன்னவரோ!


பொருள் :

அம்மனத்தில் ஆன்மா = (ஜடமான) அம்மனத்தில் ஆத்மாவானது, 

அபேதம்போல் தோன்றுதலால் = (பிரதிபலித்து) வேறுபாடு இல்லாதது போலத் தோன்றுவதால், 

விம்மு துக்க சுகத்தை மனம் = மிகுந்த துன்ப இன்பங்களை மனமானது,

மேவுமென்று சொன்னவரோ! = அடைகின்றது 

என்று சொன்ன பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : (ஜடமான) அம்மனத்தில் ஆத்மாவானது (பிரதிபலித்து) வேறுபாடு இல்லாதது போலத் தோன்றுவதால், மிகுந்த துன்ப இன்பங்களை மனமானது அடைகின்றது என்று சொன்ன பகவான் நீர்தானோ!

கருத்துரை : ஜடமான மனம் ஆத்மாவின் சம்பந்தத்தினால் சேதனத் தன்மையை பெறுகின்றது. தான் அடைந்த சேதனத்துவத்தை உடலுக்குக் கொடுப்பதோடு, உடம்பின் மேல் அபிமானம் கொண்டு, உடம்பையே தான் என்று கருதுவதால், உடம்பின் சுகதுக்கங்களையும் தன்னுடையதாகக் கருதுகின்றது. கண்ணாடியில் ஏற்படுகின்ற பிரதிபிம்பம் அந்த கண்ணாடியைத் தானாகக் கருதி, கண்ணாடியின் நன்மை தீமைகளை தன்னுடையதாகக் கருதுவதுபோன்றது இது. (அந்த பிரதிபிம்பத்திற்குக் காரணமான நிஜமுகம் கண்ணாடிக்கு வெளியே கண்ணாடிக்கு வேறாக இருக்கின்றது. கண்ணாடியில் ஏற்படும் அழுக்குகள் நிஜ முகத்தை ஒருபொழுதும் பாதிப்பது இல்லை என்பதே விவேகம். இது பின்னர் விவரிக்கப்படும்.)


பாடல் 27 : ஆத்மா துக்கப்படுவது ஏன்?

அந்தமனோ துக்கசுகம் அதனிடத்து நில்லாமல்,

வந்திலங்கும் ஆன்மாவை மருவியதென் சொல்லுமென.


பொருள் :

அந்த மனோ துக்க சுகம் = மனதிற்குரிய அந்த இன்பதுன்பங்கள்,

அதனிடத்து நில்லாமல் = அந்த மனத்தினிடத்திலேயே நின்றுவிடாமல்,

இலங்கும் ஆன்மாவை = அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை,

வந்து மருவியது என் = வந்து சேர்ந்தது எப்படி ?

சொல்லுமென = என்று சொல்லும் என பகவானை அர்ஜுனன் கேட்க.


பொழிப்புரை : மனதிற்குரிய அந்த இன்பதுன்பங்கள் அந்த மனத்தினிடத்திலேயே நின்றுவிடாமல் அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை வந்து சேர்ந்தது எப்படி ?, என்று சொல்லும் என பகவானை அர்ஜுனன் கேட்க.

கருத்துரை : இன்பதுன்பங்கள் அந்தக்கரணத்திலேயே இருந்து விடாமல், அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை வந்து சேர்ந்தது எப்படி ?


பாடல் 28 : அபிமானத்தினால்

வெய்யகன லின்சூடு மேல்வைத்த சட்டியினூடு,

உய்யபுன லூடுவந்தங் கொன்றுதல்போல் என்றவரோ!


பொருள் : 

வெய்ய கனலின் சூடு = கொடிய நெருப்பினிடத்துள்ள வெப்பமானது, 

மேல்வைத்த சட்டியினூடு = மேலே வைத்துள்ள சட்டியின் வழியே,

உய்யப் புனலூடு = அதில் ஊற்றி வைத்துள்ள நீரினிடத்தில்,

வந்தங்கு ஒன்றுதல் போல = வந்து சேர்வதைப் போல, (மனத்திலுள்ள இன்ப துன்பங்கள் அம்மனத்தோடுள்ள ஆத்மாவை பொருந்தியது) 

என்றவரோ! = என்றவரோ!


பொழிப்புரை : கொடிய நெருப்பினிடத்துள்ள வெப்பமானது மேலே வைத்துள்ள சட்டியின் வழியே அதில் ஊற்றி வைத்துள்ள நீரினிடத்தில் வந்து சேர்வதைப் போல, (மனத்திலுள்ள இன்ப துன்பங்கள் அம்மனத்தோடுள்ள ஆத்மாவை பொருந்தியது) என்றவரோ!

கருத்துரை : ஆத்மா உண்மையில் மனத்தோடு சம்பந்தப்படுவதில்லை. அறியாமையால் மனத்தின் தர்மங்கள் ஆத்மா மேல் ஏற்றிக் அறியப்படுகின்றன. துர்ஜன: துஷ்யது நியாயம் போல, சிஷ்யனின் மனநிலையிருந்து இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் மறுக்கப்படுகிறது.


பாடல் 29 : சித்தும் சடமும் எப்படிச் சேரும்?

சித்தாகும் ஆன்மாவும் ஜடமாகும் சித்தமும்தான்,

ஒத்தாங்கி ரண்டுமொன்றாய் உற்றவகை சாற்றுமென.


பொருள் :

சித்து ஆகும் ஆன்மாவும் = அறிவு வடிவமாகும் ஆத்மாவும்,

ஜடமாகும் சித்தமும் = ஜடமான மனமும்,

தான் ஒத்து ஆங்கு = தனக்குள் வேறுபாடு இல்லாதது போல இணைந்து,

இரண்டும் ஒன்றாய் = இரண்டும் ஒன்றாகி,

உற்றவகை சாற்றுமென = சேர்ந்த விதத்தை உரைத்தருளும் என்று அர்ஜுனன் கேட்க..


பொழிப்புரை : அறிவு வடிவமாகும் ஆத்மாவும் ஜடமான மனமும் தனக்குள் வேறுபாடு இல்லாதது போல இரண்டும் ஒன்றாகிச் சேர்ந்த விதத்தை உரைத்தருளும் என்று அர்ஜுனன் கேட்க.


பாடல் 30 : நெருப்பும் இரும்பும் போல

வல்லிரும்பு கனலுடனே மருவியது போல்மனமும்,

ஒல்லையில் ஆன்மாவுடனே உற்றதுகாண் என்றவரோ!


பொருள் :

வல்லிரும்பு கனலுடனே = வலிமையான இரும்பு நெருப்புடனே,

மருவியது போல் = சேர்ந்து (ஒளிபெற்றிருப்பது) போல,

மனமும் ஒல்லையில் ஆன்மாவுடனே = மனமும் அனாதியான ஆத்மாவுடன்,

உற்றது காண் என்றவரோ! = சேர்ந்து சேதனத்துவம் பெற்றிருக்கின்றது, இதனை அறிவாயாக, என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : வலிமையான இரும்பு நெருப்புடனே சேர்ந்து (ஒளிபெற்றிருப்பது) போல, மனமும் அனாதியான ஆத்மாவுடனே சேர்ந்து சேதனத்துவம் பெற்றிருக்கின்றது., இதனை அறிவாயாக, என்று அருளியவர் நீர்தானோ!


கருத்துரை : தப்த அயப் பிண்ட நியாயம் (தப்த அயப்பிண்டம் = காய்ச்சிய இரும்புத்துண்டு) தனக்கென்று ஒரு வடிவமற்ற நெருப்பு இரும்புத்துண்டோடு சேரும் பொழுது அதன் வடிவத்தை அடைவது போலத் தோன்றுகிறது. இது தாந்தாளகமான தோற்ற மாத்திரமே அன்றி உண்மையில் தெருப்பு வடிவத்தை அடைந்துவிடுவதில்லை. இது போல நிர்குணமான ஆத்மா மனதோடு சேரும்பொழுது இன்பதுன்பங்களை அடைவது போலிருக்கிறது. 


பாடல் 31 : ஆத்மா மனதுடன் சேர்ந்தது உண்மையா?

உற்றதெத னால்எனவே உள்ளம் அவிவேகமுறப்,

பற்றியதன் மேலுமதன் பண்புவந்த தென்றவரோ!


பொருள் :

உற்றது எதனால் எனவே = ஜடமான மனது சேதனத்தன்மையையும், அறிவு வடிவான ஆத்மா இன்பதுன்பங்களையும் அடைந்தது எதனால் என்று அர்ஜுனன் வினவ,

உள்ளம் அவிவேகம் உற = மனதானது விவேகம் செய்யாமையினால்,  

பற்றிய தன் மேலும் அதன் பண்பு வந்தது = மனதைப் பற்றிய ஆத்மாவாகிய தன் மேல் அதன் மனதின் பண்புகளும், ஆத்மாவைப் பற்றிய மனதின் மேல் சேனத்துவமும் வந்தன,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ஜடமான மனது சேதனத்தன்மையையும், அறிவு வடிவான ஆத்மா இன்பதுன்பங்களையும் அடைந்தது எதனால் என்று அர்ஜுனன் வினவ, மனதானது விவேகம் செய்யாமையினால், மனதைப் பற்றிய ஆத்மாவாகிய தன் மேல் மனதின் பண்புகளும், ஆத்மாவைப் பற்றிய மனதின் மேல் சேனத்துவமும் வந்தன, என்று அருளிய பகவான் நீர்தானோ!

கருத்துரை : நெருப்பு ஒளிபொருந்தியது, குறிப்பிட்ட வடிவம் அற்றது. இரும்பு வடிவம் உடையது, ஒளியற்றது. இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் நெருப்பும் இரும்பும் சேரும் பொழுது நெருப்பு வடிவம் உடையது போலவும், இரும்பு பிரகாசம் உடையது போலவும் இரண்டின் தன்மைகளும் ஒன்றாகி ஒரே பொருளாகத் தெரிகின்றது. அதுபோல சேதனமான ஆத்மாவும் அவிவேகம் உள்ள மனதும் ஒன்றுசேரும் பொழுது, மனது சேதனத்தன்மை உடையதாகவும், ஆத்மா துன்பத்தை அடைந்ததாகவும் இரண்டும் ஒன்றாகித் தெரிகின்றது.


பாடல் 32 : இன்ப துன்பங்கள் ஆத்மாவுக்கு இல்லை!

அடுத்தகுணம் போமோபின் ஆன்மாவை விட்டெனவே,

எடுத்த செம்பூ நிறம்படிகத் தேறுதல்போல் என்றவரோ!


பொருள் : 

ஆன்மாவை அடுத்த குணம் = ஆத்மாவை அடைந்துள்ள இன்ப துன்பங்கள், 

பின் விட்டுப் போமோ என = (ஞானம் வந்த) பின்னர் விட்டுப் போய் விடுமா? என்று அர்ஜுனன் கேட்க, 

எடுத்த செம்பூ நிறம் = (ஸ்படிகக்கல்லின்) அருகாமையை எடுத்த சிவந்த நிறமுடைய பூவின் நிறம்,

படிகத்து ஏறுதல் போல் என்றவரோ! = ஸ்படிக கல்லில் ஏறி தோன்றுவது போல் என்றவரோ!


பொழிப்புரை : ஆத்மாவை அடைந்துள்ள இன்ப துன்பங்கள் நீங்கிப் போகுமா? என்று அர்ஜுனன் கேட்க, சிவந்த நிறமுடைய பூவின் நிறம் அருகிலுள்ள ஸ்படிக கல்லில் ஏறி தோன்றுவது போல் என்றவரோ!

கருத்துரை : சிவந்த பூவும் ஸ்படிக லிங்கமும் அருகருகே இருக்கும் பொழுது வெண்மையான ஸ்படிக லிங்கம் சிவப்பு நிறத்தை அடைந்தது போலத் தோன்றும். அதுபோல, மனதையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்காத பொழுது, ஆத்மா மனதின் இன்ப துன்பத்தை அடைந்துவிட்டதாகத் தோன்றுகின்றது. ஆனால் ஸ்படிகமும் ஆத்மாவும் எப்பொழுதும் தன் சொரூபத்திலிருந்து மாறவில்லை என்பதே உண்மை. அதை ஆராய்ந்து அறிந்து கொள்வதே விவேகம் - ஞானம்.


பாடல் 33 : ஆசைகள் தோன்றுவது எதனால் ?

சுத்தபடிகம் போல் சொரூபமாய்த் தானிருக்க,

மெத்தவும் ஆசாமலினம் மேவியதென் சொல்லுமென.


பொருள் : 

சுத்த படிகம் போல் = தூய்மையான ஸ்படிகத்தினைப் போல,

தான் சொரூபமாய் இருக்க = ஆத்மாவாக நான் (சச்சிதானந்த சொரூபமாய்) இருக்க,

மெத்தவும் ஆசா மலினம் = மிகுந்த ஆசையாகிய அழுக்கு,

மேவியது என் சொல்லும் என = என்னை வந்தடைந்தது எப்படி? எனச் சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க.


பொழிப்புரை : தூய்மையான ஸ்படிகத்தினைப் போல, ஆத்மாவான நான் (சச்சிதானந்த சொரூபமாய்) இருக்க, மிகுந்த ஆசையாகிய அழுக்கு, என்னை வந்தடைந்தது எப்படி? எனச் சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க.


பாடல் 34 : வாசனையால் வந்தது!

அநாதியாம் வாசனையால் அடைந்ததா சாமலினம்,

மனோபந்தம் இருக்கின்முக்தி வாராதென்று உரைத்தவரோ!


பொருள் : 

அநாதியாம் வாசனையால் = அனாதியான வாஸனையினால்,

ஆசா மலினம் = ஆசை எனும் களங்கம்,

அடைந்தது = வந்து சேர்ந்திருக்கிறது,

மனோபந்தம் இருக்கின் = மனத்தில் ஆசையாகிய பந்தம் இருக்கும் வரை,

முக்தி வாராது என்று உரைத்தவரோ! = (துக்க நிவிர்த்தி, சுகப்ராப்தி வடிவ) முக்தியானது ஏற்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : அனாதியான வாஸனையினால் ஆசை எனும் களங்கம் வந்து சேர்ந்திருக்கிறது. மனத்தில் ஆசையாகிய பந்தம் இருக்கும் வரை (துக்க நிவிர்த்தி, சுகப்ராப்தி வடிவ) முக்தியானது ஏற்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : முற்பிறவிகளின் வாஸனையால் ஆசை எனும் நிறைவின்மை மனதில் தோன்றுகிறது. அதுவே செயலைத் தூண்டுகிறது. செயல் புண்ய, பாபம் ஆகிய வினைப்பயன்களை ஏற்படுத்துகிறது. வினைப் பயன் பிறவிக்குக் காரணமாகிறது. இவ்வாறு மனதில் தோன்றும் ஆசையே ஸம்ஸார பந்தத்தை விளைவிக்கிறது. ஆகவே இந்த ஆசை இருக்கும் வரை முக்தி வராது.


பாடல் 35 : பந்தம் எது? முக்தி எது?

பந்தமெது முக்தியெது பகுத்துரைக்க வேண்டும் எந்தன்,

சிந்தை தெளியவென்று திருத்தாளினை வணங்க.


பொருள் : 

பந்தம் எது = பந்தம் என்பது என்ன?

முக்தி எது = முக்தி என்பது என்ன?

எந்தன் சிந்தை தெளிய = எனது மனமானது தெளிவாக அறியும்படி,

பகுத்துரைக்க வேண்டும் = (அவற்றின் இலக்கணங்களை) வேறு பிரித்துச் சொல்ல வேண்டும்,

என்று திருத்தாளினை வணங்க = என்று கேட்டு (அர்ஜுனன் பகவானின்) திருவடிகளை வணங்க..


பொழிப்புரை :

பந்தம் என்பது என்ன? முக்தி என்பது என்ன?, எனது மனமானது தெளிவாக அறியும்படி, (அவற்றின் இலக்கணங்களை) வேறு பிரித்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டு (அர்ஜுனன் பகவானின்) திருவடிகளை வணங்க..


பாடல் 36 : பந்தம் இது, முக்தி இது!

தேகாதி தானெனவே சேரபிமா னங்கள்பந்தம்,

ஆகாத மானம்விடில் அரியமுத்தி என்றவரோ!


பொருள் :

தேகாதி தான் எனவே = உடல் முதலானவைகளில் நான் என்பதாக,

சேர் அபிமானங்கள் பந்தம் = சேர்ந்து இருக்கின்ற அபிமானமே - பற்றுதலே - பந்தமாகும்.

ஆகாத மானம் விடில் = ஆகாத துன்பத்தைத் தருகின்ற அபிமானத்தை விட்டுவிட்டால், 

அரிய முத்தி என்றவரோ! = அதுவே கிடைத்தற்கு அரிதான முக்தி என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : உடல் முதலானவைகளில் நான் என்பதாக சேர்ந்து இருக்கின்ற அபிமானமே - பற்றுதலே - பந்தமாகும். ஆகாத துன்பத்தைத் தருகின்ற அபிமானத்தை விட்டுவிட்டால், அதுவே கிடைத்தற்கு அரிதான முக்தி என்று அருளிய பகவான் நீர்தானோ!

கருத்துரை : அழிவற்ற ஆநந்த வடிவான ஆத்மாவாகத்தான் இருக்க, அழியக்கூடிய துன்பமயமான உடலை நான் என்று நினைப்பதே பந்தமாகும். ஆத்மாவைத் தான் என்று உணர்ந்து உடல் மேல் இருக்கும் நான் என்ற எண்ணத்தை விட்டு விடுதலே விடுதலை ஆகும்.


பாடல் 37 : அபிமானம் வந்ததெப்படி?

அபிமானம் வரும்வகையும் ஆங்கதுதான் தீர்வகையும்,

தபியாமல் நானறியத் தயவாகக் கூறுமென!


பொருள் :

அபிமானம் வரும்வகையும் = உடல் நானென்ற அபிமானம் வந்து சேருகின்ற வழியையும், 

ஆங்கு அதுதான் தீர்வகையும் = அந்த அபிமானம் நீங்குவதற்குரிய வழியையும்,,

நான் தபியாமல் அறிய = நான் துன்பம் அடையாமல் தெரிந்து கொள்ள,

தயவாகக் கூறும் என = கருணையோடு வழி கூறுங்கள் என்று அர்ஜுனன் கேட்க...

பொழிப்புரை : உடல் நானென்ற அபிமானம் வந்து சேருகின்ற வழியையும், அந்தத் அபிமானம் நீங்குவதற்குரிய வழியையும், நான் துன்பம் அடையாமல் தெரிந்து கொள்ளக் கருணையோடு வழி கூறுமென அர்ஜுனன் கேட்க.


பாடல் 38 : அறியாமையால் வந்ததிது!

மறந்திடுமஞ் ஞானத்தால் மானம்வந்த தஞ்ஞானம்,

இறந்துவிடின் மானமும்போம் என்னவுரை செய்தவரோ!


பொருள் :

மறந்திடும் அஞ்ஞானத்தால் = ஆத்ம ஸ்வரூத்தை மறந்த (மறைத்த) அஞ்ஞானத்தினால்,

மானம் வந்தது = (உடல் நானென்ற) பற்றுதல் (அபிமானம்) வந்தது. அஞ்ஞானம் இறந்துவிடின் = அந்த அஞ்ஞானம் அழிந்துவிட்டால்,

மானமும் போம் = உடல்பற்றும் அழிந்துவிடும், 

என்ன உரை செய்தவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ஆத்ம வடிவத்தை மறந்த (மறைத்த) அஞ்ஞானத்தினால் உடல் நானென்ற பற்றுதல் (அபிமானம்) வந்தது. அந்த அஞ்ஞானம் அழிந்துவிட்டால் உடல்பற்றும் அழிந்துவிடும், என்று அருளிய பகவான் நீர்தானோ!

கருத்துரை : ஆத்மாவைச் சார்ந்திருக்கும் அஞ்ஞானம் ஆத்மாவையே மறைக்கிறது. ஆத்மாவை அறியாத ஜீவன் உடலையே நானென்று நினைக்கிறான். ஆத்மஞானத்தினால் அஞ்ஞானம் அழிந்து விட்டால் அதுவரை இந்த உடலே நானென்ற தவறான அறிவும் அழிந்துவிகிறது. உடல்பற்று நீங்கினால் உடல் சார்ந்த இருமைகளும் நீங்கிவிடுகின்றன.


பாடல் 39 : அறியாமை வருவதும் போவதும் எப்படி?

அந்தமுறை அஜ்ஞானம் அணுகுவதும் போவதுவும்,

சந்தயமில் லாதறியத் தயவாகக் கூறுமென.


பொருள் : 

அந்தமுறை = (அபிமானம் வரும்வகையும் போகும்வகையும் கூறிய) அப்படியே,

அஜ்ஞானம் அணுகுவதும் போவதுவும் = (என் ஸ்வரூபத்தை மறைக்கும் விதமாக) அஜ்ஞானமானது வந்து சேர்வதும், அழிந்து போவதும் எப்படி என்று,

சந்தயம் இல்லாது அறிய = ஐயம் இல்லாமல் நான் அறிந்து கொள்ளும்படியாக,

தயவாகக் கூறும் என = கருணையுடன் கூறி அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க..


பொழிப்புரை : (அபிமானம் வரும்வகையும் போகும்வகையும் கூறிய) அப்படியே, என் ஸ்வரூபத்தை மறைக்கும் விதமாக அஜ்ஞானமானது வந்து சேர்வதும், அழிந்து போவதும் எப்படி என்று ஐயம் இல்லாமல் நான் அறிந்து கொள்ளும்படியாகக் கருணையுடன் கூறி அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க..


பாடல் 40 : மெய்யறிவால் போகும் !

அஜ்ஞானம் வந்தது அனாதியது சொல்வதல்ல,

மெய்ஞானத் தாலே விடுமென் றுரைத்தவரோ !


பொருள் :

அஜ்ஞானம் அனாதி = ஆத்மாவைப் பற்றிய அறியாமை அநாதியாய் உள்ளது.

அது வந்தது (ஆக) சொல்வது அல்ல = அஜ்ஞானம் ஒரு காரணத்தால் வந்தது என்று சொல்வதற்கில்லை,

மெய்ஞானத்தாலே விடும் = (ஆனால் அது) மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தால் நீங்கும்,

என்று உரைத்தவரோ! = என்று உரைத்தருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ஆத்மாவைப் பற்றிய அறியாமை அநாதியாய் உள்ளது. அது ஒரு காரணத்தால் வந்தது என்று சொல்வதற்கில்லை, ஆனால், அது மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தால் நீங்கும், என்று உரைத்தருளிய பகவான் நீர்தானோ!

அநாதிகள் - 6

அஞ்ஞானம், (மாயை), ஜீவன், ஈச்வரன், பிரஹ்மம், அவற்றின் சம்பந்தம், பேதம் என்பன ஆகும்.

வாஸ்தவ அநாதி பிரஹ்மம் ஒன்று மாத்திரம்தான். கற்பித அநாதி மற்ற ஐந்தும் ஆகும்,. கற்பிதம் ஐந்தும் நிவர்த்தியாவன வாகும்.


பாடல் 41 : சூரியன் முன் இருள் வருமா?

இரவியெதிர் அடுத்துவந்த இருள்போல அஞ்ஞானம்,

வரவிதியோ ஜோதிதன்பால் வந்தவகை ஏதெனவே!


பொருள் : 

இருள் = இருளானது,

இரவி எதிர் அடுத்து வந்த(து) போல = சூரியனின் எதிரில் நெருங்கிவந்தது என்பது (சாத்தியமில்லாதது) போல,

அஞ்ஞானம் = அறியாமையானது,

ஜோதிதன்பால் = ஸ்வயம்பிரகாசமான ஆத்மாவிடத்தில்,

வர(ல்) விதியோ = வருவதற்கு இயலுமோ?

வந்த வகை ஏது எனவே = எப்படி (வருதல் சாத்தியம்) என்று, சொல்லுமென (அர்ஜுனன் கேட்க).


பொழிப்புரை : இருளானது சூரியனின் எதிரில் நெருங்கிவந்தது என்பது (சாத்தியமில்லாதது) போல, அறியாமையானது ஸ்வயம்பிரகாசமான ஆத்மாவிடத்தில் வருவதற்கு இயலுமோ? எப்படி (வருதல் சாத்தியம்) என்று, சொல்லுமென (அர்ஜுனன் கேட்க).


பாடல் 42 : ஆனந்த சாகரம் நீ

அந்தவறி வுவந்தால் அஞ்ஞான மில்லையப்பால்,

சந்ததமு மானந்த சாகரம்நீ என்றவரோ!


பொருள் : 

அந்த அறிவு வந்தால் = (ஸ்வயம்பிரகாசமான ஆத்மாவிடத்தில் அறியாமை வந்து பொருந்துவதற்கு வாய்ப்பே இல்லை எனும்) அப்படிப்பட்ட ஞானம் வந்து விட்டால்,

அஞ்ஞானம் இல்லை = அறியாமை உன்னிடத்தில் (ஆத்மாவித்தில்) இல்லை,

அப்பால் = அந்த ஞானத்திற்குப் பிறகு,

சந்ததமும் ஆனந்த சாகரம் நீ = எப்பொழுதும் ஆனந்தக் கடல் நீ,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : (ஸ்வயம்பிரகாசமான ஆத்மாவிடத்தில் அறியாமை வந்து பொருந்துவதற்கு வாய்ப்பே இல்லை எனும்) அப்படிப்பட்ட ஞானம் வந்து விட்டால், அறியாமை உன்னிடத்தில் (ஆத்மாவித்தில்) இல்லை, அந்த ஞானத்திற்குப் பிறகு, எப்பொழுதும் ஆனந்தக் கடல் நீ, என்று அருளிய பகவான் நீர்தானோ!

கருத்துரை : சூரியன் தோன்றியவுடன் இருள் மறைந்துவிடுவது போல, நான் ஆத்மா என்று அறியாதவரையே அஞ்ஞானம். அஞ்ஞானம் இருக்கின்றது என்பதை அறியும் அறிவு, அஞ்ஞானத்திற்கு வேறானது. நான் அந்த அறிவு ஸ்வரூபம் என்ற ஞானம் வந்த பிறகு அறியாமை இல்லை. ஆத்மா ஆனந்த சொரூபம் என்பதால் நான் ஆத்மா என்றறிந்து விட்டால் பிறகு ஆநந்தத்திற்கு எல்லை இல்லை.


பாடல் 43 : சுகதுக்கம் தீராதது ஏன்?

வேதாந்தத் தால்குருவால் மெய்ஞ்ஞானம் வந்தவுடன்,

தீதான துக்கசுகம் தீராத தேதெனவே!


பொருள் : 

குருவால் வேதாந்தத்தால் = குரு வாயிலாக வேதாந்த நூல்களை சிரவணம் செய்வதால்,

மெய்ஞ்ஞானம் வந்தவுடன் = ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடனே,

தீதான துக்க சுகம் = தீயவையான துன்பமும் (உலகியல்) இன்பமும்,

தீராதது ஏது எனவே! = நீங்கிப்போகாததன் காரணம் என்ன, என்று அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை : குரு வாயிலாக வேதாந்த நூல்களை சிரவணம் செய்வதால் ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடனே தீயவையான துன்பமும் (உலகியல்) இன்பமும் நீங்கிப்போகாததன் காரணம் என்ன, என்று அர்ஜுனன் கேட்க,

கருத்துரை : வேதாந்தம் எனப்படுகின்ற உபநிஷத் முதலான தத்துவ நூல்களை குருமுகமாக கேட்பதன் வாயிலாகவே ஆத்ம ஞானமானது உண்டாகும். அப்படிக் கேட்கின்ற பொழுது புரிந்தாலும், அதனுடைய பலனான துக்க நிவர்த்தி, சுகப்ராப்தி எனும் நிறைவுணர்வை மனதில் அனுபவிக்க முடியாமல் இருப்பது எதனால்? என்பது கேள்வி.


பாடல் 44 : அபரோக்ஷ ஞானத்தாலே நீங்கும்!

பற்றறுமோ துக்கசுகம் பரோக்ஷ ஞானத்தாலே,

அற்றமாம் அவ்விரண்டும் அபரோக்ஷத் தென்றவரோ!


பொருள் :

பரோக்ஷ ஞானத்தாலே = ஆத்மாவை தான் என்று உணராத ஞானத்தினால், 

துக்க சுகம் பற்றறுமோ = (உலக) துன்ப இன்பங்களின் பற்று நீங்குமா?, 

அபரோக்ஷத்து = (ஆத்மாவே நான் என்றுணர்ந்த) அபரோக்ஷ ஞானத்தாலேயே 

அவ்விரண்டும் = துன்பமும் இன்பமும்,

அற்றம் ஆம் = அழிந்து போகும்

என்றவரோ = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ஆத்மாவை தான் என்று உணராத ஞானத்தினால் (உலக) துன்ப இன்பங்களின் பற்று நீங்குமா?. (ஆத்மாவே நான் என்றுணர்ந்த) அபரோக்ஷ ஞானத்தாலேயே துன்பமும் இன்பமும் அழிந்து போகும் என்றருளிய பகவான் நீர்தானோ!

கருத்துரை : ஞானம் பிரத்யக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம் என்று இரு வகையாக உள்ளது. ஒரு பொருள் நேரடியாக புலன்களுக்கு விஷயமாகும்பொழுது ஏற்படும் அப்பொருளைப் பற்றிய அறிவு பிரத்யக்ஷ ஞானம் ஆகும். புலன்களுக்குப் புலப்படாமல் அப்பால் உள்ள பொருளை பற்றி ஏற்படும் அறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். பிரத்யக்ஷ ஞானம் அபரோக்ஷ ஞானம் என்றும் சொல்லப்படும். புலன்களுக்கு புலப்படாமல் மனதிற்கு மட்டும் விஷயமாகக் கூடியவையும் இருக்கின்றன. அவை நம்மால் நேரடியாக அனுபவிக்கப்படுகின்றன என்பதால், அபரோக்ஷ ஞானம் என்று சொல்லப்படுகின்றன. நான் இருக்கிறேன் என்ற தன்னுணர்வு மனதிற்கும் மேலான அறிவாகும். அது நித்யம் நம்மால் அபரோக்ஷமாக அனுபவிக்கப்படுகிறது. ஆனாலும் அச்சிதாத்மாவின் ஸ்வரூபம் என்ன என்பது சாஸ்த்ர சிரவணம் இல்லாமல் நமக்குத் தெரியாது. நான் என்றிருக்கும் ஸாமான்ய உணர்வும் உடலோடு மனதோடு சேர்த்தே அறியப்படுகிறது. உடல் மனத்திலிருந்து நானெனும் அறிவை மட்டும் பிரித்து அறிதல் ஆத்மஞானம். ஆத்மா இருக்கிறது என்று மட்டும் அறியும்போது அது பரோக்ஷ ஞானம் ஆக இருக்கிறது. உடல், மனதிற்கு வேறாக இருக்கின்ற சிதாத்மாவை நானென்று உணரும்போது அது அபரோக்ஷ ஞானம். மஹாவாக்ய விசாரத்தால் அது ஏற்படும்.


பாடல் 45 : பரோக்ஷம் எது ? அபரோக்ஷம் எது ?

பரோக்ஷம் அபரோக்ஷமெது பகுத்துரைக்க வேண்டுமென்தன்,

திரோதமாம் புத்திநன்றாய்த் தெளியும்ப டிக்கெனவே.


பொருள் : 

பரோக்ஷம் (எது) = பரோக்ஷஞானம் என்பது யாது?

அபரோக்ஷம் எது = அபரோக்ஷஞானம் என்பது யாது?  

என் தன் = என்னுடைய,

திரோதமாம் புத்தி = அறியாமையால் மறைக்கப்பட்டுள்ள அறிவானது

நன்றாய்த் தெளியும் படிக்கு = நன்றாகத் தெளியும்படியாக,

பகுத்துரைக்க வேண்டும் = பிரித்து கூற வேண்டும்

எனவே = என்று அர்ஜுனன் கேட்க.


பொழிப்புரை :

பரோக்ஷஞானம் என்பது யாது? அபரோக்ஷஞானம் என்பது யாது? என்னுடைய அறியாமையால் மறைக்கப்பட்டுள்ள அறிவானது நன்றாகத் தெளியும்படியாக பிரித்து கூற வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க.


பாடல் 46 : பரோக்ஷம் இது, அபரோக்ஷம் இது !

பகர்ந்தசத்த ஞானம்ப ரோக்ஷம னுபவத்தால்,

அகம்பிரம்ம மெனும்ஞான மபரோக்ஷம் என்றவரோ!


பொருள் :

சத்த ஞானம் பகர்ந்த பரோக்ஷம் = வேதாந்த நூல்களாலும் குருவாலும் சொல்லப்பட்ட ஆத்மா, ப்ரஹ்மம் போன்ற சப்தங்களின் (சொற்களின்) பொருளறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். 

அனுபவத்தால் அகம்பிரம்மம் எனும் ஞானம் அபரோக்ஷம் = தத்துவமஸி, அகம்பிரம்மாஸ்மி போன்ற மகாவாக்கியங்களின் விசாரத்தால் (ஆராய்ச்சியால்) உண்டாகும் "நான் பிரம்மமாக இருக்கிறேன்" என்னும் அநுபவ உணர்வு அபரோக்ஷ ஞானம் ஆகும்,

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை : வேதாந்த நூல்களாலும் குருவாலும் சொல்லப்பட்ட ஆத்மா, ப்ரஹ்மம் போன்ற சப்தங்களின் (சொற்களின்) பொருளறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். தத்துவமஸி, அகம்பிரம்மாஸ்மி போன்ற மகாவாக்கியங்களின் விசாரத்தால் (ஆராய்ச்சியால்) உண்டாகும் "நான் பிரம்மமாக இருக்கிறேன்" என்னும் அநுபவ உணர்வு அபரோக்ஷ ஞானம் ஆகும் என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : உடலுக்கு வேறாக ஆத்மா இருக்கின்றது என்றும், உலகத்திற்கு வேறாக பிரம்மம் (கடவுள்) இருக்கின்றது என்றும் அறிந்து கொள்வது பரோக்ஷ ஞானம். பிரம்மமே ஆத்மாவாக இருக்கின்றது, ஆத்மாவே நான் என்று அறிந்துகொள்வது அபரோக்ஷ ஞானம்.


பாடல் 47 : உடற்பற்று போகாதது ஏன்?

தான் பிரம்மம் என்றறிந்தும் தனுவைத்தான் என்ற புத்தி,

ஏன் போகவில்லை அதை எனக்கறியப் புகலுமென.


பொருள் : 

பிரம்மம் = ஸச்சிதாநந்த பிரஹ்மமே,

தான் என்றறிந்தும் = நான் என்று அறிந்த பிறகும்,

தனுவைத் தான் என்ற புத்தி = உடல் முதலானவற்றை நான் என்று எண்ணும் (தவறான) அறிவு,

ஏன் போகவில்லை = ஏன் நீங்கவில்லை, 

அதை எனக்கறியப் புகலுமென = அதன் காரணத்தை நான் நன்கறியுமாறு தாங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று அர்ஜுனன் கேட்க.


பொழிப்புரை :

ஸச்சிதாநந்த பிரஹ்மமே 'நான்' என்று அறிந்த பிறகும் உடல் முதலானவற்றை நான் என்று எண்ணும் (தவறான) அறிவு ஏன் நீங்கவில்லை, அதன் காரணத்தை நான் நன்கறியுமாறு தாங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று அர்ஜுனன் கேட்க.


கருத்துரை :

பரோக்ஷ ஞானம் துன்பத்தைப் போக்காது, அபரோக்ஷ ஞானத்தால்தான் துன்பம் தீரும் என்பது முன்னர் (பாடல்கள் 43 - 46) கூறப்பட்டது. அபரோக்ஷ ஞானமும் திட (த்ருட) அபரோக்ஷ ஞானம், அதிட (அத்ருட) அபரோக்ஷ ஞானம் என இரண்டாக உள்ளது என்ற பேதம் இங்கு (பாடல்கள் 47-48) காட்டப்படுகிறது.


பாடல் 48 : பயிற்சியினால் நீங்கும்

கேள்வியினால் மனனத்தால் கிளர்ந்த யோகங்களினால்,

ஆள்பிரம்மத்து அனுபவம்வந்து அதுதீரும் என்றவரோ!


பொருள் :

கேள்வியினால் = குரு வாயிலாக வேதாந்த நூல்களைக் கேட்பதனாலும்,

மனனத்தால் = அவற்றின் பொருளைச் சிந்தித்து ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதனாலும், 

கிளர்ந்த யோகங்களினால் = தெளிவாக அறிந்து கொண்ட அந்தத் தத்துவஞானத்திலேயே மனதைத் தொடர்ந்து நிறுத்துவதனாலும்,

பிரம்மத்து ஆள்(ழ்) அனுபவம் வந்து = நான் பிரம்மம் என்று ஸந்தேஹம் விபரீதம் அற்று அத்வைத ஞானத்தில் மனம் ஆழ்ந்து அதுவாயிருக்கும் அனுபவம் ஏற்படும்பொழுது,

அதுதீரும் என்றவரோ! = (பழைய வாஸனையான உடல் நானென்ற) தவறான அறிவு நீங்கிப் போகும் என்றவரோ!


பொழிப்புரை :

குரு வாயிலாக வேதாந்த நூல்களைக் கேட்பதனாலும், அவற்றின் பொருளைச் சிந்தித்து ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதனாலும், தெளிவாக அறிந்து கொண்ட அந்தத் தத்துவஞானத்திலேயே மனதைத் தொடர்ந்து நிறுத்துவதனாலும், நான் பிரம்மம் என்று ஸந்தேஹம் விபரீதம் அற்று அத்வைத ஞானத்தில் மனம் ஆழ்ந்து - லயித்து - அதுவாயிருக்கும் அனுபவம் ஏற்படும்பொழுது, (பழைய வாஸனையான உடல் நானென்ற) தவறான அறிவு நீங்கிப் போகும் என்றவரோ!


கருத்துரை :

சிரவணம் = தத்துவ சாஸ்த்ரங்களைக் குருவாயிலாகக் கேட்டல்.

மனனம் = கேட்டதை மீண்டும் மீண்டும் பல்வேறு யுக்திகளோடு சிந்தித்து ஐயம் இன்றிப் புரிந்துகொள்ளுதல்.

கிளர்ந்த யோகம் = நிதித்யாஸனம் = ஆத்மத்யானம் = ஐயம், திரிபு இன்றிப் புரிந்து கொண்ட ஜீவப்ரஹ்ம ஐக்ய (அத்வைத) ஞானத்தில் அகண்டாகாரவ்ருத்தியினால் - பழைய வாஸனைகள் நீங்கும் வரை - மனதை நிறுத்துதல்.


இப்படி ஏற்படும் திட அபரோக்ஷ ஞானமே துக்கத்தைப் போக்கும்.


பாடல் 49 : ஆத்மா ப்ரஹ்மம் ஆகிறதா ?

ஆதியாம் சித்சொரூபம் ஆகாத தானினிமேல்,

சோதிமன னாதியினால் சொரூபமா மோவெனவே!


பொருள் :

ஆதியாம் சித்சொரூபம் = (அனைத்துக்கும்) ஆதியான - காரணமான - ஸச்சிதாநந்தப் பிரஹ்மமாக,

ஆகாத தான் = (இதுவரை) இல்லாத ஆத்மா,

மனன ஆதியினால் = சிரவண, மனனங்களால்,

இனிமேல் = பின்னர்,

சோதி சொரூபம் ஆமோ = சேதன ரூப ப்ரஹ்மம் ஆகுமோ?

எனவே = என அர்ஜுனன் வினவ,


பொழிப்புரை :

(அனைத்துக்கும்) ஆதியான - காரணமான - ஸச்சிதாநந்தப் பிரஹ்மமாக (இதுவரை) இல்லாத ஆத்மா சிரவண, மனனங்களால் பின்னர், சேதன ரூப ப்ரஹ்மம் ஆகுமோ? என அர்ஜுனன் வினவ.


பாடல் 50 : ஆத்மா எப்போதுமே ப்ரஹ்மம்தான்

எப்போதும் சின்மயம்தா னெனல்மறந்து தேடுவது,

செப்புமிடற் றணியிருக்கத் தேடுதல்போல் என்றவரோ.


பொருள் : 

தான் = ஆத்மாவாகிய தான்

எப்போதும் சின்மயம் எனல் மறந்து = எ(மு)க்காலத்திலும் சித்ஸ்வரூபமான ப்ரஹ்மம்தான் என்பதை மறந்து,

தேடுவது = ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று தேடுவது,

செப்பும் அணி இடற்று இருக்க = முன்னர் அழகென்று சொல்லப்பட்டு அணிந்த நகை கழுத்திலேயே இருக்க,

தேடுதல்போல் = (அதை மறந்து காணவில்லை என்று புறத்தில்) தேடுவது போல,

என்றவரோ = என்றவரோ!


பொழிப்புரை :

ஆத்மாவாகிய தான் எ(மு)க்காலத்திலும் சித்ஸ்வரூபமான ப்ரஹ்மம்தான் என்பதை மறந்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று தேடுவது, முன்னர் அழகென்று சொல்லப்பட்டு அணிந்த நகை கழுத்திலேயே இருக்க (அதை மறந்து காணவில்லை என்று புறத்தில்) தேடுவது போல, என்றவரோ!


பாடல் 51 : நான் நானாவேனா?

தேடியபின் தேகபுத்தி தீர்ந்துபோய் சித்சொரூபம்,

கூடுவனோ யானென்கு றைதீரச் சொல்லுமென.


பொருள் : 

தேடிய பின் = சிரவண, மனனங்களால் (நான் யார்? என்று) ஆராய்ந்தறிந்த பின்பு, 

தேக புத்தி தீர்ந்து போய் = உடல் நான் என்னும் தவறான அறிவு நீங்கிப் போய், 

யான் = நான்,

சித்சொரூபம் கூடுவனோ = என் யதார்த்த ஸ்வரூபமான ப்ரஹ்மத்தைக் காண்பேனோ?

என் குறை தீர = என் ஐயம் தெளிய,

சொல்லுமென = அருளுக என்று அர்ஜுனன் வினவ,


பொழிப்புரை :

சிரவண, மனனங்களால் (நான் யார்? என்று) ஆராய்ந்தறிந்த பின்பு, உடல் நான் என்னும் தவறான அறிவு நீங்கிப் போய் நான் என் யதார்த்த ஸ்வரூபமான ப்ரஹ்மத்தைக் காண்பேனோ?, என் ஐயம் தெளிய அருளுக என்று அர்ஜுனன் வினவ,

(கண்ட சாமீகர நியாயம்)


பாடல் 52 : நானாயிருப்பதில் ஐயமென்ன?

வந்தவுடல் வேறாயும் வாசனையால் தானெனலால்,

சந்தயமென் தற்சொரூபம் தானாதற் கென்றவரோ!


பொருள் : 

வந்த உடல் வேறாயும் = வினைப்பயனால் வந்த உடல், தனக்கு வேறாக இருந்தாலும்,

வாசனையால் தான் எனலால் = (பல பிறவிகளில் நானென்று வாழ்ந்த) வாசனையால் உடலை ஆத்மா என்று கருதுவதால், (இப்பொழுதும் தான் எனவே தோன்றுகின்றது.)

தன் சொரூபம் தான் ஆதற்கு = தனது (யதார்த்த) ஸ்வரூபமான ஆத்மாவாக தான் இருப்பதற்கு,

சந்தயம் என் = ஐயம் என்ன உள்ளது ?


பொழிப்புரை :

வினைப்பயனால் வந்த உடல் தனக்கு வேறாக இருந்தாலும் (பல பிறவிகளில் நானென்று வாழ்ந்த) வாசனையால் உடலை ஆத்மா என்று கருதுவதால், (இப்பொழுதும் தான் எனவே தோன்றுகின்றது. தற்போது வேதாந்த விசாரம் செய்தறிந்த பின்) தனது (யதார்த்த) ஸ்வரூபமான ஆத்மாவாக தான் இருப்பதற்கு ஐயம் என்ன உள்ளது ?


பாடல் 53 : உடல்மயக்கம் நீங்குவது எப்படி?

தனுவைத்தான் எனும் பிரமை சத்தஞானத்தில் அறாது,

அனுபவமெய்ஞ் ஞானத்தால் அறும் வகைஏது உரையுமென.


பொருள் :

தனுவைத் தான் எனும் பிரமை = உடலை ஆத்மா என்று நினைக்கும் மயக்கமானது,

சத்த ஞானத்தில் அறாது = சாஸ்திர விசாரணையால் உண்டான (உடல் ஆன்மா அன்று எனும்) பரோக்ஷ ஞானத்தால் நீங்காமல், 

அனுபவ மெய்ஞ்ஞானத்தால் = உண்மை அனுபவம் ஆகிய (ஆத்மாவே நான், இந்த ஆத்மா ப்ரஹ்மம் எனும்) திட அபரோக்ஷ ஞானத்தால்,

அறும் வகை ஏது உரையுமென = நீங்குகின்ற விதம் எப்படி சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…


பொழிப்புரை : உடலை ஆத்மா என்று நினைக்கும் மயக்கமானது, சாஸ்திர விசாரணையால் உண்டான (உடல் ஆன்மா அன்று எனும்) பரோக்ஷ ஞானத்தால் நீங்காமல், உண்மை அனுபவம் ஆகிய (ஆத்மாவே நான், இந்த ஆத்மா ப்ரஹ்மம் எனும்) திட அபரோக்ஷ ஞானத்தால் நீங்குகின்ற விதம் எப்படி?, சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…


கருத்துரை : உடலுக்கு வேறாக ஆத்மா இருக்கிறது, உலகிற்கு வேறாக கடவுள் இருக்கிறார் என்று மட்டும் அறிவது பரோக்ஷ ஞானம். இவ்வுலகிற்கு ஆதாரமாக எந்தப் பரப்ரஹ்மம் இருக்கிறதோ அதுவே இவ்வுடலுக்கும் ஆதாரமாக இருக்கிறது, அதுவே நான் என்று ஐயமின்றி நிச்சயமாக அறிவது அபரோக்ஷ ஞானம்.


பாடல் 54 : ஐயமின்றிய அறிவொளியினால் தொலையும்

விளக்குவிளக் கெனுமதனால் வெய்யவிருள் போய்விடுமோ,

துளக்கமிலா விளக்கேற்றில் தொலையுமிருள் என்றவரோ!


பொருள் : 

விளக்கு விளக்கு எனும் அதனால் = விளக்கு விளக்கு என்று சொல்வதினால் மட்டும்,

வெய்ய இருள் போய்விடுமோ = கொடிய இருள் நீங்கி விடுமோ? (நீங்காது).

துளக்கமிலா விளக்கேற்றில் = அசைவின்றிய விளக்கேற்றினால்,

தொலையும் இருள் = இருளானது நீங்கிப்போகும்,

என்றவரோ! = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

விளக்கு விளக்கு என்று சொல்வதினால் மட்டும் கொடிய இருள் நீங்கி விடுமோ? (நீங்காது). அசைவின்றிய விளக்கேற்றினால் இருளானது நீங்கிப்போகும், என்றருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை :

(அதுபோல) பிரம்மம் இருக்கின்றது என்ற பரோக்ஷ ஞானத்தினால் மட்டும் அல்லது 'நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்' என்று பலமுறை நிர்க்குண ப்ரஹ்ம உபாஸனையாக ஜபம் செய்வதால், தேகம் நான் என்ற அறிவு நீங்காது. அந்த ப்ரம்மமே எப்பொழுதும் ஆத்மாவாக (நானாக) விளங்கிக் கொண்டிருக்கிறது என்ற விசார ஜந்நிய திட அபரோக்ஷ ஞானத்தினால்தான் உடல் அபிமானமானது நீங்கும்.


பாடல் 55 : அஞ்ஞானம் எப்போது நீங்கும்?

நெடுங்காலம் ஆன்மாவை நீங்காத அஞ்ஞானம்,

விடுங்காலம் எந்நாளோ மெய்ஞ்ஞானத்தால் என்றவரோ!


பொருள் : 

ஆன்மாவை = ஆத்மாவை,

நெடுங்காலம் நீங்காத அஞ்ஞானம் = அனாதி காலமாய் மறைத்து நீங்காமல் இருக்கின்ற அஞ்ஞானமானது,

மெய்ஞ்ஞானத்தால் = மெய்ப்பொருளைப் பற்றிய (அபரோக்ஷ) ஞானத்தினால்,

விடுங்காலம் எந்நாளோ = (ஆத்மாவை) விட்டு நீங்குவது எப்பொழுது ?

என்றவரோ = என்று உபதேசித்து அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

ஆத்மாவை, அனாதி காலமாய் மறைத்து நீங்காமல் இருக்கின்ற அஞ்ஞானமானது, மெய்ப்பொருளைப் பற்றிய (அபரோக்ஷ) ஞானத்தினால் (ஆத்மாவை) விட்டு நீங்குவது எப்பொழுது ? என்று உபதேசித்து அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை :

ஞானத்துக்கும் ஞானபலனான மோக்ஷத்திற்கும் கால இடைவெளி உள்ளதா? ஞானம் வந்தவுடன் அஞ்ஞானம் நீங்கி விடுமா? அல்லது அதிக காலம் ஆகுமா? என்பது கேள்வியின் தாத்பர்யம்.


பாடல் 56 : மெய்ஞ்ஞானம் வந்தவுடனே நீங்கும் !

அந்தகாரம் குகையில் ஆயிரம்நாள் இருந்தாலும்,

செந்தீபம் கண்டவுடன் தீர்வதுபோல் என்றவரோ!


பொருள் : 

குகையில் = ஒரு குகையில்,

அந்தகாரம் ஆயிரம் நாள் இருந்தாலும் = இருளானது பல்லாயிரம் நாட்கள் இருந்தாலும், 

செந்தீபம் கண்டவுடன் = பிரகாசமான ஒரு விளக்கை ஏற்றியவுடன், 

தீர்வதுபோல் என்றவரோ! = மறைந்து போய்விடுவது போல, (அனாதிகாலமாய் ஆத்மாவை மறைத்திருக்கும் அஜ்ஞானமானது சாஸ்திர விசாரத்தால் ஆத்மஞானம் ஏற்பட்டவுடன் மறைந்து போய்விடும்) என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ஒரு குகையில் இருளானது பல்லாயிரம் நாட்கள் இருந்தாலும், பிரகாசமான ஒரு விளக்கை ஏற்றியவுடன் மறைந்து போய்விடுவது போல, (அனாதிகாலமாய் ஆத்மாவை மறைத்திருக்கும் அஜ்ஞானமானது சாஸ்திர விசாரத்தால் ஆத்மஞானம் ஏற்பட்டவுடன் மறைந்து போய்விடும்) என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை :

ஆத்ம ஞானம் வந்தவுடன் அஞ்ஞானமானது நீங்கி முக்தி ஸித்தித்துவிடும்.



பாடல் : 57 ஞானம் தான் ஒரே ஸாதனமா?

கருமயோ கந்தவமே காரணமா நீங்காமல்,

அருமையா ஞானம் வந்தோ அஞ்ஞானம் போமெனவே,


பொருள் :

அஞ்ஞானம் = அவித்யையானது,

கருமயோ கந்தவமே = (யாகாதி) கர்மம், (யமநியமாதி)யோகம், (விரதாதி) தபம்,

காரணமா நீங்காமல் = (ஆகியவற்றைக்) காரணமாகக் கொண்டு நீங்காமல்,

அருமையா ஞானம் வந்தோ போம் = சிறந்த அபரோக்ஷ ஆத்ம ஞானம் வந்தால் தான் போகுமா?

என்றவரோ = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : அவித்யையானது (யாகாதி) கர்மம், (யமநியமாதி)யோகம், (கிருச்ர, சாந்த்ராயணாதி) தபம் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு நீங்காமல் சிறந்த அபரோக்ஷ ஆத்ம ஞானம் வந்தால் தான் போகுமா? என்றருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்வி, உபாஸனைகளினால் அஞ்ஞானம் அழிந்து போகாதா? வேதாந்த ஞானம் வந்தால் தான் அஞ்ஞானம் அழியுமா? ஞானம் தான் ஒரே ஸாதனமா? என்பது கேள்வியின் தாத்பர்யம்.


பாடல் : 58 அஞ்ஞானம் அழிவது எதனால்?

குத்துவெட்டும் படைகளினால் கூடுமோ இருந்துரக்க,

உத்தமமாம் ரவியுதித்தால் ஓடுமிருள் என்றவரோ!


பொருள் :

குத்து வெட்டும் படைகளினால் = குத்துதற்குரிய ஈட்டி, வெட்டுதற்குரிய வாள் முதலிய ஆயுதங்களால்,

இருள் துரக்க கூடுமோ = இருளை விரட்ட முடியுமா? (முடியாது),

உத்தமமாம் ரவியுதித்தால் = உயர்வுமிக்க சூரியன் உதித்தால்,

இருள் ஓடும் = இருள் விலகிப்போகும்,

என்றவரோ = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : குத்துதற்குரிய ஈட்டி, வெட்டுதற்குரிய வாள் முதலிய ஆயுதங்களால் இருளை விரட்ட முடியுமா? (முடியாது). உயர்வுமிக்க சூரியன் உதித்தால் இருள் விலகிப்போகும், என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : இருளுக்கு ஒரே விரோதி ஒளியே. இருளை விரட்ட வேறு எதனாலும் இயலாது. ஒளி வந்தால் இருந்தானே நீங்கி விடும். அது போல, அஞ்ஞானத்திற்கு விரோதி ஞானமே. கர்மம் முதலானவை அஞ்ஞான கார்யம் ஆவதால், அவை இருளுக்குப் பகையல்ல, உறவேயாகும். ஞானஒளி ஒன்றுதான் அஞ்ஞான இருளைப் போக்கும் ஒரே ஸாதனம் ஆகும்.


பாடல் 59 : கர்மம் ஞான ஸாதனமாவது எப்படி?

அஞ்ஞான இருள்துரக்க அறியாத நல்லகன்மம்,

மெய்ஞானந் தனைப்பலிக்கும் விதமெவ்வா றெனவினவ,

(2ம் வரி வேறு பாடம்)

மெய்ஞ்ஞாலந் தனைப்பரிக்கும் விதமெவ்வா றெனவினவ!


பொருள் : 

அஞ்ஞான இருள் துரக்க = அஞ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு,

அறியாத நல்ல கன்மம் = இயலாத நல்ல செய்கையானது (யாகம், யோகம், தவம் போன்றவை)

மெய்ஞானம் தனை = ஆத்மஞானத்தினை,

பலிக்கும் விதம் எவ்வாறு = தோற்றுவிக்கும் செயலை எவ்வாறு செய்யமுடியும் ?

என வினவ = என்று அர்ஜுனன் கேட்க.


இரண்டம் வரி வேறு பாடம் :

மெய்ஞ்ஞாலந்தனை = (அஞ்ஞானிகளுக்கு) உண்மையாகத் தோன்றும் உலகத்தினை,

பரிக்கும் விதம் எவ்வாறு = காக்கும் தன்மை எப்படி?

என வினவ = என அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை : அஞ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு இயலாத நல்லசெய்கையானது (யாகம், யோகம், தவம் போன்றவை) மெய்ஞானத்தை தோற்றுவிக்கும் செயலை எவ்வாறு செய்யமுடியுமென அர்ஜுனன் கேட்க.

 (அல்லது)

அஞ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு இயலாத நல்லசெய்கையானது (யாகம், யோகம், தவம் போன்றவை) (அஞ்ஞானிகளுக்கு) உண்மையாகத் தோன்றும் உலகத்தினை காக்கும் தன்மை எப்படி? என அர்ஜுனன் கேட்க,


பாடல் 60 : கர்மம் இருவிதம்

கருமம் இருவகையாம் காமியம் நிட்காமியமென்று,

இருவகையில் நிட்காமமேதுகாண் என்றவரோ!


பொருள் : 

கருமம் = கர்மமானது,

காமியம் நிட்காமியம் என்று = காம்யம் என்றும் நிஷ்காம்யம் என்றும்,

இருவகையாம் = இருவிதமாகும்.

இருவகையில் = அவ்விருவிதத்துள்,

நிட்காமம் ஏது காண் = நிஷ்காம்ய கர்மம் (சித்தசுத்தி தருவதன் வாயிலாக) ஞானத்திற்கு பகிரங்க ஸாதனமாக இருக்கிறது என்றறிவாயாக,

என்றவரோ = என்றருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : கர்மமானது காம்யம் என்றும் நிஷ்காம்யம் என்றும் இருவகையாகும். அவற்றுள் நிஷ்காம்ய கர்மம் (சித்தசுத்தி - மனத்தூய்மையைத் தருவதன் வாயிலாக) ஞானம் தோன்றுவதற்கு காரணமாகுமென அறிவாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : பந்தத்தை தோற்றுவிக்கின்ற புண்ணிய பாப செய்கைகள் மோட்சத்தை அடைவதற்கு எப்படிக் காரணமாகின்றன? என்று கேட்டால், கர்மம் காம்யம், நிஷ்காம்யம் என்று இரண்டு விதமாக இருக்கின்றது. கர்மபலனை விரும்பி செயல்களைச் செய்தல் காம்யம். அது பந்தகாரணம். கர்மபலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடமையைச் செய்தல் நிஷ்காம்யம். இறைவனுக்கு செய்யும் தொண்டுணர்வோடு பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்கின்றபொழுது அது மனத்தூய்மை என்ற உயர்ந்த பலனைக் கொடுக்கும். அது ஆத்மஞானத்தை பெறுவதற்கான தகுதி ஆகும். ஆகவே இது மோக்ஷகாரணம்.

(அனைத்து அறன் மனத்துக்கண் மாசிலன் ஆதல் - திருக்குறள் 34)


பாடல் 61 : துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

கருமமே காரணமாய்க் கட்டுரைத்தீர் இவ்வுலகை,

ஒருவும் வகையை எனக்கு ஓதென்று அடிபணிய.


பொருள்: 

இவ்வுலகை = இந்த உலகத்தினை

கருமமே காரணமாய் = கர்மத்தையே காரணமாகக் கொண்டதாக,

கட்டுரைத்தீர் = எடுத்துரைத்தீர்கள்,

ஒருவும் வகையை = (இவ்வுலகத் துன்பங்களிலிருந்து) விடுபடும் வழியை,

எனக்கு ஓது = எனக்கு உபதேசித்தருள வேண்டும்

என்று அடிபணிய = என்று அர்ஜுனன் பகவானின் திருவடிகளைப் பணிந்து கேட்க,


பொழிப்புரை : இந்த உலகத்தினை கர்மத்தையே காரணமாகக் கொண்டதாக எடுத்துரைத்தீர்கள். (இவ்வுலகத் துன்பங்களிலிருந்து) விடுபடும் வழியை எனக்கு உபதேசித்தருள வேண்டும் என்று அர்ஜுனன் பகவானின் திருவடிகளைப் பணிந்து கேட்க,


கருத்துரை : ஸகாமமாக செய்யும் கர்மம் பிறவி வருவதற்கும் நிஷ்காமமாக (கர்மயோகம்) செய்யும் கர்மம் பிறவியிலிருருந்து விடுபடுவதற்கும் காரணமாக இருக்கின்றது. எவ்விதமாக கர்மத்தைச் செய்தாலும் துன்பம் வருகின்றது. துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பது கேள்வி.


பாடல் 62 : இவ்வுலகம் உண்மையல!

இந்திர சாலம்போல இவ்வுலகை நம்மிடத்தில்,

தந்திரமாய்த் தோற்றுவித்தோம் சத்தியம்அல என்றவரோ!


பொருள் : 

இந்திர சாலம் போல = மாயவித்தையினால் செய்யப்பட்ட பொருட்களைப்போல, 

இவ்வுலகை நம்மிடத்தில் = இந்த உலகை நாம் (ஸச்சிதாருந்த பிரஹ்மமாகிய) நம்மிடத்தில்,

தந்திரமாய்த் தோற்றுவித்தோம் = மாயையினால் தோற்றுவித்து இருக்கின்றோம்.

சத்தியம் அல என்றவரோ! = (இது) உண்மை இல்லை (மித்யையே)என அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை :

மாயவித்தையினால் செய்யப்பட்ட பொருட்களைப்போல, இந்த உலகை நாம் (ஸச்சிதாருந்த பிரஹ்மமாகிய) நம்மிடத்தில், மாயையினால் தோற்றுவித்து இருக்கின்றோம். (இது) உண்மை இல்லை (மித்யையே)என அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : மாயவித்தை செய்பவனால் தோற்றுவிக்கப்பட்ட பொருள்களை, அவை வெறும் தோற்ற மாத்திரம் உண்மையில் இல்லை என்று புரிந்து கொள்ளுதலே அவற்றை விலக்குதல் ஆகும். அதை போல உலகம் இறைவனின் மாயா சக்தியினால் தோற்றமாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது, ஆகவே, நிரந்தரமான உண்மையில்லை என்று புரிந்து கொள்வதே உலகத்திலிருந்து வரும் துன்பங்களிலிருந்து விலகும் வழி ஆகும்.


பாடல் 63 : பொய்யானது எப்படி தோன்றும் ?


மித்தையெனும் சகத்துநின்பால் விளங்குமோ எனவினவ,

சுத்திதனி லேரசதம் தோன்றுதல்போல் என்றவரோ!


பொருள் : 

மித்தை எனும் சகத்து = பொய் என்று சொல்லப்படும் உலகம், 

நின்பால் விளங்குமோ என வினவ = (உண்மையான) உன்னிடத்தில் (ஸத்ரூபமான ப்ரஹ்மத்திடத்தில்) தோன்றுமோ? என்று அர்ஜுனன் கேட்க, 

சுத்திதனில் ரசதம் தோன்றுதல் போல் = சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல (ஸத்வஸ்துவான பிரஹ்மத்தினிடத்தில் பொய்யான உலகம் தோன்றுகிறது),

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : பொய் என்று சொல்லப்படும் உலகம் உண்மையான உன்னிடத்தில் (ஸத்ரூபமான ப்ரஹ்மத்திடத்தில்) தோன்றுமோ? என்று அர்ஜுனன் கேட்க, சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல, (ஸத்வஸ்துவான பிரஹ்மத்தினிடத்தில் பொய்யான உலகம் தோன்றுகிறது) என்று அருளிய பகவான் நீர் தானோ!


கருத்துரை : இல்லாத ஒரு பொருள், இருக்கின்ற ஒன்றின்மேல் இருப்பதுபோல தோன்றுவதற்கு மித்யா என்று பெயர். மணல்வெளியில் இருக்கின்ற சிப்பியின் மேல் சூரிய ஒளிபட்டு வெள்ளிக்காசு கிடப்பது போலத் தோன்றுகின்றது. அதுபோல, ஒரே உண்மைப் பொருளான பிரம்மத்தின் மேல் மாயையினால் உலகம் இருப்பதுபோலத் தெரிகின்றது.


பாடல் 64 : முன் இருந்ததா இவ்வுலகம்?

அயல்வெள்ளி சுத்தியின்மேல் ஆரோபி தங்கூடும்,

இயலுள்ள சகமும்முன்வே றிருந்ததுமுண் டோவெனவே!


பொருள் :

அயல் வெள்ளி = வேறிடத்தில் இருக்கும் வெள்ளியானது, 

சுத்தியின் மேல் ஆரோபிதம் கூடும் = சிப்பியில் கற்பிதமாகத் தோன்றுதல் (வியாவகாரிக உலகில்) நடக்கும்.

இயல் உள்ள சகமும் = இருப்பதாகத் தோன்றும் இந்த உலகமும்,

முன் = ப்ரஹ்மத்தின் மேல் விளங்குவதற்கு முன்னர், 

வேறு இருந்ததும் உண்டோ = வேறாகத் தனியே இருந்ததும் உண்டா? 

எனவே = என அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை : வேறிடத்தில் தனியே இருக்கும் வெள்ளியானது, சிப்பியில் கற்பிதமாகத் தோன்றுதல் (வியாவகாரிக உலகில்) நடக்கும். இருப்பதாகத் தோன்றும் இந்த உலகமும் ப்ரஹ்மத்தின் மேல் விளங்குவதற்கு முன்னர், வேறாகத் தனியே இருந்ததும் உண்டா?, என அர்ஜுனன் கேட்க,


பாடல் 65 : இல்லாததுவும் தோன்றும்!

மனமயக்கம் பிடிக்கிலில்லா வத்துவுந்தோன் றிடுமதுவோ,

கனவில்விண்ணில் தான்பறக்கக் கண்டதுபோல் என்றவரோ!


பொருள் : 

மனமயக்கம் பிடிக்கில் = மனமயக்கம் ஏற்படுகின்ற பொழுது,

இல்லா வத்துவும் தோன்றிடும் = இல்லாத பொருளும் கூட இருப்பதாகத் தோன்றும். 

அதுவோ = அது எது போல என்றால், 

கனவில் விண்ணில் தான் பறக்கக் கண்டது போல் = கனவில் ஆகாயத்தில் தான் பறப்பதாக காண்பது போல, 

என்றவரோ = என்றருளிய அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : மனமயக்கம் ஏற்படுகின்ற பொழுது இல்லாத பொருளும் கூட இருப்பதாகத் தோன்றும். அது எது போல என்றால், கனவில் ஆகாயத்தில் தான் பறப்பதாக காண்பது போல என்றருளிய அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : உலகம் பிரம்மத்தின் மேல் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால், முன்னில்லாத உலகம் கற்பனை மாத்திரமாகத் தோன்ற முடியுமா? என்பது கேள்வி. மாயையினால், மனத்தினால் எதையும் (இல்லாததையும்) கற்பனை பண்ண முடியும் என்பது பதில்.


பாடல் 66 : உலகம் விளங்குவது எதனால்?

கனவுபோல்பிர பஞ்சமென்றீர் கண்விழித்தால் கனவுபொய்யாம்,

வினவுசகம் தினமும்மெய்யா விளங்குவதென் சொல்லுமென.


பொருள் : 

கனவு போல் பிரபஞ்சம் என்றீர் = கனவு போல உலகத் தோற்றம் (மித்யையானது) என்று சொன்னீர்கள். 

கண் விழித்தால் கனவு பொய்யாம் = கண் திறந்தவுடன் கனவு மறைந்து விடுகிறது. 

வினவு சகம் = நான் கேட்கின்ற இவ்வுலகமோ, 

தினமும் மெய்யா விளங்குவது என் = எப்பொழுதும் உள்ளதாக விளங்குவது ஏன்? 

சொல்லும் என = சொல்லுங்கள் என்று அர்ஜுனன் வினவ.


பொழிப்புரை : 

கனவு போல உலகத் தோற்றம் (மித்யையானது) என்று சொன்னீர்கள். கண் திறந்தவுடன் கனவு மறைந்து விடுகிறது. நான் கேட்கின்ற இவ்வுலகமோ, எப்பொழுதும் உள்ளதாக விளங்குவது ஏன்? சொல்லுங்கள் என்று அர்ஜுனன் வினவ.


பாடல் 67 : மெய்யறிவு வந்தால் மறைந்துவிடும்

மெய்யாக விளங்குவது மெய்ஞானம் வருமளவும்,

பொய்யாம்பின் கனவதுபோல் போதம்வரில் என்றவரோ!


பொருள் : 

மெய்யாக விளங்குவது = உலகம் உண்மையான விளங்குவது,

மெய்ஞானம் வருமளவும் = மெய்யறிவு வரும் வரைதான், 

பின் = (வேதாந்த சாஸ்த்ர சிரவணத்தின்) பின்னர், 

போதம் வரில் = மெய்ஞானம் வரும்பொழுது,

கனவது போல் = கனவு போல (உலகமும்),

பொய்யாம் = பொய்யாய் மறைந்துவிடும்,

என்றவரோ = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : உலகம் உண்மையான விளங்குவது மெய்யறிவு வரும் வரைதான். (வேதாந்த சாஸ்த்ர சிரவணத்தின்) பின்னர் மெய்ஞானம் வரும்பொழுது கனவு போல (உலகமும்) பொய்யாய் மறைந்துவிடும், என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : உலகம் மெய்யாக விளங்குவதன் காரணமென்ன என்ற அர்ஜுனனின் வினாவிற்கு பகவானின் பதில் அஞ்ஞானத்தினால் உலகம் மெய்யாக விளங்குகிறது என்பதே ஆகும். 'மெய்ஞானம் வருமளவும்' என்று இதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.


பாடல் 68 : ஞானிகளுக்கும் உலகம் தெரிவது எதனால்?

முன்புகண்ட கனவுபொய்யாம் முழிசாக்ரம் போலவென்றீர்,

பின்புமுக்தித் தசையடைந்தும் பிரபஞ்சம்நிற்ப தேதெனவே.


பொருள் : 

முழி சாக்ரம் = கண் விழிப்பு வந்த நிலையில்,

முன்பு கண்ட கனவு பொய்யாம் போல என்றீர் = முன்பு உறக்கத்தில் கண்ட கனவு பொய்யாகிவிடுவது போல, விழிப்பு நிலையில் தோன்றுகின்ற உலகமும் ஞான விழிப்பு வந்தவுடன் பொய்யாகி விடும் என்று சொன்னீர்.

முக்தித் தசை அடைந்தும் பின்பு = ஞானம் வந்து முக்திநிலை (ஞான விழிப்பு) அடைந்த பின்பும்

பிரபஞ்சம் நிற்பது ஏது = உலகமானது (கனவைப் போல விழித்தவுடன் மறைந்து விடாமல்) தோன்றுவது எதனால்,

எனவே = என்று அர்ஜுனன் கேட்க..


பாடல் 69 : தோற்றத்தில் இருந்தாலும் பயன்படாது

தெரிந்தவர்க்குத் தோற்றுவது தெத்தபடம் போல்வதல்லால்,

பரந்தசகம் காரியத்தில் பயன்படாது என்றவரோ!


பொருள் :

தெரிந்தவர்க்குத் தோற்றுவது = மெய்ப்பொருளை அறிந்தவருக்கு (உலகம்) தோன்றுவது, 

தெத்தபடம் போல்வது அல்லால் = எரிந்த துணியானது தோன்றுவது போல் அல்லாமல், 

பரந்தசகம் காரியத்தில் பயன்படாது = விரிந்த இந்த உலகமானது விவகாரத்திற்கு (இன்பதுன்பங்களைக் கொடுப்பதில்) பயன்படாது, 

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : மெய்ப்பொருளை அறிந்தவருக்கு (உலகம்) தோன்றுவது எரிந்த துணியானது தோன்றுவது போல் அல்லாமல் விரிந்த இந்த உலகமானது விவகாரத்திற்கு (இன்பதுன்பங்களைக் கொடுப்பதில்) பயன்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : மடித்து வைக்கப்பட்ட துணி நெருப்பில் எரிந்து போனாலும் அப்படியே இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் அது முன்புபோல விவகாரத்திற்குப் பயன்படாது. அதுபோல் ஆத்ம ஞானத்திற்குப்பிறகு உலகம் தோற்றத்தில் இருந்தாலும் ஞானிக்கு அது பயன்படுவது இல்லை. சுகத்தையும் துக்கத்தையும் தருவதாக இருப்பதில்லை.


பாடல் 70 : அஞ்ஞான காரியம் உடனே போகாதது ஏன் ?

கர்மவினை அஞ்ஞானம் கடந்துமதன் காரியமாம், 

புன்மையுறு மெய்யுடனே போகாத தேதெனவே.


பொருள் :

கர்மவினை அஞ்ஞானம் கடந்தும் = செயலும், முயற்சியும், அஞ்ஞானமும் ஞானத்தினால் நீங்கிய பிறகும், 

அதன் காரியமாம் புன்மையுறு மெய் = அஞ்ஞான காரியமான இழிவுறு உடலானது, 

உடனே போகாதது ஏது = உடனே அழிந்து போகாதது எதனால்,

எனவே = என்று அர்ஜுனன் கேட்க…


பொழிப்புரை : செயலும், முயற்சியும், அஞ்ஞானமும் ஞானத்தினால் நீங்கிய பிறகும் அஞ்ஞான காரியமான இழிவுறு உடலானது உடனே அழிந்து போகாதது எதனால்?, என்று அர்ஜுனன் கேட்க...


பாடல் 71 : சிறிது காலம் இருக்கும்!

வெட்டவிழும் மரம்பசந்து விளங்குதல்போல் சிலகாலம், 

நட்டகன்மம் மாய்ந்துமங்கம் நடித்திடுங்காண் என்றவரோ!


பொருள் :

வெட்டவிழும் மரம் = வெட்டிய உடன் கீழே விழுகின்ற மரமானது,

சிலகாலம் விளங்குதல் போல் = சிறிது காலத்திற்கு பசுமையாகவே தோன்றுவது போல, 

நட்ட கன்மம் மாய்ந்தும் = தான் முன்பு செய்த கர்மம் அழிந்து போனாலும், 

அங்கம் நடித்திடும் காண் = (அதன் காரியமாகிய) உடல் சிறிது காலம் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நீ அறிவாயாக,

என்றவரோ = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : வெட்டிய உடன் கீழே விழுகின்ற மரமானது, சிறிது காலத்திற்கு பசுமையாகவே தோன்றுவது போல, தான் முன்பு செய்த கர்மம் அழிந்து போனாலும், அதன் காரியமாகிய உடல் சிறிது காலம் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நீ அறிவாயாக, என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : வினைகளுக்குக் காரணமான அஞ்ஞானம், ஞானத்தினால் அழிந்து போன பிறகும், தற்போது உள்ள இந்த உடல் தோன்றுவதற்கு காரணமான பிராரத்த வினை அனுபவித்துத்தான் தீரும். ஆகவே, அது இருக்கும் வரை உடலானது இருந்து போகும்.


பாடல் 72 : ஆத்மா பலவா?

சென்மம்போய் முக்தியினை சேரச்சிலர் இருக்கத்,

தொன்மை ஆன்மா பலவோ சொரூபம் பகரும் என.


பொருள் :

சிலர் சென்மம்போய் முக்தியினை சேர = சில மக்கள் முக்தி அடைந்து பிறவி விட்டுப் போய்விட, 

சிலர் இருக்க = சில மக்கள் (முக்தி அடையாமல் பிறவியுடன்) இங்கிருப்பதனால், 

தொன்மை ஆன்மா பலவோ = அனாதியான ஆத்மா அநேகமா?  

சொரூபம் பகரும் = (அவ்வாத்மாவின்) உண்மையைச் சொல்லும் என்று அர்ஜுனன் கேட்க..


பொழிப்புரை : சில மக்கள் முக்தி அடைந்து பிறவி விட்டுப் போய்விட, சில மக்கள் பிறவியுடன் இங்கிருப்பதனால், அனாதியான ஆத்மா அநேகமா? (அவ்வாத்மாவின்) உண்மையைச் சொல்லும் என்று அர்ஜுனன் கேட்க..


கருத்துரை : ஆத்மா ஒன்று தான் என்றால் ஒருவர் முக்தி அடைந்தால் அனைவரும் முக்தி அயை வேண்டும், அப்படிக் காணப்படவில்லை என்பதால், ஒவ்வொருவருள்ளும் தனத்தனியே ஆத்மா இருக்கிறதா? என்பது அர்ஜுனனின் ஸந்தேஹம்.


பாடல் 73 : ஆன்மா ஒருவனே!

பிரம்மமென்றும் ஈசனென்றும் பெருகுபல ஜீவனென்றும், 

உரைமயக்கம் அலதுஆன்மா ஒருவனே என்றவரோ!


பொருள் : 

பிரம்மம் என்றும் = நிர்குண பிரம்மம் என்றும்,

ஈசன் என்றும் = ஸகுண ஈஸ்வரன் என்றும்,

பெருகு பல ஜீவன் என்றும் = பலவாகப் பெருகியிருக்கின்ற ஜீவன்கள் என்றும், 

உரை மயக்கம் அலது = சொல்வது (அறியாமையினால் ஏற்பட்ட) தவறான அறிவேயல்லாமல், 

ஆன்மா ஒருவனே என்றவரோ! = ஆத்மா ஒன்றுதான் என்பதே உண்மை என்று அருளிய பகவான் நீர் தானோ!


பொழிப்புரை : நிர்குண பிரம்மம் என்றும், ஸகுண ஈஸ்வரன் என்றும், பலவாகப் பெருகியிருக்கின்ற ஜீவன்கள் என்றும், சொல்வது (அறியாமையினால் ஏற்பட்ட) தவறான அறிவேயல்லாமல் ஆத்மா ஒன்றுதான் என்பதே உண்மை என்று அருளிய பகவான் நீர் தானோ!


கருத்துரை : ஒன்றேயான இரண்டற்ற நிர்குண பிரம்மமே, ஸகுண ஈஸ்வரனாகவும் அறியாமையோடு கூடிய பல ஜீவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.


பாடல் 74 : பலவாய் தோன்றுவது எதனால்?

ஏகம்தான் ஆன்மா எனும்வகையே மெய்யானால்,

ஆகந்தோ றும்பலவாய் அமர்ந்ததென்னோ சொல்லுமென!


பொருள் :

ஆன்மா ஏகம் தான் = ஆத்மா ஒன்றுதான் 

எனும் வகையே மெய்யானால் = என்று சாஸ்த்ரம் கூறும் முறையே உண்மையானால்,

ஆகம் தோறும் பலவாய் = உடல்கள் தோறும் பலவாக (ஒவ்வொன்றிலும் தனித்தனியாக),

அமர்ந்ததென்னோ சொல்லுமென! = 'நான்' என்று தோன்றுவது எதனாலோ?, சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை : ஆத்மா ஒன்றுதான் என்று சாஸ்த்ரம் கூறும் முறையே உண்மையானால் உடல்கள் தோறும் பலவாக (ஒவ்வொன்றிலும் தனித்தனியாக) 'நான்' என்று தோன்றுவது எதனாலோ?, சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க,


பாடல் 75 : தோன்றுவது பிரதிபிம்பம்

பலகடத்தில் சலத்தூடு பானுபிம்பம் தோன்றுதல்போல்,

தொலைவில்புத்தி தொறுமான்மாத் தோன்றுதல்கா ணென்றவரோ!


பொருள் :

பானு பிம்பம் = சூரியனின் பிரதிபிம்பமானது,

பல கடத்தில் சலத்தூடு = பல குடங்களில் உள்ள நீரில்,

தோன்றுதல் போல் = பலவாக - தனித்தனியே - தோன்றுவது போல,

தொலைவில் புத்தி தொறும் = எண்ணிக்கை இல்லாத (அநேக) மனங்கள் தோறும் (ஒவ்வொன்றிலும்),

ஆன்மா தோன்றுதல் காண் = ஆத்மாவின் பிரதிபிம்பம் தோன்றுகின்றது, அறிவாயாக! 

என்றவரோ! = என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : சூரியனின் பிரதிபிம்பமானது பல குடங்களில் உள்ள நீரில் பலவாக - தனித்தனியே - தோன்றுவது போல, எண்ணிக்கை இல்லாத (அநேக) மனங்கள் தோறும் (ஒவ்வொன்றிலும்) ஆத்மாவின் பிரதிபிம்பம் தோன்றுகின்றது, அறிவாயாக! என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : சூரியன் ஒன்றுதான். அதன் பிரதிபிம்பம் பல நீர்நிலைகளில் பலவாகத் தோன்றுவது போல, ஆத்மா ஒன்றுதான், அதனுடைய பிரதிபிம்பம் பல மனங்களில் பலவாகத் தோன்றுகின்றது.


பாடல் 76 : முக்தி யாருக்கு?

ஆதித்தன் போலான்மா அளவில்புத்தி தொறும்தோன்றில்,

சாதிக்கும் முத்தி எவர்தமக்கு அதனைச் சாற்றும் என,


பொருள் :

ஆதித்தன் போல் = (ஒன்றான) சூரியன் பல நீர்நிலைகளில் பிரதிபிம்பமாகி பலவாகத் தோன்றுவது) போல,

ஆன்மா அளவில் புத்திதொறும் தோன்றில் = (ஒன்றான) ஆத்மாவும் எண்ணற்ற மனங்களில் பிரதிபிம்பமாகி பலவாகத் தோன்றுகின்றது என்றால், 

சாதிக்கும் முத்தி எவர் தமக்கு = (சிரவணாதி ஸாதனங்களால்) அடையும் முக்தி (மனம், ஆத்மா இரண்டில்) யாருக்கு?,

அதனைச் சாற்றும் என = அதனைச் சொல்லும் என அர்ஜுனன் வினவ.


பொழிப்புரை :

(ஒன்றான) சூரியன் பல நீர்நிலைகளில் பிரதிபிம்பமாகி பலவாகத் தோன்றுவது) போல, (ஒன்றான) ஆத்மாவும் எண்ணற்ற மனங்களில் பிரதிபிம்பமாகி பலவாகத் தோன்றுகின்றது என்றால், (சிரவணாதி ஸாதனங்களால்) அடையும் முக்தி (மனம், ஆத்மா இரண்டில்) யாருக்கு?, அதனைச் சொல்லும் என அர்ஜுனன் வினவ.


பாடல் 77 : பந்தமும் முக்தியும் மனதிற்கே !

பந்தம்முக்தி தானுமந்தப் பரந்தபுத்தி தனக்கேயாம்,

அந்தபிம்பம் தனக்கிலையென் றறிவுவரச் சொன்னவரோ.


பொருள் :

பந்தம் முக்தி தானும் = பந்தமும் முக்தியும் 

அந்தப் பரந்த புத்தி தனக்கேயாம் = முன் கூறிய (விஷயங்களை நோக்கி) விரிந்த (பிரதிபிம்பத்தோடு கூடிய) மனதிற்குத்தான். 

அந்த பிம்பம் தனக்கிலை என்று = அந்த (பிரதிபிம்பங்களுக்கு மூலமான) ஆத்மாவாகிய தனக்கு (பந்தமும் முக்தியும்) இல்லை, 

அறிவு வரச் சொன்னவரோ = என்று அர்ஜுனனுக்கு அறிவு ஏற்படும்படி உபதேசித்த பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : பந்தமும் முக்தியும் முன் கூறிய (விஷயங்களை நோக்கி) விரிந்த (பிரதிபிம்பத்தோடு கூடிய) மனதிற்குத்தான். அந்த (பிரதிபிம்பங்களுக்கு மூலமான) ஆத்மாவாகிய தனக்கு (பந்தமும் முக்தியும்) இல்லை, என்று அர்ஜுனனுக்கு விவேகம் ஏற்படும்படி உபதேசித்த பகவான் நீர்தானோ!


கருத்துரை : பந்தம் = கட்டு = தளை. அஹங்காரம், உடல் போன்ற அநாத்ம விஷயங்களில் கொள்ளும் நான், எனது எனும் பற்று (அபிமானம்) பந்தமாகும்.

முத்தி = மோக்ஷம் = விடுதலை . அது அஹங்காரம் முதலான அநாத்ம விஷயங்கள் அனைத்தில் நான் என்ற தவறான எண்ணத்தை விட்டு விடுதலால் ஏற்படுவது முக்தி ஆகும். எல்லாத் துன்பங்களும் விலகி, ஆத்மாநந்தத்தை - பேரின்பத்தை - அடைந்த நிலை.

உடலும் மனமும் ஜடமானவை. மனதில் சைதன்யமான ஆத்மாவின் பிரதிபிம்பம் ஏற்பட மனது சேதனத்தன்மை பெறுகின்றது, (சூரிய ஒளிபட்ட கண்ணாடி பிரகாசத்தை அடைவதுபோல). உயிர் பெற்ற மனமானது, 'உடலை நான்' என்று நினைக்கின்றபொழுது பந்தத்தையும் 'ஆத்மா நான்' என்றறிகின்றபோது முக்தியையும் அடைகிறது. ஆத்மா இரண்டிற்கும் சாக்ஷி மாத்திரமாக இருக்கின்றது. அது பந்தத்தையும் அடைவதில்லை, முக்தியையும் அடைவது இல்லை.


பாடல் 78 : பல ஜீவன்கள் எதனால்?

பரமேகம் ஆயுமதில் பலசீவர் ஏதெனவே,

ஒரு கடலில் பலகுமிழி உதிப்பதுபோல் என்றவரோ!


பொருள் : 

பரமேகம் ஆயும் அதில் = பரமாத்மா ஒன்றாக இருந்தாலும் அதனிடத்தில்,

பல சீவர் ஏது எனவே = பல ஜீவர்கள் தோன்றுவது எப்படி? என அர்ஜுனன் வினவ,

ஒரு கடலில் பல குமிழி = கடல் ஒன்றாக இருந்தாலும் அதில்,

பல குமிழி உதிப்பது போல் = பல நீர்க்குமிழிகள் (காற்றினால்) தோன்றுவது போல, (மாயையினால் பல ஜீவர்கள் தோன்றுகின்றனர்)

என்றவரோ! = என்றருளிய பகவான் நீதானோ!


பொழிப்புரை : பரமாத்மா ஒன்றாக இருந்தாலும் அதனிடத்தில் பல ஜீவர்கள் தோன்றுவது எப்படி? என அர்ஜுனன் வினவ, கடல் ஒன்றாக இருந்தாலும் அதில் பல நீர்க்குமிழிகள் (காற்றினால்) தோன்றுவது போல, (மாயையினால் பல ஜீவர்கள் தோன்றுகின்றனர்) என்றருளிய பகவான் நீதானோ!


பாடல் 79 : பேரின்பம் எப்படித் தோன்றும்?

சீவனது தானென்றும் சேரும்பிரம்மமென்றும்,

ஆவதுவோ பேரின்பம் ஆங்கதெனக்கு ஓதுமென!


பொருள் :

தான் ஜீவன் என்றும் = தான் (அல்ப அறிவு, அல்ப சக்தி படைத்தவன், கர்த்தா, கர்மபல போக்தா, பிறந்து இறப்பவன், படைக்கப்பட்டவன், ஸம்ஸாரியாகிய) ஜீவன் என்றும்,

சேரும் அது பிரம்மம் என்றும் = சென்று அடையத்தக்கது (பிறப்பு இறப்பில்லாத ஆண்டவனாகிய) ப்ரஹ்மம் என்றும் இருந்து,

ஆவதுவோ பேரின்பம் = (ஸாதனைகளால் மரணத்திற்குப் பின்னர்) ஜீவன் ப்ரஹ்மமாக ஆவதுதான் பேரின்பமா? 

ஆங்கு அது எனக்கு ஓதும் என! = என்று இதன் உண்மையை எனக்கு அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க,


பொழிப்புரை : தான் (அல்ப அறிவு, அல்ப சக்தி படைத்தவன், கர்த்தா, கர்மபல போக்தா, பிறந்து இறப்பவன், படைக்கப்பட்டவன், ஸம்ஸாரியாகிய) ஜீவன் என்றும், சென்று அடையத்தக்கது (பிறப்பு இறப்பில்லாத ஆண்டவனாகிய) ப்ரஹ்மம் என்றும் இருந்து, (ஸாதனைகளால் மரணத்திற்குப் பின்னர்) ஜீவன் ப்ரஹ்மமாக ஆவதுதான் பேரின்பமா?, இதன் உண்மையை எனக்கு அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க,


பாடல் 80 : ஒன்றே, இரண்டிலை!

ஏகம்பி ரம்மம்இ ரண்டிலைநீ வேறுமலை,

சோகமுறும் பேதமறில் தோன்றுமின்பம் என்றவரோ!


பொருள் :

பிரம்மம் ஏகம் = ப்ரஹ்மம் ஒன்று தான் (இருக்கிறது), 

இரண்டு இலை = (ப்ரஹ்மத்திற்கு வேறாக) இரண்டாவதொன்று இல்லை, 

நீ வேறும் அலை = நீ ப்ரஹ்மத்திற்கு வேறானவன் இல்லை,

சோகம் உறும் பேதம் அறில் = துன்பத்தைக் கொடுக்கும் (இங்கு பல்வேறுபட்ட உலகம் இருக்கின்றது, நான் ப்ரஹ்மத்திற்கு வேறாக இருக்கிறேன் எனும்) வேறுபாட்டுணர்வு நீங்கிவிட்டால்,

இன்பம் தோன்றும் என்றவரோ! = பேரின்பமானது தோன்றும் என்று அருளிய பகவான் நீர்தானோ!


பொழிப்புரை : ப்ரஹ்மம் ஒன்று தான் (இருக்கிறது), (ப்ரஹ்மத்திற்கு வேறாக) இரண்டாவதொன்று இல்லை, நீ ப்ரஹ்மத்திற்கு வேறானவன் இல்லை. துன்பத்தைக் கொடுக்கும் (இங்கு பல்வேறுபட்ட உலகம் இருக்கின்றது, நான் ப்ரஹ்மத்திற்கு வேறாக இருக்கிறேன் எனும்) வேறுபாட்டுணர்வு நீங்கிவிட்டால், பேரின்பமானது தோன்றும் என்று அருளிய பகவான் நீர்தானோ!


கருத்துரை : பிம்பம் ஒன்றுதான் உண்மைப்பொருள், பிரதிபிம்பம் தோற்றமாத்திரம். உடலிலும் மனதிலும் தோன்றியிருக்கும் தற்காலிகமான உயிர்த் தன்மையை உடலோடு இணைத்து, அந்த உடலும் மனமுமே நான் என்று கருதியது அறியாமை. உடலும் மனமும் தானே இயங்கக்கூடியவையல்ல, உடலுக்கு வேறான ஆத்மாவின் சம்பந்தத்தினாலேயே இவை இயக்கம் பெற்றிருக்கின்றன. இதுவரை உடலிலிருந்த நான் என்ற அகங்காரம் வெறும் பிரதிபிம்பம் மாத்திரமே. அதனுடைய உண்மை ஆத்மா. ஆகவே, பிரதிபிம்பம் நானல்ல உண்மையான ஆத்மாவே நான், ஆத்மாவே ப்ரஹ்மம் என்ற ஞானம் வருகின்ற பொழுது பேரின்பம் தோன்றும்.

ஆகவே, பிரதிபிம்பம்(ஜீவன்) பிம்பத்தை(பிரம்மத்தை) அடைகின்றது என்பதில்லை; பிரதிபிம்பம் உண்மை இல்லை என்று விடுத்து, பிரம்மமே உண்மை என்றிருக்கின்ற அத்வைதநிலையே பேரின்பத்தை தரும்.