Apr 8, 2020

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 9


மோக்ஷஸ்வரூபம் - வீடு எது?

இருள்நீங்கி இன்பம் பயக்கும்
வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி. 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352)

மற்றீண்டு வாரா நெறி
மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ்ஞானமும் புண்ணிய பாபமும் இல்லாமல் போவதால் பிறவாத நிலையை அடைகிறார். இது விதேகமுக்தி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி. (திருக்குறள் 356)

வானோர்க்கு உயர்ந்த உலகம்
குளிர், வெப்பம், இன்பம், துன்பம் இவை வந்து போகக்கூடியவை, நிலையில்லாதவை; இறைவனால் நடத்தப்படுபவை. இந்த உடல், உலகம், உயிர்வாழ்க்கை, உறவுகள், செல்வம், அனைத்தும் இறைவனால் அருளப் பட்டவை; இறைவன் அருளில்லாமல் எனது அறிவு, திறமை இல்லை; என்னுடையது என்றும் எதுவும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்று நினைந்து எப்பொழுதும் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருப்பவன் உபாஸகன். உலக சுகபோகங்களில் பற்றின்றி இறைவனை அடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்பொழுதும் தியானித்து கொண்டிருக்கின்ற அவன் வானோர்க்கும் உயர்ந்த உலகை - ப்ரஹ்மலோகத்தை - அடைவான். அவன் திரும்பி வருவதில்லை. இது கிரமமுக்தி. 

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346).

இறுதியாக…

இந்தக்கட்டுரையில் திருக்குறளிலிருந்து மட்டுமே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. அறம் பொருள் இன்பம் வீடு, இல்லறம் துறவறம், புண்ணியம் பாபமுமாகிய வினைப்பயனின் விளைவாக பல பிறவிகள், அஜ்ஞானத்தினால் பிறவியும் ஞானத்தினால் மோக்ஷமும்,  அருவமும் உருவமாய் உள்ள இறைதத்துவம் போன்ற அனைத்தும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே ஹிந்துதர்ம சாஸ்திரங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்படவில்லை.

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே 
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
(மாங்குடி மருதனார் - திருவள்ளுவமாலை)

வேதங்களுக்கு மறை என்றொரு பெயருண்டு. திருக்குறளுக்கு தமிழ்மறை என்றொரு பெயருண்டு. மறையின் பொருளை எளிய தமிழில் சொன்னதால்தான் அப்பெயர் வந்தது. திருக்குறள் வேதப் பொருளாய் விளங்குகின்றது என்பதை தீதற்றோர் நன்கறிவர். ஹிந்துத்தமிழர்களாகிய நாமும் திருக்குறளையும் வேதநெறியையும் கசடறக் கற்றறிந்து நிற்போம் அதற்குத் தக!

தமிழர்மதமும் ஹிந்துமதமும் வேறுவேறென்று தவறாக அரசியல்  செய்துவருகிறார்கள். ராமாயணத்தை தமிழில் படைத்த கம்பரும் பாரதத்தை தமிழில் செய்த வில்லிபுத்தூராரும் நல்லாப்பிள்ளையும் ஹிந்துத்தமிழர் தானே! விநாயகர் அகவல் செய்த அவ்வையாரும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் திருமுறை பாடிய நாயன்மார்களும் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களும் ஹிந்துத்தமிழர்கள் தானே!

தமிழர் மதமும் இந்து மதமும் ஒன்று தான். சங்க இலக்கியம் தொட்டு பாரதியார் வரை பக்தியுள்ள பண்பாடுள்ள அனைத்து தமிழரறிஞர்களும் ஹிந்துக்களே!
திருக்குறள் வேததர்மத்தைத் தமிழில் சொன்ன நீதி இலக்கியங்களும் தலையாயது ஆகும்.


முற்றும்

Apr 7, 2020

ஸநாதன தர்மமும் திருக்குறளும் -8

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 8


ஸாதநஸ்வரூபம் - வீடுபெறும்வழி

தலைப்பட்டார் தீரத் துறந்தார்
இறைவன் அருளாலும் தன் புண்ணியச் சேர்க்கையினாலும் உலகின் நிலையாமையைப் புரிந்து கொள்ளுகின்ற பக்குவம் அடைந்த ஜீவர்கள் பிறவியில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். குருவருளால் மெய்யுணர்ந்து, அவா அறுத்து, வீடுபேற்றை அடைய விழைகிறார்கள். அதற்குத் துறவறம் உறுதுணையாக இருக்கிறது.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (திருக்குறள் 23)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (திருக்குறள் 348)

சார் தரும் நோய் சார்தரா!
இந்த உலகப்பொருள்கள் எல்லாம் மெய்ப்பொருளான பரம்பொருளை சார்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு உலகப்பொருள்களின் மேல் இருக்கும் சார்பை - பற்றை - விடுத்து பரம்பொருளை சார்ந்து வாழுகின்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டால், துன்பத்தைத் தருகின்ற பிறவியில் இருந்து விடுவித்து பிறவாத நிலையை அருளுவார் இறைவன்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய்.
(திருக்குறள் 359)

பற்றுக பற்றற்றான் பற்றினை
உலகப்பற்றுகள் நம்மை இன்ப துன்பங்களில் ஆழ்த்துகின்றன; பிறப்பு இறப்புகளில் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொண்டு உலகப் பற்று களிலிருந்து விடுபடுவதற்கு பற்றற்ற இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனை அடைவதற்கு சாதனங்களான கர்மயோகம், உபாஸந(தியான)யோகம் ஞானயோகம் ஆகியவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள் 350)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் (திருக்குறள் 10)

ஞானயோகம்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
விவேகம் உடைய மனிதர்கள் உலகின் நிலையற்ற தன்மையை அறிந்து கொண்டு நிலையான பொருள் எது என்று தேடி நிலையான பொருளை பற்றி பேசுகின்ற தத்துவநூல்களை குரு வாயிலாக முறையாக பயின்று மெய்யறிவைப் பெறுகிறார்கள். மெய்யறிவின் வாயிலாக மெய்ப்பொருளை காண்கிறார்கள்.

நம்முடைய பிறவிக்குக் காரணம் அறியாமையே என்று முன்பு சொல்லப்பட்டது. அப்படி அறியாமை நீங்குவதற்கு ஒவ்வொரு பொருளினினுடைய தன்மையையும் ஆராய்ந்து எல்லா பொருள்களிலும் மெய்ப்பொருளாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்வதே மெய்யறிவு. ஆத்மஞானம் அல்லது ப்ரஹ்மஞானம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருக்குறள் 355)

தொடரும்...

Apr 6, 2020

அறம் செய விரும்பு - 22

சுத்தமானதும் சுத்தமாக்குவதும்
எப்போதும் சுத்தமானவை

நெருப்பு, நீர்நிரம்பிய கமண்டலு, பசுவின் பின்புறம், யானையின் முன்புறம், ஆடு-குதிரைவாய், குழந்தை, பிரம்மசாரி எடுத்த பிக்ஷை அன்னம், சூரியகிரணம், காற்று, தேனீ, ஜலத்திலுள்ள உயிரினங்கள், உபனயத்திற்குமுன் உள்ள பாலன், விவாகமாகாத வயதுக்குட்பட்ட கன்னி, வாகனம், ஓடம், வழி, புல்தரை இவை எப்போதும் சுத்தமானவை.

எப்போதும் அசுத்தமானவை

மலம், மூத்திரம், ரத்தம், கொழுப்பு முதலியவை.

சுத்தி பெற உதவுபவை

காலம், நெருப்பு, ஸம்ஸ்காரம், காற்று, மண், ஞானம், தவம், பச்சாதாபம், உபவாஸம் இவை சுத்திபெற விரும்புபவனுக்கு உதவுபவை.

சிலவற்றில் சூழ்நிலையிலுள்ளவை ஒட்டிக்கொண்டு அழுக்காகப்பற்றும். இவை அப்பழுக்கு, லேபம். உயிரினங்களின் கழிவுப்பொருள் உடலின் உள்ளிருந்து வெளிப்படும்போது அழுக்காகும். இவை மலம். இவ்விரு அழுக்குகளையும் செயற்கையாகப் போக்க முடியும். எண்ணத்தில் அல்லது அறிவில் அழுக்கிருந்தால் உபவாஸம், பச்சாத்தாபம், தவம், ஞானம் இவை மட்டுமே சுத்தப்படுத்தும். 

தங்கம், சங்கு, முத்து, ரத்தினம், வெள்ளி இவைகளில் உள் அழுக்கு இல்லை. அதனால் மேல் அழுக்கை ஜலம் சாம்பல் மண் இவற்றால் சுத்தி செய்யலாம்.

தாமிரம், இரும்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் முதலியவற்றை உப்பு, புளி, ஜலம் இவற்றால் சுத்தப்படுத்தலாம். அதிக அழுக்கைப்போக்க நெருப்பும் உதவும்.

பட்டு கம்பளம் நார்மடி முதலியவை குறைவான அசுத்தியானால் ஜலம் தெளிப்பதால் சுத்தி. அசுத்தி அதிகமானால் உவர்மண், ஜலம் இவற்றில் சுத்தி.

பஞ்சுடன் கூடிய மெத்தை, தலைகாணி, தடிப்பான விரிப்பு முதலியவை வெயிலில் உலர்த்துவதால் சுத்தி. மூங்கிலால் செய்யப்பட்ட பாய், கூடை, விசிறி, முறம், சல்லடை முதலியவை அழுக்குக் குறைவில் ஜலம் தெளித்தலாலும் அதிக அழுக்கில் அலம்புவதாலும் சுத்தி. மண்பாத்திரத்தை நெருப்பிலிடுவதால் சுத்தி, தானியக்குவியலில் அசுத்தி கண்டால் அசுத்தியுள்ள பகுதியை அகற்றி மற்றதை ஜலம் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். அதிக அசுத்தியானால் நீரால் அலம்பலம். நெல் முதலியதானால் குத்தி உமி நீக்குவதால் சுத்தி.

பிரஸவம் நேர்ந்தால் அந்த இடத்தை அலம்பிப் பசுஞ்சாணத்தால் மெழுகிப் பசுவின் குளம்பு படச் செய்து புண்யாஹவசனம் செய்தால் சுத்தி. வைக்கோல் பத்தையைக் கொளுத்தி அறைமுழுவதும் அதனை இழுப்பதால் சுத்தி. மரணம் ஏற்பட்டால், மண்பாண்டம், பக்குவமான உணவு பொருள் இவற்றை எறிந்துவிட்டு அலம்பி சாணத்தில் மெழுகி புண்யாஹவாசனம் செய்தால் சுத்தி. 

வாவி, கிணறு, குளம் முதலியவற்றில் நாய், பூனை, மனிதன் இறந்தால் சவத்தை அகற்றிச் சிறிதாயின் 100 குடமாவது இறைத்துவிட வேண்டும். செத்து அழுகி அதிக நாளாகியிருந்தால் முழுவதும் தண்ணீரை இறைக்கவேண்டும். தடாகத்தில் நீரை வெளியேற்றுவதுடன் சூரியவெப்பம்படும்படி செய்தபின் உபயோகிக்கலாம்.

கடையில் வாங்குகின்ற ( சமைக்கப்படாத) பொருளனைத்தும் சுத்தம்.

எறும்பு, எலி, வண்டு, ஈ தொட்டது பக்குவப்படாத பொருளாயின் அசுத்தம் பக்குவப்பட்டதாயின் நீக்கத்தக்கவை.

கல்லால் செய்த விக்ரகமாயின் புற்று மண்ணால் அலம்பி பஞ்சகவ்யம் தேய்த்தால் சுத்தம்.

ரோகி, பாலன், பெண், சமையற்கட்டு இவற்றில் சுத்தி பற்றி அதிகம் விசாரிக்கக்கூடாது.

🌷 நிறைவு பெற்றது.🌷


Apr 5, 2020

அறம் செய விரும்பு - 21



பொதுவான தர்மங்கள்
தொடர்ச்சி..

மெழுகிக் கோலமிட்ட வீட்டில் லஷ்மி வசிப்பாள்.

ஒழுங்காக ஆடை தரித்துள்ளவர்களிடம் லஷ்மி வசிப்பாள்.

ஆடு, கழுதை, ஒட்டகம், துடைப்பம் இவற்றின் புழுதி, பிறரின் மூச்சுக்காற்று, ஆடைக்காற்று, முறத்தால் அசையும் காற்று இவை உடலில் பட்டால் லஷ்மி மறைவாள்.

ஆடையற்றவனையும் கச்சமில்லாதவனையும் கௌபீனம் மட்டும் தரித்து வெளியில் வருபவனையும் லஷ்மி விரும்பமாட்டாள்.

காலணி, குடை, தண்ணீர் பாத்திரம், துணைவர் இவையின்றி பெருவழி நடக்கக்கூடாது. பகலில் தலையைத் துணியால் மூடியும், இரவில் மூடாமல் வழிநடக்கக் கூடாது.

தன் வயது, செல்வம், குடும்ப ரகசியம், வருவாய், கொடுக்கல் வாங்கல், அவமானம் இவற்றைப் பிறரிடம் வெளியிடக்கூடாது. தம்பதிகள் பெற்ற உடல்உறவு, குருவிடம் பெற்ற மந்திரம், தான்சாப்பிடும் மருந்து இவற்றையும் வெளியிடக்கூடாது.

ஆண் விளக்கேற்றுவதும் அணைப்பதும், பெண் பூசணிக்காயைப் பிளப்பதும் கூடாது.

பிறர் தும்பினால் 'க்ஷேமமாயிரு' என்று உடன் சொல்ல வேண்டும். தடுக்கி விழுந்தால் விழுந்த இடத்திலுள்ள மண்ணை நெற்றியில் இடவேண்டும். கொட்டாவி விட்டால் கையால் வாயை மூடிப் பின் வலது காதை தொட வேண்டும்.

உறவினர்களுக்குள் கசப்பான பொருளை வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. இரும்பு, விதை, ஜலம், அன்னம், நெருப்பு, மோர், பால், தயிர், அக்கினி, தான்யம், மருந்து இவற்றை இரவுநேரத்தில் பிறருக்குத் தரக்கூடாது. தருபவனின் வீட்டிலிருந்து செல்வம் அகலும். எதையாவது பண்டமாற்று ஏற்றுக் கொடுப்பதானால் தோஷமில்லை.

மனைவி கருத்தரித்திருந்தால், 3வது மாதம் முதல் கணவன் க்ஷவரம், சவத்தைச்சுமத்தல், சவத்தைப்பின் தொடர்ந்து சுடுகாடு செல்லுதல், தூர தேச யாத்திரை, ஸமுத்ரஸ்நானம் புது வீடு கட்டுதல், புது வீடு பிரவேசம், பழைய வீட்டை இடித்துக் கட்டுதல் இவைகளைச் செய்யக்கூடாது.

இரவில் வயலில் உழுவதோ விதை விதைப்பதோ கூடாது.

சகோதரர்களும் பிதா-புத்திரர்களும் ஒரே நாளில் க்ஷவரம், சிரார்த்த போஜன செய்ய கூடாது.

ஏகாதசியில் உபவாஸம், துவாதசியில் திருவோணம் சேர்ந்தால் அன்றும் உபவாஸம் இருக்க வேண்டும். சிரவண துவாதசியில் இரண்டு நாட்கள் உபவாஸமிருக்க இயலாதவர் துவாதசியன்று உபவாஸம் இருக்க வேண்டும். துவாதசியின் முதல்பாதம் ஹரிவாஸரமாகும். அதிலும் போஜனம் கூடாது. துவாதசி அல்பமாயிருந்தால் உதயத்திற்கு முன்பே தேவபூஜை வரை செய்து உதயத்திற்குப்பின் பாரணை செய்ய வேண்டும்.

காதில்பூ, கழுத்தில் சந்தனம், சிகையில் துளசி தரிப்பது கூடாது.

ராத்திரியில் கடுகு, அஷ்டமியில் தேங்காய், துவாதசியில் புடல், துவிதியையில் கண்டங்கத்திரி, பிரதமையில் பூஷணி, பஞ்சமியில் வெள்ளரி கூடாது.

தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது. 

பெண் மைதீட்டிக் கொள்ளும்போதும் எண்ணெய் குளியலில் உள்ளபோதும் ஆடை இல்லாத போதும் தூங்கும்போதும் பார்க்கத்தக்கவளல்ல.

நீரிலும் எண்ணெயிலும் நிழலைப் பார்க்கக்கூடாது.

கன்றின் தும்பைத் தாண்டக்கூடாது.

ஆடையின்றி நீராடக்கூடாது.

எதெது பிறரது உதவிகொண்டு நடை பெறக்கூடியதோ அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தானே செய்யக்கூடியதில் முயன்று செயல்படவேண்டும். பிறர் வசமுள்ளது எதுவும் துக்கம். தன்வசமுள்ளது எதுவும் சுகமே. வேதத்தை நிந்தை செய்வது, தேவநிந்தை, துவேஷம், ஜம்பம், தன்மான மிகுதி, கோபம், வெறி முதலியவற்றை விட வேண்டும். பிறரை அடிப்பதற்கென கழியை ஓங்குவதோ கழியாலடிப்பதோ கூடாது. கட்டுப்படுத்த வேண்டிய சிஷ்யன் புத்திரன் விஷயத்தில் லேசாக இதைப் பயன்படுத்தலாம்.

கைகள், கால்கள், கண்கள், வாக்கு இவை சபலத்தால் செயல்படுவது கூடாது. உபயோகமில்லாத வஸ்துவை எடுப்பது கையின் சபலம். வீணாய் திரிவது காலின் சபலம், பிற பெண்களை உற்றுப்பார்ப்பது கண்களின் சபலம், வீணாகப் பேசுவது வாயின் சபலம், பிறரை துன்புறுத்தவோ மனம் நோகச் செய்வதோ தவிர்க்கத் தக்கது. குடும்பத்தினருடன் வீண் விவாதத்தில் இறங்கக்கூடாது.

தனக்கு எது கெடுதல் விளைவிக்க கூடுமோ அதைப் பிறருக்கு தான் செய்யக்கூடாது. பலருடன் விரோதம் கூடாது. தன்னை புகழ்ந்தும் பிறரை அவமதிப்பும் பேசுகின்ற பழக்கம் கூடாது. குரு, வேதம், தெய்வம், பெரியோர்கள் இவர்களை நிந்திக்கக்
கூடாது. அவர்களை நிந்திக்குமிடத்தில் நிற்கக் கூடாது. பிறரது ரகசியத்தை அறிய முற்படக்கூடாது.

பாபியைப் பாபி என்று சொல்லக்கூடாது. பாபம் செய்தது மெய்யானால் அதனை நினைத்த இவனும் பாவி. பாபம் செய்தது பொய்யானால் இரு மடங்கு குற்றம். தன்னை பரிதாபத்திற்கு உரியவனாக காட்டிக் கொள்ளக்கூடாது. தன்னைத் தானே அவமதிப்பிற்கு உள்ளாக்குவதும் கூடாது. பற்களை நரநரவெனக் கடிப்பது. மூக்கினால் பிறரறிய உருமுவது, வாயை மூடாமல் கொட்டாவிவிடுவது, அதிக ஓசையுடன் சிரிப்பது, அதிதூக்கம், அதிவிழிப்பு, அதிகமாய் நிற்பது, அதிகமாய்ப் படுக்கையிலிருப்பது, அதிதேகப் பயிற்சி இவற்றைத்தவிர்த்தல் நல்லது. கெட்டதைக்கூட கெட்டதென நேரிடையாகச் சொல்லக்கூடாது. இவன் எனக்கு எதிரி எனக்குறிப்பிடக்கூடாது. அப்படிச் சொல்வதால் எதிர்க்க வராதவனையும் எதிரியாக்கிக் கொள்ளக்கூடும். தர்மவிஷயமான கருத்துகளைப் பெரியோர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று கூறவேண்டும். இது தனது கருத்து எனக் கூறக்கூடாது. தன் கருத்து பிசகானதாகவும் இருக்கக்கூடும்.

வீட்டிலுள்ள பெண்பிள்ளை, வேலைக்காரன் இவர்கள் கடுஞ்சொல் கூறினால் பொறுத்துக்கொள்ளவேண்டும். மனவேதனைப் படக்கூடாது.

பிறரை நிந்திப்பது அழிவின் அடையாளம். கபடச்செயல் பாபத்தின் அடையாளம். நேர்மை பரம்பொருளின் அடையாளம். கல்வியால் ஒளிமிக்க வாழ்வு. பொருளை வழங்குவதால் சுகம். உழைப்பால் செல்வநிறைவு. அவமதிப்படைவதால் பாபம் தொலையும். பாராட்டப் பெறுவதால் புண்ணியம் தொலையும். பாராட்டும் மதிப்பும் பெறுகின்ற பிராமணன் கறவைப்பசுபோல் கறக்கப்பட்டே களைத்து விடுவான்.

தொடரும்...

Apr 4, 2020

அறம் செய விரும்பு - 20

பொதுவான நியமங்கள்

ஸூர்யசந்திரர்களை உதயத்திலும் அஸ்தமன ஸமயத்திலும் க்ரஹணகாலத்திலும் வானத்தில் நடுவில் இருக்கும் போதும் நீரில் பிரதிபிம்பித்திருக்கும் போதும் பார்க்கக் கூடாது.

மண்முட்டி, பசு, தேவதை, பிராமணன், நாற்சந்தி, காவல்மரம், ஸ்தலவிருக்ஷம் இவற்றை வலமாகச் செல்லவேண்டும், தாண்டக்கூடாது.

அக்கினியை வாயால் ஊதக்கூடாது. அசுத்தப்பொருளை அதில் போடக்கூடாது. அதில் கால்களைக் காய்ச்சக்கூடாது.

கிருஹஸ்தன் மூங்கில்தடி, தாமிரத்தாலான கமண்டலு, தங்கக் குண்டலம் இவற்றைத்தரிப்பது நல்லது.

ஆடையில்லாதவர்களைப் பார்க்கக் கூடாது.

காலை மாலை ஸந்தி வேளையில் உணவருந்துவதும் தூங்குவதும் பிரயாணமும் உடலுறவும் கூடாது.

மலமுத்திரங்கள், கோழை, ரத்தம், விஷம் இவற்றை நீரில் கலக்கக்கூடாது.

தூங்குபவரை எழுப்பக்கூடாது. அவர்கள் தர்மம் தவற நேர்ந்தால் எழுப்பலாம். தனித்துப்  பாழ்வீட்டில் தூங்கக்கூடாது.

தனக்கெனப் பூமாலை தொடுக்கக் கூடாது.

கன்று ஊட்டுவதையும் வானவில்லையும் பிறருக்குச் சுட்டிக் காட்டக்கூடாது.

தனித்து பெருவழி நடப்பதும் மலையில் வெகுகாலம் வசிப்பதும் கூடாது.

மாதவிடாய் உள்ள பெண்ணுடன் நேரிடையாகப் பேசக்கூடாது.

வெண்கலத்தில் காலை அலம்புவதும், அஞ்சலியால் நீர் குடிப்பதும், பிறர் உபயோகித்த காலணி, ஆடை, உபவீதம், ஆபரணம், பூ, கமண்டலு இவற்றை உபயோகிப்பதும் கூடாது. காலை வெயிலில் காய்வதும் சவப்புகையை முகர்வதும் பிளந்த ஆசனத்தில் உட்கார்வதும், மயிர், நகம், ரோமம் இவற்றை அடிக்கடி தானே துண்டிப்பதும், வீண் அரட்டை அடிப்பதும் குறுக்குவழியில் வீட்டிற்குள்ளோ ஊருக்குள்ளோ நுழைவதும் கைகளால் நீந்தி ஆற்றைக் கடப்பதும், இரண்டுகைகளாலும் தலையைச் சொரிவதும் தவிர்க்கத் தக்கவை.

பெரியோரின் நிழலை மிதிப்பதும், நள்ளிரவிலும் சந்தி வேளைகளிலும் நாற்சந்தியில் நிற்பதும், திருடனுடனும் பாபியுடனும் துரோகியுடனும் பிறரது மனைவியருடனும் நட்பு கொள்வதும் நல்லதல்ல.

பிறரது படுக்கை, ஆசனம், வீடு, வாகனம் அவர்களது உபயோகத்தில் உள்ள பொருள் இவற்றை அவரனுமதியின்றி உபயோகிக்கக் கூடாது.

பற்களால் நகம் கடிப்பது, கேசங்களைக் கடிப்பது, துணியைக்கடிப்பது, காலால் காலைத்தேய்த்தலம்புவது, துரும்பைக் கிள்ளிப்போடுதல், பிச்சைக்காரனுக்கு அஞ்சி வாசற்கதவை மூடுதல், பந்துக்களுடன் விவாதிப்பது, பிறரை வீணே துன்புறுத்துவது, பொல்லாங்கு பேசுவது, ஆசார்யன் பெற்றோர் பசு இவர்களைத் துன்புறுத்துவது, அங்கக் குறையுள்ளவன், அதிகமாக அங்கவளர்ச்சியுள்ளவன், படிப்பில்லாதவன், அழகில்லாதவன், ஏழை, கீழ்த்தரத்தொழில் புரிபவன், தாழ்ந்த குலத்தோன் இவர்களை இகழ்ந்து பேசுதல் கூடாது.

வாயைக்கையால் மூடாமல் இருமுவதும் தும்முவதும் கொட்டாவி விடுவதும் கூடாது. தம்பதிகளுக்கிடையே, பெற்றோர் - மகன்களுக்கிடையே, ஆசிரியர் சீடர்க்கிடையே, நண்பர்க்கிடையே, பேசிக்கொண்டிருப்பவர்க்கிடையே, பசு - கன்றுக்கிடையே, சிவலிங்கம் - நந்திக்கிடையே செல்லக்கூடாது.

தொடரும்...

Apr 3, 2020

அறம் செய விரும்பு - 19

மாலைப்பொழுதைக் கழித்தல்

மாலையில் சூரியன் மறையத் தொடங்கியதும் சந்தியாவந்தனம், தொடர்ந்து ஸமிதாதானம் அல்லது ஒளபாஸனம், தேவபூஜை வைச்வதேவம் அதிதிபூஜை செய்ய வேண்டும்.

இரவில்

இதமும் மிதமான நல்ல உணவைச் சாப்பிட்டுப்பின் சிறிது நேரம் கழித்துத் தூங்கலாம். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். வடக்கில் தலை வைக்கக்கூடாது. யாத்திரையில் மேற்கில் தலைவைத்துப் படுக்கலாம். தன் வீட்டில் கிழக்கிலும் மாமனார் வீட்டில் தெற்கில் தலை வைத்துப் படுக்கலாம். முன்னிரவில் 71/2 நாழிகை (3 மணி) சென்ற பின்னரே தூங்கச் செல்ல வேண்டும். சிறுவர்களும் வயதானவர்களும் நோயாளிகளும் முன்னரே தூங்கலாம். தூங்குமுன் அகத்தியர், மாதவன், முசுகுந்தர், கபில முனிவர், ஆஸ்தீக முனிவர் இவர்களை நினைத்துப் படுக்க வேண்டும். ஆஸ்தீகரின் நினைவு பாம்பு பயத்தை போக்கும். நர்மதையை நினைப்பதும் நல்லது. கோயிலிலும், சுடுகாட்டின் அருகிலும், மரத்தினடியில், நாற்சந்தியிலும், தானிய மூட்டையின் மேலும், குரு, இஷ்டதெய்வம் பெரியோர் இவர்களின் எதிரிலும், அசுத்தமாகவும், கால்களை அலம்பாமலும் பாதுகாப்பில்லாமலும், கருங்கல்லின் மேலும் தூங்கக் கூடாது. 

சுகமான விரிப்பின் மேல் இடதுபுறத்தைக் கீழே வைத்துப் படுப்பது ஆரோக்கியம் தரும். மல்லார்ந்துபடுப்பது பலம் தரும். நோயாளிக்கு அருகே படுக்கக் கூடாது. ஈரமான ஆடையுடனும் ஆடை இல்லாமலும் அழுக்கான ஆடை போர்த்தும் படுக்கக்கூடாது. சிறுவர்களுக்கு இடையே பெண்களுக்கிடையே தூங்கக் கூடாது. பகலில் தூங்கக்கூடாது. சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், உடல் உழைப்பால் களைத்தவர்கள் பகலில் தூங்கலாம். இரவில் கண் விழித்தவர்கள் விழித்தநேரத்தின் பாதியளவு பகலில் தூங்கலாம்.

கிருஹஸ்தனாயின் சந்ததியை விரும்பி ருது காலம் முடிந்ததும் பருவகாலம் முதலியவை நீக்கி நல்ல நாட்களில் இரவின் 2-3வது யாமத்தில் மனைவியிடம் உடல் உறவு கொள்ளலாம். மாதவிடாய் முடிந்ததும் 10 நாட்கள் இதற்கேற்றவை. காம சுகம் விரும்பி அதன் பின்னரும் சேரலாம். ஸந்ததியை விரும்பினால் உபவீதியாகவும், காம இச்சையானால் நிவீதியாயும் சேரவேண்டும். ஆண் ஆடை குறைத்தவனாகவும் பெண் ஆடை நீக்காதவளாகவும் இருக்க வேண்டும். இருவரும் மனமொத்து விரும்பிச்சேர்தல் நல்லது.

தொடரும்...

Apr 2, 2020

அறம் செய விரும்பு - 18

நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடியவை 
வாழையின் எல்லாப்பகுதிகளும், பலா, அவரை, பாகல், தேங்காய், நார்த்தை, பேரீச்சை, மாதுளை, நாவல், நெல்லி, இஞ்சி, கொத்தமல்லி, சுண்டைக்காய், புளி, இலந்தை, கண்டங்கத்திரி, விளா உளுந்து, துவரை, பயறு, நரிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, கருமொச்சை, கடுகு, எள், மிளகு, சீரகம், திப்பிலி, கருஞ்சீரகம், பரங்கி, பூசணி, வெள்ளரி, கண்டங்கத்திரி, கக்கரி, சேம்பு, சாமை, பொன்னாங்கண்ணி, திராக்ஷை, வல்லாரை, தூதுவளை, பசுவின் பால் தயிர் மோர் நெய், எருமை பால் தயிர் மோர் நெய் வெள்ளாட்டின் பால், கரணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, அகத்தி, நெய்யில் பக்குவமானவை, ஆண்டவனுக்கு நிவேதனமானவை சேர்க்கத்தக்கது. சிஷ்டர்களான முன்னோர்கள் வழக்கில் இருந்தவைகளும் நல்லவையே.

நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடாத பொருள்கள்

வெள்ளுள்ளி, வெங்காயம், செம்முருங்கை, முள்ளங்கி, கும்மட்டிக்காய், நாய்க்கொடை, சுரை, ஈன்று பத்து நாளாகாத பசுவின் பால், பெருங்காயம் தவிர மற்ற பிசின் கலந்தது, வெள்ளைக்கத்திரி, பசளை, கோவை, அத்தி, குசும்பா எள்ளு, கொள்ளு, நெய்க்கசண்டு, நீர் கலவாத மோர், காரணமின்றி எள்ளன்னம், பழைய அன்னம், கன்றில்லாமல் அல்லது வேறு கன்று ஊட்டி பால் தரும் பசுவின் பால், உப்புடன் சேர்ந்த பால், தாமிரபாத்திரத்தில் உள்ள தேன், தயிர், மோர், நெய் முதலியவை, வெண்கலப்பாத்திரத்தில் உள்ள கரும்புச்சாறு, இளநீர், இரவில் தயிர் நெல்லிக்காய் மாம்பழம் எள் கலந்த உணவு, ஸத்துமா, முட்டைப்பொரி முதலியவை. நீர்ச்சேம்பு, அப்போது ஆடிய எண்ணெய், பிறர் குடித்து மீந்த நீர், நாய் காக்கை பறவை பசு பூனை முகர்ந்து பார்த்ததும் எச்சிலாக்கியதும் (அதிக அளவில் சமைத்திருந்தால் சுத்திமுறை அறிந்து செய்து சேர்க்கத்தக்கதாயின் சேர்க்கலாம்.) ஒருவர் சாப்பிட்ட பின் மீதமுள்ள எச்சில் (குருவினுடையதைச் சீடனும்,பதியுடையதைப் பத்தினியும் தவிர) கேசம், நகம் போன்றவை கலந்தது. (அதனைச் சுற்றியுள்ள உணவை நீக்கி அவசியமாயின் உண்ணலாம். எறும்பு, ஈ, கொசு மொய்த்து சாப்பிடலாமா கூடாதா என்று ஐயம் உண்டாக்கும் உணவு, அருவருப்பும் உமட்டலும் தருவது, சுவை மாறியது, உருவம் மாறியது, மணம் மாறியது, உவர் மண்ணாலான உப்பு, செம்மறியாட்டுப் பால், காந்திப்போன அன்னம் முதலியவை, சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பழத்தோல்கள், எண்ணெய் எடுக்கப்பட்ட புண்ணாக்கு, காடி, நுரையுள்ள நெய், நெய்யின் ஏடு, புளித்ததயிர், ருசிகெட்ட மோர், கடைகளில் விற்கப்படுகின்ற பக்குவமான உணவு, பிரதமையில் பூசனி, ஷஷ்டியில் புடல், ஸப்தமியில் நெல்லிக்காய், திரயோதசியில் எள்ளு, சதுர்தசியில் புளி, பர்வகாலத்தில் நெல்லிக்காய், இறைவனுக்கு நிவேதனமாகாதது இவை நீக்கத்தக்கவை. அறியாமல் சேர்க்கப்பட்டிருந்தால் உபவாசம் இருக்க வேண்டும், இவையே சிகிச்சைக்குப் பயன்படுமானால் வேறு மாற்றுப் பொருள் கிடைக்காவிடில் சேர்க்கலாம்.

சாப்பிட்டபின்

சாப்பிட்டதும் உட்கார்ந்திருப்பவனுக்கு வயிறு பெருக்கும். நிற்பவனுக்கு உறுதி உண்டாகும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனுக்கு அழிவு உண்டாகும். தூங்குகிறவனுக்கு உடல் பருக்கும். உண்டதும் மெதுவாக நூறடி நடந்து அரசன்போல் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

இதிஹாஸ, புராணங்களை கேட்பதும் படிப்பதும் நல்லது. அதன்பிறகு தன் குடும்பத்தின் பணிகளை செய்ய வேண்டும்.

தாம்பூலம் 
உண்டதும் தாம்பூலம் போடுவதும் உண்டவர்களுக்குத் தாம்பூலம் தருவதும் நல்லது. பாக்கு அதிகமானால் நோய் வரும். வெற்றிலையின் நுனிக்காம்பு நடுவில் உள்ள நரம்பு இவற்றை நீக்கிப் பின்புறம் சுண்ணாம்பு தடவி பாக்கு சேர்த்து, சுண்ணாம்பு தடவிய பகுதியை உள்வைத்து மடித்து வாயிலிட்டு மெல்லவும். பகலில் சுண்ணாம்பு அதிகமாயும் காலையில் பாக்கு அதிகமாகவும் மாலையில் வெற்றிலை அதிகமாகவும் கூட்ட வேண்டும். தாம்பூலம் ஜீர்ணத்தைத் துரிதப்படுத்தும். வாய்மணக்கச் செய்யும். சுவையைக் கூட்டும். கலக்கத்தை நீக்கும். சுறுசுறுப்பைத் தரும். பிரும்மசாரியும், விரதத்தில் இருக்கின்ற கிருஹஸ்தனும் துறவியும் தாம்பூலம் போடக்கூடாது. அதிகமாகத் தாம்பூலம் பற்களிலும் கண்களிலும் நோய் உண்டாக்கும்.

தொடரும்...