Mar 31, 2020

அறம் செய விரும்பு -17

போஜனநியமங்கள் 

வாய்கொள்ளுமளவிற்குக் கையில் உணவு எடுக்க வேண்டும். அதிகமாக எடுத்து வாயில் போட்டு மீந்ததையும் கடித்து மீந்ததையும் கலத்திலுள்ளதுடன் கலக்கக்கூடாது. சத்தமிட்டு உறிஞ்சி அல்லது கடித்துச் சாப்பிடக்கூடாது. பருகும் நீரும் குடிக்கக்கூடிய அளவில் எடுத்து உதட்டில் படாமல் எச்சிற்படாமல் தூக்கிப்பருக வேண்டும். பருகி மீந்த ஜலம், எச்சில்பட்ட ஜலம் நல்லதல்ல.

சம்பந்தப்படாத பலர் நோக்க உண்ணக்கூடாது. பந்தியாகப் பலர் உட்கார்ந்து சாப்பிடும்போது நடுவில் ஒருவர் எழக்கூடாது. எழுந்தால் மற்றவரும் அத்துடன் எழ வேண்டும். அப்படி எழநேர்ந்தால் சாம்பல் ஜலம் இவற்றைக்கொண்டு பிரிவினை செய்ய வேண்டும். தூண்களின் இடையே, வாசலுக்கு அருகே, வழியில், தாழ்ந்தோ, மேடிட்டோ மற்றவர் உட்கார்ந்த இடத்திற்குச் சமமாக இல்லாத இடத்திலோ அமர்ந்தவர் நடுவில் எழுந்தால் பந்தி தோஷமில்லை. உண்ணும்போது ஒருவரை ஒருவர் தொடக்கூடாது. இடதுகையால் நீர் பருகும்போது வலதுகையால் உண்கலனைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

உப்பு, வியஞ்சனம் (ஊறுகாய், காய்கறி) நெய், எண்ணெய், பாயஸம், அன்னம் இவற்றைக் கரண்டியாலன்றிக் கையால் பரிமாறக்கூடாது. எண்ணெய் பொரித்துப் பிசிப்பு இல்லாதவற்றையும் பழங்களையும்
கையால் பரிமாறலாம்.

பழம் பட்சணம் முதலியவற்றை சிறுவர் விருந்தினர் இவர்களுக்கு வழங்கியபின் தனக்கு இட்டுக்கொள்ள வேண்டும்.

பாயஸம் நெய் தயிர் தேன் பழம் இவைகளை மீதம் வைக்காமல் சாப்பிடலாம். மற்றவற்றைச் சிறிது மீதிவைத்தே சாப்பிட வேண்டும்.

வாழை இலையின் உட்புறத்தில்தான் உணவை வைக்கவேண்டும் தாமரை இலையில் உள்ளும் வெளியிலும் வைக்கலாம்.

உண்ணும்போது தீபம் அணைந்தால் சாப்பிடுவதை நிறுத்தி மறுபடி வெளிச்சம் வந்தபிறகு கலத்தில் இட்டதை மட்டும் சாப்பிடலாம். மறுபடி அதில் உணவுவகை சேர்க்கக்கூடாது. தயிரோ பாலோ கலந்த அன்னம் உண்டபின் நீர் பருகக் கூடாது.

கையில் எடுத்த அன்னத்தில் புழு, கேசமிருந்தால் அந்த அன்னகவளத்தைத் தள்ளி வைத்து விட வேண்டும். வாயில் அது சேர்ந்துவிட்டால் உமிழ்ந்து வாய் கொப்புளித்துப் பிறகு மற்றதை உண்ணலாம்.

கோழை உமிழ்வது, சத்தத்துடன் கோழை விழுங்குவது, காரித்துப்புவது, மூக்கைச்சிந்துவது இவை பலருடன் உண்ணும்போது தவிர்க்கத் தக்கவை. உண்ண உட்காருமுன்னே தொண்டை மூக்கு வாய் இவற்றைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தாமரை இலையில் கிருஹஸ்தனும் வெண்கலப் பாத்திரத்தில் துறவியும் பிரும்மசாரியும் விதவையும் உண்ணக்கூடாது. கிருஹஸ்தனுக்கு வெண்கல பாத்திரம் சிறந்தது.

-உண்ணும்போது துணியைத் தலையில் சுற்றிக் கொள்ளக்கூடாது.

- காலணியுடன் உண்ணக்கூடாது.

- ஈரஆடை, ஈரத்தலையுடன் சாப்பிடக்கூடாது.

- மனக்கிளர்ச்சி தரும் வகையில் பெண்களுடன் சேர்ந்தமர்ந்து உண்ணக்கூடாது. யாத்திரை நேரத்தில் தோஷமில்லை.

- மனத்திற்குப் பிடிக்காத சத்தம் கேட்கும் இடத்தில், அருவருப்பு தரும் மணம் உள்ள இடத்தில் உண்ணக்கூடாது.

- நாய் கோழி காக்கை பூனை முதலியவை முகர்ந்த உணவு கூடாது.

- பிறரது எச்சில், ருசிமாறியது, நிறம் மாறியது, உண்ணத்தகாதவை.

- மேற்கூரை இல்லாத இடத்தில் ஆகாசம் பார்க்கச் சாப்பிடக்கூடாது.

உணவின் அளவு அவரவரது இயல்பிற்கும் ஜீர்ணிக்கும் சக்திக்கும் ஏற்றவாறு அளவுக்கு அடங்கினதாக இருத்தல் நல்லது. கொள்ளளவும் ஜீர்ண அளவும் பருவநிலையும் கருத்தில் கொள்ளத் தக்கது.

அரட்டை அடித்துக்கொண்டும் மனம் வருத்தியும், பிறர் மனதை புண்படுத்தியும், படித்துக் கொண்டும், படுத்தும் உணவில் மனம் செலுத்தாமலிருப்பது தவறு. உண்ணும்போது அது ஒன்றையே பொருட்படுத்த வேண்டும்.

முதலில் இனிப்பும் தொடர்ந்து புளிப்பும் உப்பும் நடுவில் காரமும் கசப்பும் முடிவில் துவர்ப்பு அமையும்படி சாப்பிட வேண்டும்.

வீணாகப்பட்டினி இருப்பதும் உடலை வருத்துவதும் கூடாது.

வேகமாகவும் மிகவும் மந்தமாகவும் சாப்பிடக் கூடாது.

முன் உண்ட உணவு சீர்ணமாகாதபோதும், பசி வந்தும் அதனை மீறி வேறு பணியில் ஈடுபட்டும், பசி முற்றிய நிலையிலும் உண்ட உணவு சரியாக செரிக்காது.

துறவிக்கு எட்டு கவளம் (கைப்பிடி), வானப்ரஸ்தனுக்கு 16 கவளம் கிருஹஸ்தனுக்கு 32 கவளம் பிரும்மசாரிக்குக் கொள்ளுமளவு உண்பது நல்லது. 

போஜனத்தின் ஆரம்பத்தில் திரவஉணவும் நடுவில் கடின உணவும் முடிவில் திரவ உணவும் அமைவது நல்லது. 

ஆயுளை நீடிப்பதை விரும்புபவன் கிழக்கையும், புகழைவிரும்புபவன் தெற்கையும், செல்வத்தை விரும்புபவன் மேற்கையும் நேர்மையை விரும்புபவன் வடக்கையும் நோக்கி எப்போதும் உட்கார்ந்து உண்ணவேண்டும்.

மண்பாத்திரமும் இரும்பு பாத்திரமும் உண்கலனாக இருக்கக்கூடாது. தாமரையிலை, புரசிலை கிருஹஸ்தனுக்குக் கூடாது.

உண்ணும் போது இடது கை முழங்காலுக்கு உள்ளே இருக்கவேண்டும். வெளியே கை ஊன்றக் கூடாது.

உண்கலத்தைத் தானே அலம்பிக் கொள்ள வேண்டும்.

தாயாரோ, மனைவியோ உணவிடல் நல்லது. பலர் உபயோகிக்கும்படி தங்கம் வெள்ளி வெண்கலம் முதலிய உண்கலனை இடும்போது உண்டதும் அலம்பிச் சாணமிட்டு மறுபடி அலம்பி அனலில் காட்டிப்பின் மற்றொருவர் உண்பதற்கக் தர வேண்டும். ஒருவரே தொடர்ந்து சாப்பிட்டால் அலம்பினால் போதும்.

உணவைக் கையில் வைத்துக்கொண்டும் உண்கலனைக் கையில் ஏந்திக்கொண்டும் சாப்பிடக்கூடாது.

பலருக்கு உணவளித்துத் தானும் கூட உண்ணும் போது மௌனம் நல்லதல்ல, பரிவும் ஆதரவும் அன்பும் காட்டிப்பேசி கூச்சமின்றி அவர்கள் திருப்தியுடன் சாப்பிட செய்ய வேண்டும்.

பலருக்கு உணவளிக்கும் போது ஒருவருக்கு இட்டும் மற்றவர்க்கு இடாமலும் குறைத்தோ அதிகமாகவோ இட்டும் பந்திவஞ்சனை செய்யாமல் ஒரே சீராக, விரும்புமளவையும் ஒட்டி வழங்க வேண்டும்.

கைகளால் நீர் ஏந்தி பருக கூடாது. 

நேரிடையாக உப்பை உண்கலனில் இடக்கூடாது. ஏதாவது ஒருபொருளில் மறைத்து வழங்கவேண்டும். நெய், எண்ணெய், பாயஸம் முதலியவற்றை உண்கலனில்தான் இடவேண்டும் கையில்
இடக்கூடாது. 

உணவில் தள்ளத்தக்கதும் சேர்க்கத்தக்கதும்

சேர்க்கத்தக்கதைச் சேர்த்து தவிர்க்கத்தக்கதைத் தவிர்க்குபோது உடலும் உள்ளமும் தூய்மை பெறுகின்றன. வேதம் ஓதாமலிருப்பதாலும் ஆசாரத்தை விடுவதாலும் அன்னதோஷத்தாலும் பிராமணன் அழிகிறான். சில பொருட்களையே நல்லதல்ல எனத்தள்ளநேர்கிறது (ஜாதி கர்ஹிதம்). சிலவற்றை சிலர் சமைத்தால் அல்லது அளித்தால் தள்ள நேர்கிறது. அந்தப் பொருளை உடையவரின் தோஷம் பொருளையும் பாதிக்கிறது (ஆச்ரய கர்ஹிதம்). உள்ளிப்பூண்டும் வெங்காயமும் ஜாதிகர்ஹிதம். கெட்டவனின் உணவு ஆசிரயகர்ஹித மாகும். நாய் பூனை முகர்ந்தால் தள்ளத்தக்கது. அது கிரியாதுஷ்டம். நாட்பட்டது காலதுஷ்டம். பூண்டுடன் கூடிய தயிர் ஸம்ஸர்கதுஷ்டம் (சேர்க்கையால் கெட்டது.) கண்டதுமே உமட்டலும் அருவருப்பும் தருவது ரஸதுஷ்டம். அப்படித் தள்ளத்தக்கவைகளையும் சேர்க்கத் தக்கவைகளையும் பார்ப்போம்.

தொடரும்....

Mar 28, 2020

அறம் செய விரும்பு - 16

போஜனம் - உணவு

உண்ட உணவு உடற்பகுதி அனைத்திற்கும் ஊட்டமும் வலிவும் தெளிவும் தருவதாக அமையவேண்டும். உணவாலேயே உள்ளமும் எண்ணமும் உணர்வுகளும் அறிவும் அமைகின்றன. அதனால் அவைகளுக்கு உறுதியும் தெளிவும் தருவதாக உணவு அமைய வேண்டும். செயலும் எண்ணமும் காரணமாக அமைய ஆத்மாவிற்கு வினையால் கட்டும்(பந்தமும்) வினைநீக்கமும் ஏற்படும். அதனால் போஜனத்தைப் பசி நீங்கவும் நாக்குக்குத் திருப்தி அளிக்கவும் உள்ளதாகக் கருதாமல் ஆத்மதிருப்தி தருவதாக அமைப்பதில் நாட்டம் தேவை. போஜனத்திற்குமுன் வைச்வதேவமும் அதிதி பூஜையும் நடத்துவதன் மூலம், தன்னலத்தை மட்டுமே கருதாமல் சமைத்த உணவில் தன்னுடன் உடல் சம்பந்தப்படாத பலருக்கும் அதில் பங்கு உண்டு என்பதை உணரலாம்.

மந்திரம் சொல்லிப் போஜனத்தைத் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். கை கால்களை அலம்பி உபவீதியாக உத்தரீயம் தரித்து இரண்டு தடவை ஆசமனம் செய்து. கிழக்கு அல்லது மேற்கு முகமாக (சிராத்தத்தன்று வடக்கு முகமாக) ஆஸனத்தில் அமர்ந்து கால்களை ஆசனத்திற்கு வெளியே தரையில் வைத்து சந்தனம் தரித்து, தங்கம் வெள்ளி வெண்கலம் தாமிரம் இவற்றாலான பாத்திரத்திலோ வாழை இலையிலோ சாப்பிடவேண்டும். உண்கலம் போடுமிடத்தை முன்னதாகச் சுத்தம் செய்திருக்கவேண்டும். நடுப்பகல், முன்னிரவு என இருவேளைகளில் மட்டும் சாப்பிடலாம். நோயாளி, சிறுவர், முதியவர், சக்திக்குறைவுள்ளவர், உடல் உழைப்பு மிக்கவர் இவர்களுக்கு இரு வேளை நியமமில்லை.

இனிப்புள்ளவை, சுத்தான்னம் இவற்றைத் தன்னை ஒட்டியுள்ள இலை அல்லது பாத்திரப்பகுதியிலும் மற்ற சுவையுள்ளவற்றை எதிர்புறத்திலும் பரிமாறவேண்டும். அன்னமிட்டு நெய் போடும்வரை திரிஸுபர்ணம் முதலிய மந்திரங்கள் கூற வேண்டும். இலை - சுத்த அன்னம் வைக்குமுன் நமஸ்தே அன்ன! என்று தன்முன் உள்ள அன்னத்தை வணங்கி "அஸ்மகம் நித்யமஸ்து ஏதத்" "என்றும் எமக்கு இந்த அன்னம் கிடைக்கட்டும்" என்று கோரி இடதுகையால் இலை - பாத்திரத்தைத் தொட்டுக்கொண்டு அன்னம் வைத்து நெய்விட்டதும் பிரணவம் வியாஹ்ருதியால் அன்னத்தை வரவேற்று காயத்திரியால் தூயதாக்கி "ஸத்யம் த்வா ருதேன (ருதம் த்வா ஸத்யேந என்று இரவில்) பரிஷிஞ்சாமி" என இலை, பாத்திரத்தைச் சுற்றிப் பரிஷேசனம் செய்ய வேண்டும். வலது கையில் ஜலம் விட்டு "அம்ருதோபஸ்தரணமஸி" என மந்திரத்தால் உண்ணும் உணவிற்கு கீழ்ஆதாரமாகும்படி கையில் உள்ள சலத்தை வேண்டி பருக வேண்டும். இது ஆபோசனம். பிறகு நெய் கலந்த சுத்தான்னத்தில் கட்டை விரல் நடுவிரல் பவித்ர விரல்களால் சிறிது அன்னமெடுத்துப் பிரணவத்துடன் கூடிய ''ப்ராணாய ஸ்வாஹா" முதலிய மந்திரங்களால் ஆறு ஆஹுதிகளாக வாயிலிட்டு மெல்லாமல் அதை விழுங்க வேண்டும். இது பிராணாஹுதி. பிறகு இலையில் வைத்திருந்த இடதுகையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து 'ப்ரும்மணிம ஆத்மா அம்ருதத்வாய' என்று வேண்டி இறைவனை தியானிக்க வேண்டும். சாப்பாடு முடிந்ததும் "உள்ளே சென்ற அமுத உணவிற்கு மூடியாக ஆவாய்" "அம்ருதாபிதானமஸி" என வலது உள்ளங்கையிலிட்ட நீரைப்பருகி மீதிநீரை தரையில் விடவேண்டும். இது உத்தர ஆபோசனம். உத்தராபோசனம் செய்த பின் இலையைத் தொடக்கூடாது. எழுந்திருந்து வாய், கைகளைக் கழுவி 16 தடவை நீரால் வாய் கொப்புளித்து இடது புறத்தில் துப்பி கை கால்களை அலம்பி இரண்டு தடவை ஆசமனம் செய்து கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

கைகளைத் தேய்த்துச் சர்யாதி, சுகன்யா, ச்யவனர், இந்திரன், அஸ்வினி தேவர்கள் இவர்களை நினைத்து கட்டை விரல்களால் கண்களை அழுத்தித்துடைத்து அக்கினியையும் இஷ்டதேவதையையும் வணங்கவேண்டும்.

உணவேற்க உட்காருமிடம், உணவைத் தாங்குகின்ற பாத்திரம் அல்லது இலை, அதனைப் போடும் இடம், உணவேற்கின்றவனின் கைகால்கள், உணவு பரிமாறுபவர், உணவு தயாரிப்பு, கூட உண்பவர், உணவு என எல்லாவற்றிலும் தூய்மை தேவை. அன்பும் அழகும் உபசரிப்பும் நிறைந்த சூழ்நிலை தேவை. நெய் சுத்தமல்லாததையும் சுத்தமாக்கும் என்று நம்பிக்கை. நெய்யிடுவதை அன்னசுத்தி செய்வது என்றே சொல்வர். பரிஷேசனத்திற்கு முன் நெய் இடாவிட்டால் பின் நெய் இட்டுக்கொள்வதில்லை.

தனித்து உட்கார்ந்து சாப்பிடுவதும், பரிமாறுவதிலும் உணவிலும் குற்றம் குறை இருந்தாலும் வெளிப்படுத்தாமல் இட்டதை நிந்திக்காமலே உண்பதும், பிராணாஹுதி வரை மௌனமும், பின்னர் மிதமாகப் பேசுவதும் மன கிளர்ச்சிக்கு இடம் கொடாமல் அமைதிகாத்தலும் பெரியோர் மரபு. மற்றவர் நியமம் காக்காதிருந்தால் குற்றம் கூறாமல், மறுபடி அப்படி வாய்ப்பு நேராமல் அவர்களைத் தவிர்ப்பதும் அமைதி காக்கும். உணவை உண்கலத்தில் இட்டதும் அதனிடம் தெய்விகத்தன்மை இருப்பதை உணர்ந்து அதனை காயத்திரியால் மேலும் தூயதாக்குவர். 'ஸத்யமான உன்னை நேர்மையால் சுற்றி நனைக்கிறேன்' எனக்கூறி ஸத்யத்திற்கு நேர்மையைப் பாதுகாப்பாகக் கருதுவதே பகலில் பரிசேஷனம் ஆகிறது. இரவில்  நேர்மையால் ஸத்யத்திற்குப் பாதுகாப்பு அளிக்க பெறுகிறது. உண்ணும் உணவு அமிர்தம். அதற்கு வயிற்றில் ஆதாரமாக நீரை பருகுவது ஆபோசனம். பரிஷேசனமானதும் ஆபோசனத்திற்கு வலது புறத்தில் பரிஷேசன நீர் பட்ட இடத்திற்கு வெளியே "ஸர்வபூதேப்யோ நம:" என்றோ "பூதாநாம் பதயே நம:" என்றோ கூறி மூன்று சிறு அன்னப்பிடியை வைத்து அதன்மேல் "யத்ர வஸந ஸமஸ்தாநாம் க்ஷுத்த்ருஷ்ணோ பஹுதாத்மநாம். பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்" என்று கூறிச்சிறிது ஜலம் விடுவர் "எங்கோ இருந்துகொண்டு வாடி வதங்கிய உயிரினமனைத்தின் நீர் உதவட்டும்" என்பது பொருள். இந்த நினைப்பும் பரிவும் உலகெங்கும் பரவி நல்லெண்ணத்தை விளைவிக்கும்.

உடலில் ஐந்து வாயுக்கள் பிராணன், அபானன், வியானன், உதானன் என. இறைவனே உடலில் ஜாடராக்னியாக இருந்து செரிக்கச் செய்கிறான். பிராணன் முதலான ஐந்து வாயுக்களாக இருந்து செரித்த உணவின் சத்தை உடலில் சேர்த்தும், ஊட்டத்திற்கு உதவிப் பயனற்றுப் போன கழிவுப்பொருளை அகற்றியும் இரத்த ஓட்டம் முதலியவற்றின் மூலம் உடலில் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் சமநிலைக்கும் உதவுகிறான் என்பர். அந்த ஐந்து பிராணசக்திகளைத் தருகின்ற ஐந்து வாயுக்களுக்கும் தூண்டுதல் தர இந்த பிராணாஹுதி தரப்படுகிறது. அப்படி வலிவடைந்த ஜீவனைப் பரம்பொருளிடம் அழியாநிலை பெறுவதற்காக இணைப்பதே ப்ரும்மணிம ஆத்மா என்ற மந்திரத்தின் பொருள். உண்ணும் போது 'கோவிந்த' 'கோவிந்த' என்றும் மற்ற இறைவனின் நாமங்களையும் கூறிக் கொண்டே உண்பதும் நல்லோர் வழக்கம்.

பிராணாஹுதி முடியும்வரை இலையை தொட்டுக்கொண்டிருந்த இடதுகையைத் தனியே ஜலம் விடச்செய்து அலம்பிக் கொள்ளவேண்டும். பரிஷேசனத்தின் போது சொட்டிய ஜலத்தால் அல்ல. பரிஷேசனம் செய்து மீந்த ஜலத்தால் ஆபோசனம் செய்யக்கூடாது. ஆபோசனத்திற்குப் பிறரை நீர்வார்க்கச் செய்ய வேண்டும். இடது கை இலையைத் தொட்டுள்ளதால் இந்த நியமம். பிராணாஹுதிக்கான அன்னத்தைப் பற்களால் மென்று சாப்பிடக் கூடாது.

பிராணாஹுதிக்கான அன்னத்தை எல்லா விரல்களாலும் எடுக்கலாம். அல்லது பிராணாய ஸ்வாஹா (1.சிறுவிரல் 2.மோதிர விரல் 3. நடுவிரல் 4. ஆட்காட்டி விரல் 5. கட்டை விரல்) 3-4-5 விரல்களாலும், அபானாய ஸ்வாஹா என 2-3-5 விரல்களாலும், வியாநாய ஸ்வாஹா என 1-2-5 விரல்களாலும், உதாநாய ஸ்வாஹா என 1-2-3-5 விரல்களாலும், ஸமாநாய ஸ்வாஹா என்பதையும் பிரம்மணே ஸ்வாஹா என்பதையும் எல்லா விரல்களாலும் அன்னத்தை எடுப்பது மரபு. இடதுகையைத் தொடையில் அல்லது தரையில் ஊன்றிக்கொள்ளக் கூடாது. உணவுப்பாதை கோணிக்காற்றுப் பாதை தடைப்படும்.

கட்டில் முதலியவற்றில் உட்கார்ந்து காலை தொங்கவிட்டோ, தரையில் ஆஸனமின்றி உட்கார்ந்தோ, காலை நீட்டிக்கொண்டோ, வாகனங்களில் ஏறி அமர்ந்தோ உண்ணக்கூடாது. உணவுக்குழாய் இரைப்பை சீராக இருக்க ஆசனத்தில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கார்வதே நல்லது. உபவீதமாய்ப் பூணூலைத் தரிக்காமலும் உத்தரீயமில்லாமலும் சாப்பிடுவது நல்லதல்ல.

தொடரும்...

Mar 26, 2020

அறம் செய விரும்பு - 15


பஞ்சமஹாயஜ்ஞங்கள் - ஐம்பெரும் வேள்விகள்

வைச்வதேவம்

இதுவும் வேதம் மற்றும் ஸூத்ரங்களுக்கேற்ப மாறுபடும். பகலை எட்டாக வைத்து 5வது பாகத்தில் (15 - 18 3/4 நாழிகை 12 - 1 1/2 மணி) இது செய்யப்படவேண்டும். இது மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம் தேவபூஜைக்கு பின் நடைபெற வேண்டியது. சமையல் அடுப்பிலிருந்து எடுத்த அக்கினியும், தேவபூஜையில் நிவேதனம் செய்யுமுன் வைச்வதேவத்திற்கெனத் தனியே எடுத்துவைத்து நெய்யால் சுத்திசெய்யப்பட்ட அன்னமும் இதற்குத்தேவை. வைச்வதேவத்திற்கெனத் தனித்து அன்னமும் வியஞ்சனமும் தயாரிக்கலாம். சிஷ்டர்களான பெரியோர்கள் காட்டிய வழியில் இதனை செய்யலாம். 

இது மூன்று பிரிவில் அடங்கும். சகல ஹோமம், வைச்வதேவம், பலி இடுதல் என. செய்த பாபமனைத்தும் நீங்க சகல ஹோமம். அது முடிந்ததும் உணவைத் தயாரிப்பதில் பல உயிரினங்கள் அழிவதால் ஏற்பட்ட பாபம் விலக வைச்வதேவ ஹோமம் செய்கின்றனர். (1) அடுப்பு (2) அம்மி (3) உரல் உலக்கை (4) நீர்த்தவலை (5) முறம் சல்லடை முதலியவை என்ற ஐந்தும் உயிருள்ள தான்யம் காய்கறி முதலியவற்றை உணவுக்காக உருவழிக்கின்றன. இந்தப்பாபம் சாப்பிடுபவனை ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் சேர்கின்றது. ஐந்துபெருவேள்விகள் (பஞ்சமஹா யஜ்ஞங்கள்) அந்த பாபத்தை நீக்க செய்யப்படுகின்றன. பிரும்மயஜ்ஞம், பித்ருயக்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என அவை ஐந்து. வேதம் ஓதுதல், ஓதுவித்தல் பிரும்மயஜ்ஞமாகும். அன்னத்தாலோ ஜலத்தாலோ (சிராத்தத்தாலோ தர்பணத்தாலோ) பித்ருக்களை திருப்தி செய்வது பித்ரு யக்ஞம். அக்கினியில் ஹோமம் செய்வது தேவயஜ்ஞம். அதிதிக்கு உணவிடுவது மனுஷ்யயஜ்ஞம். பலியிடுவது பூதயஜ்ஞம். (பலி என்பது ஆட்டையோ, மாட்டையோ வேறொரு உயிரினத்தையோ வெட்டிப் பலி கொடுப்பது அல்ல. தனக்கெனச்சமைத்த அன்னத்தின் ஒரு பகுதியை உயிரினத்திற்கென அளிப்பதே பலியாகும்). மிகவும் விஸ்தாரமுள்ள இந்த ஐந்தையும் சுருக்கி இந்த வைசுவதேவமாகவும் பலிஹரணமாகவும், அதிதி பூஜையாகவும் செய்வர். எல்லா தேவர்களையும் குறித்துச்செய்வதால் இது வைச்வதேவம். தேவர்களுக்கு ஹோமம் செய்து மீதமானதைக் கொண்டு பூதபலி செய்யவேண்டும்.

அதன்பிறகு நாய், காக்கை முதலானவற்றிற்கு பலிதர வேண்டும். மீதியை ஹோமத்திலும் பலிதானத்திலும் குறிப்பிடப்பெறாத தேவர், மனிதர், மிருகங்கள், பட்சிகள், அசுரர், பிசாசர் முதலானோர், மரம் செடி முதலியவை, புழு பூச்சிகள் போன்றவை பசி நீக்க இதனை ஏற்றுத்  திருப்தி அடையட்டும் என்று கூறி இடவேண்டும். பிறகு யம பரிவாரங்களுக்கு அளித்துப் பின் உலகில் பசியால் வாடுபவர் அனைவரும் பசிநீங்கப் பெறட்டும் எனக்கோருவர். இரவிலும் மனைவி மந்திரமின்றி காக்கை, நாய் முதலானவற்றிற்கு உணவு அளிக்கவேண்டும். சிராத்தத்தன்று சிராத்தம் முடிந்ததும் தனியாகத் தயாரித்த அன்னத்தால் வைச்வதேவம் செய்வர்.

அதிதி - அப்யாகத பூஜை

ஒரு கவள அளவுள்ள அன்னம் பிக்ஷையாகும். நான்கு கவளம் கொண்டது புஷ்கலம். 4 புஷ்கல அளவுள்ளது ஹந்தா எனப்படும் இதையாவது அதிதிக்கு இடவேண்டும். பூர்ண உணவு தருவதும் இல்லாவிடில் ஒரு கவளமாவது பிக்ஷை போடுவது மனுஷ்ய யஜ்ஞத்தின் உட்படும். வைச்வதேவமானதும் வாசலில் நின்று யாரேனும் உணவை எதிர்பார்க்கிறார்களா என்று கவனிக்கவேண்டும். அப்போது எதிர்பாராமல் வருபவர் அதிதி. இவர் வைச்வதேவம் செய்வதற்கு முன்வந்தால்கூட  வைச்வதேவத்திற்கு எடுத்துவைத்துவிட்டு இவருக்கு உணவிட்டுப்பிறகு வைச்வதேவம் செய்யலாம். அதிதி, பிரம்மசாரி, ஸன்யாஸி, பிழைப்பதற்கு வழி இல்லாதவன் என்ற இந்த நால்வரும் சமைத்த அன்னத்தின் முதல்பங்குக்குரியவர். இவர்களுக்கு இடாமல் தனித்து உண்பவன் பாபத்தை உண்கிறான். அதிதி முதலானவர் வராவிடில் அவர்களுக்கெனத் தனித்துச் சிறிது உணவு ஒதுக்கிவைக்க வேண்டும். அப்படி எடுத்து வைத்ததை அவர்கள் வராவிடில் பசுவிற்கு அளிக்கவேண்டும்.

அதிதி, அப்யாகதர் (விருந்தாளி), சிறுவர், முதியவர், நோயாளி, கர்ப்பிணி இவர்கள் உண்ட பிறகே, தான் சாப்பிட வேண்டும். வைச்வதேவம் செய்வதற்கு முன்னரே வந்தவரும், அந்த கிராமத்தைச் சார்ந்தவரும் முன்னர் அறிமுகமானவரும் அதிதி அல்ல. அதிதி படித்தவரோ சிஷ்டரோ விரும்பத்தக்கவரோ விரும்பத்தகாதவரோ எவராயினும் மதிப்பிற்குரியவரே. அந்த அந்த வேளையின் தேவைக்கு அதிகமாக துறவியும் பிரும்மசாரியும் பிக்ஷை பெறக்கூடாது. நியமமும் வேதாத்யயனமும் இல்லாதவனுக்கு பிக்ஷை தராமலிருந்தால் தோஷமில்லை. இந்த அதிதிபூஜையே மனுஷ்யயஜ்ஞமாகும்.

தொடரும்...

Mar 25, 2020

அறம் செய விரும்பு - 14






தேவபூஜை
விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த தேவதைகளின் ஆயதனம் - இருப்பிடம். இவற்றில் கணபதி முதலானோர் நிச்சயமாக ஆவாஹனம் முதலியதை எதிர்பாராமல் ஸான்னித்யம் கொண்டுள்ளார்கள். இவற்றில் பூஜை செய்யும்போது நம் உள்ளத்தில் குடி கொண்டவர்களே தியானத்தால் இரங்கி நம் பூஜையை ஏற்க இந்த ஆயதனங்களில் அருள் பரவி நிற்கிறார்கள் என்பதே கருத்து. இந்த வழிபாட்டிற்குத் தேவையானது சுத்தமான ஜலம், சந்தனம், பூ, தூப தீபங்கள், நிவேதனத்திற்காகப் பழம் அன்னம் முதலியவை. நமது பிரார்த்தனை, நமஸ்காரம், ஸ்தோத்திரம் இவை உடல் மனத்தால் ஆகுபவை. தானே தோட்டம் போட்டு வளர்த்த மரம், செடி, கொடிகளின் பூ மிக உயர்ந்தது. கோவில் தோட்டத்தில் கோவில் உபயோகத்திற்கென உண்டான பூ, பிறரது தோட்டத்தில் அவர் அனுமதிபெறாமலும் தோட்ட வளர்ச்சிக்கு உதவாமலும் பெற்ற பூ, வாடி வாங்கியது, துணியில் மூட்டை கட்டிக் கொணர்ந்தது, இடுப்புக்குக் கீழ்பகுதியில் பட்டது, மலராத மொட்டுக்கள், பழையபூ இவை ஏற்றவையல்ல. தாமரை, சம்பகம் மொட்டுக்களாயினும் நல்லதே. நீரில் விளைகின்ற தாமரை முதலானவற்றிற்கும், தொடுக்கப்பட்ட பூக்கும் பழம்(பழைய)பூ என்ற தோஷமில்லை. 


ஜாதி, மல்லிகை, முல்லை , பாதிரி, அரளி, மகிழம், தும்பை, தாமரை, ஆம்பல், அல்லி, குவளை செங்கழனீர், புரசு, கடம்பம், செம்பருத்தி, நந்தியாவட்டை, புன்னை, தாழை, சம்பகம் இவற்றின் பூக்களும் வில்வம், வன்னி, துளசி, மருவு இவற்றின் இலைகளும் பூஜைக்கு ஏற்றவை. பிள்ளையாருக்குத் துளசியும் சிவனுக்குத் தாழை, முல்லை, செம்பருத்தியும், விஷ்ணுவிற்கு அக்ஷதையும் அம்பாளுக்கு அருகம்புல்லும் சூர்யனுக்கு வில்வமும் தனித்த பூஜையில் ஏற்றவையல்ல. பஞ்சாயதனமாகப் பூஜை செய்யும் போது தோஷமில்லை. சந்தனம், குங்குமப்பூ, கஸ்தூரி, புனுகு, பச்சைக்கற்பூரம் இவை மணமூட்டவும், குக்கில், தேவதாரம், சாம்பிராணி இவை தூபத்திற்கும் பசுநெய், நல்லெண்ணெய் தீபத்திற்கும் நெல், கோதுமை, யவை, துவரை, உளுந்து, பயறு, வெண்மொச்சை, எள்ளு, ஜீரகம், மிளகு, கடுகு, மா, வாழை, பலா, எலுமிச்சை, நார்த்தை, பாகல், கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி, இஞ்சி, பூசணி, வெள்ளரி, கக்கரி, பசுவின் பால், தயிர், வெண்ணெய், நெய் இவை நிவேதனப்பொருளாகவும் ஏற்றவை. புத்தரிசி, அறுவடையாகி ஒரு மாதத்திற்குள்ளானது மிகவும் ஏற்றது. துளசி பில்வம் இவற்றைப் பறிக்குமுன் அந்த செடிக்கும் மரத்திற்குமான தேவதையை வணங்கி பூஜைக்காக இலைகளைப் பறிப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும். செவ்வாய், வெள்ளி, மாலை நேரம், இரவு நேரம், சந்தியா காலம், ஸங்க்ரமண, அமாவாஸ்யை, பௌர்ணமி, கிருஷ்ணபக்ஷம் அஷ்டமி சதுர்தசி துவாதசி இக்காலங்களில் துளசியைப் பறிக்கக்கூடாது. 

விக்ரகம், யந்திரம் முதலானவற்றுக்குத் தினமும் அபிஷேகம் செய்வதில்லை. கிருஷ்ண அஷ்டமி, கிருஷ்ண சதுர்த்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாதப்பிறப்பு என்ற பஞ்சபர்வதினங்களில் அழுக்கு நீங்கும்படி அபிஷேகம் செய்வித்தால் போதும். ஆனால் தேவபூஜையில் அதிக ஈடுபாடுள்ளவர் தினமும் மூன்றுகாலங்களும் அல்லது ஒருவேளையாவது அபிஷேகம் முதலியவற்றைச் செய்வர்.

தேவபூஜைக்குப் பயன்படுத்திக் களைந்ததை நிர்மால்யம் என்பர். நிர்மால்யமான பூவைத் தலையில் தரிக்கலாம். தோளில் தரிக்கக்கூடாது. ஸாலக்கிராம தீர்த்தத்தை முதலில் பருகிப் பின் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். தீர்த்தத்தைப் பருகிய பின் கை அலம்ப கூடாது. தனுர் மாதத்தில் விடிவதற்கு முன்னரே பூஜைசெய்ய வேண்டும். மற்ற மாதங்களில் ஸந்தியா வந்தனமும் அக்னி உபாஸனமும் முடிந்த பிறகே பூஜை. பித்ரு தினங்களில் தர்ப்பணம், சிராத்தம் முடிந்த பிறகே பூஜை.

புதிதான விக்கிரகம், படம், யந்திரம் முதலியவற்றில் மந்திரபூர்வமாகப் பிராணப் பிரதிஷ்டை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். பஞ்சாயதனமாக உள்ளவைகளுக்கு பிராணப் பிரதிஷ்டையும் ஆவாஹனமும் கிடையாது. இதயத்திலுள்ள தேவதையைத் தியானித்துப் பஞ்சாயதனத்தினுள் அவர்களிருப்பதாகப் பாவித்துப் பூஜை தொடங்குவர்.

ஆஸனம் (இருக்கை தருவது), பாத்யம் (காலலம்ப நீர் வார்த்தல்), அர்க்கியம் (கைகளுக்கு மணமுள்ள நீர் அளித்தல்), ஆசமனம், மதுபர்கம் (களைப்பு நீங்க தேன் பால் கலந்த பானம் தருதல்), ஸ்நபனம் (நீராட்டுதல்), வஸ்திர தாரணம் (ஆடை உடுத்துதல்), ஆபரணம் (அணிகள் பூட்டுதல்), யஞ்ஞோபவீதம், கந்தம் (வாசனையுள்ள சந்தனம், குங்குமம் முதலியவற்றால் நெற்றிக்கு இடுதல்), அக்ஷதை (முனை முறியாத முழுஅரிசி, குங்குமப்பூ, மஞ்சளரைத்த நீரில் பிசறித்தருதல்), புஷ்பம் (பூக்களை மாலையாக்கி அணிவித்தல், புஷ்பத்தை பாதங்களில் நமஸ்காரம் என்ற பாவனையுடன் இடுதல்), தூபம் (மணமுள்ள புகை காட்டுதல்), தீபம் (நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் காட்டுதல்), நிவேதனம் (உணவளித்தல்), நீராஜனம் (சூடம் கொளுத்தி அபராதம் பொறுக்கக்கோரிச் சுற்றிக்காட்டுதல்), மந்திர புஷ்பம் (வேத மந்திரங்களைக் கொண்டு துதித்தல்), ஸ்வர்ணபுஷ்பம் (தங்கப்பூ சாத்துதல்), ஸ்தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பிரார்த்தனை, பூஜைஸமர்ப்பணம் என்ற இவை உபசாரங்கள் எனப்படும். இதை மானஸிக பாவனையாகச் செய்வது பரா பூஜை, மானஸ பூஜை எனப்படும். இதில் உலகில் மிக உயர்ந்த பொருளைக் கொண்டு பூஜை செய்வதாக பாவனை செய்து மனக்கண்ணால் தெய்வத்தின் அருள் கூர்ந்த வடிவத்தைக் காண முடியும். இயன்ற அளவு சேகரித்த பொருள்களைக் கொண்டு பூஜை செய்வது ஸபர்யை. மனத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் என்ற ஐந்தை மட்டும் ஸமர்பிப்பது மானஸ உபசாரபூஜை. பூஜையின் துவக்கத்திலும் முடிவிலும் இஷ்டதேவதையின் மந்திரஜபம் செய்து தெய்வத்தின் இடதுகையில் ஸமர்ப்பித்து மந்திர ஜபசித்தியை அருளும்படி கோருவர்.

தொடரும்...

Mar 20, 2020

அறம் செய விரும்பு - 13


வபனம் செய்ய நல்ல நாள்

திங்கள், வியாழன், புதன், வெள்ளி நல்லது. ஞாயிறு, செவ்வாய், சனி, ஷஷ்டி, அஷ்டமி, பிரதமை, சிரார்த்த திதி, அமாவாசை, குரு சுக்ர மௌட்யம் உள்ள நாள், விஷுபுண்யகாலம் உதயத்திலிருந்து 2 நாழிகைகள், ஸாயங்காலம் இவை நல்லதல்ல. மாதா பிதாக்களின் சிராத்தமாதம் அல்லது சிராத்த பக்ஷம், விவாஹம், உபனயனம், சௌளம் இவற்றிற்குப்பின் ஒருவருஷம் அல்லது 6 மாதம், வபனம் கூடாது. உபனயனத்திற்குப்பின் உபாகர்மா ஆறு மாதத்திற்குள் இருந்தால் வபனம் உண்டு. ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள், தந்தையும் மகனும் ஒரே தினத்தில் வபனம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு வபனங்கள் வெவ்வெறு நிமித்தத்தால் ஒரே நாளில் நேருமானால் ஒன்றை மந்திரத்தால் செய்து பின் மற்றதை நேரிடையாகச் செய்யலாம்.




கிருஹக்ருத்யம் - வீட்டுப்பணிகள்

ப்ராத: காலம் என்பது சூரியன் உதித்து 33/4 நாழிகைகள் (1.30 மணி). அதற்குள் ஸந்தியா வந்தனம் அக்னி உபாசனையும் முடிவடைகின்றன. பகல் போஜனத்திற்கு முன் பிரும்மயஜ்ஞம், தேவ பூஜை, வைச்வதேவம், அதிதி, விருந்தாளி, பிரம்மசாரி, ஸன்யாஸி இவர்களுக்கு உணவளித்தல் என்ற நான்கும் செய்யத்தக்கவை. ஸந்தியாவந்தனமும் ஒளபாஸனமும் முடிந்ததும் பிரும்மயஜ்ஞம், தேவபூஜை செய்து பின் தன் குடும்ப நிர்வாகத்திற்கான பணிகளைச் செய்து மதியான்ன காலத்தில் வைசுவதேவம் முதலியவற்றைச் செய்யலாம். குடும்பப் பொறுப்பு அதிகமில்லாவிடில், ஓதிய வேதத்தைத் தொடர்ந்து பிரச்னம் பிரச்னமாகச் சொல்லுதல், தக்க மாணவர்களுக்கு ஓதுவித்தல் இவற்றைச் செய்யலாம். அக்னி காரியத்தை அடுத்துக் குடும்பகாரியமும் அதன்பின் பிரும்ம யக்ஞம் தேவ பூஜை முதலானவற்றைத் தொடர்ந்தும் செய்யலாம். குடும்பகாரியம் காலையிலேயே நிறைவுறச் செய்கின்ற அவசியமில்லாவிடில் மத்யான்னம் போஜனத்திற்குப் பிறகுள்ள நேரத்தை அதற்கு ஒதுக்கி முற்பகலை ஸத்கர்மாக்களில் போக்குவதென்பதும் முன்னோர்களின் திட்டம். 

பிரும்மயஜ்ஞம் 

முன்னுரை: பொதுவாக அனுஷ்டானத்தில் மாத்யாந்ஹிக (வந்தன) த்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் செய்கின்றனர். மாத்யாந்ஹிகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. முன்னரும் செய்யலாம். காலையில் செய்வதானால் ஒளபாஸனத்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் தேவ பூஜை. மத்தியானம் செய்வதானால் மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம், தேவபூஜை; மாத்யாந்ஹிகம், தேவபூஜை, வைச்வதேவம், பிரும்மயஜ்ஞம் என்றும் செய்யலாம். பித்ரு தர்ப்பணம், சிராத்தம் நேருகிறபோது மாத்யாந்ஹிகம், சிராத்தம் அல்லது தர்பணம் பின் பிரும்மயஜ்ஞம், வைச்வதேவம் என்று வரிசை.

பிரும்மயஜ்ஞம் என்ற பெயரால் இரண்டு தனிப்பட்ட கர்மாக்கள் இணைத்துக் கூறப்படுகின்றன. இரண்டும் தனித்தனியே. முதலாவது வேதம் ஓதுதல் அதற்குத்தகுதிபெற விதிகளும். அது பிரம்மயஜ்ஞம். இரண்டாவது தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம். இவை இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்ற தினங்களில்கூட காலையில் பிரும்மயஜ்ஞம் செய்து சிராத்தத்திற்குப் பின் தேவர்ஷிபித்ரு தர்ப்பணம் வைத்துக்கொள்பவரும் உண்டு.

அவரவர் குலாசாரப்படி தன் வேதசாகையைத் தினமும் ஒதிக்கொண்டிருக்கவேண்டும். தினமும் ஒரு காண்டம் அல்லது ஒரு பிரச்னம் அல்லது ஒரு அனுவாகம் அல்லது ஒரு ருக்காவது சொல்ல வேண்டும். அல்லது நான்கு வேதங்களின் ஆதி மந்திரங்களையாவது (வேதாதியையாவது) சொல்ல வேண்டும். இது பிரும்மயஜ்ஞம். இது முடியும்வரை காலையுணவு ஏற்கக்கூடாது. இதனை ஆறு, குளக்கரையில் மேற்கூரை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். அங்கு வேதத்தை உரக்கச் செல்லலாம். வீட்டில் செய்வதானால் வேதபாராயணம் பிறர் காதுகளில் படாதபடி சொல்ல வேண்டும். வேதம் ஓதக்கூடாத நாட்களில் கூட (அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாஸ்யை, பிரதமை, மேகம் மூடிய நாள் போன்ற அனத்யயன நாட்களில்) இதனைச் செய்ய வேண்டும். தேகசுத்தி செய்ய இயலாத போதும், தேசத்தில் கொந்தளிப்பு உள்ளபோதும் செய்ய வேண்டியதில்லை. உபநயனமான பிரும்மசாரி, முதல் உபாகர்மா நடைபெறும்வரை வேதம் ஓத தகுதி பெறுவதில்லை. அந்நிலையில் காயத்திரியையே கூறி நிறைவு செய்கின்றனர்.

(ஒவ்வொரு வேத சாகையும் முதலில் பல காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காண்டத்தின் உட்பிரிவு ப்ரச்னம் அல்லது பிரபாடகம் எனப்பெறும். பிரச்னத்தின் உட்பிரிவு அனுவாகம். அதன் உட்பிரிவு பஞ்சாசத் (பஞ்சாதி). இன்று வேதாதி மட்டும் சொல்வது பழக்கத்தில் உள்ளது. அக்னி மீடே, இஷேத்வா, அக்நஆயாஹி, சந்நோதேவீ என்ற நான்கு வேதங்களின் ஆதியை (வேதாதியை) மட்டும் கூறி நிறைவு செய்கின்றனர்.)

சூரியோதயத்திற்கு முன்னும் இரவிலும் பிரும்மயஜ்ஞம் செய்யக்கூடாது. வேதம் முழுதும் ஓதியவனாயினும் முறைப்படி அதனைச் சொல்ல இயலாதவன் புருஷஸூக்தம் ஸ்ரீருத்ரம் போன்றவற்றை யாவது சொல்லி வரலாம். சூரிய நமஸ்காரத்தை முறைப்படி வேத மந்திரங்களால் செய்பவர் இதனையடுத்து பிரும்மயஜ்ஞம் செய்யலாம். 

பிரும்மயஜ்ஞம் 

தர்ப்பாஸனத்தில் கிழக்கு நோக்கி இடதுகாலின்மேல் வலதுகாலும் இடதுகையின்மேல் வலதுகையும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து ஸங்கல்பம் செய்து மந்திரத்தால் தன் உடலும் உள்ளமும் தூய்மைபெற்றதாய் உணர்ந்து வானிற்கும் தரைக்கும் நடுவே பார்வை பதித்தவனாய் காயத்திரியைப் பிரணவம், வ்யாஹ்ருதியுடன் பிரித்திணைத்தும் வரிசையாக உச்சரித்தும் பிறகு ஹரிநாமஸ்மரணமும் ஓங்காரமும் முன்னும் பின்னும் அமைய வேதாதிகளைக் கூற வேண்டும். தனது வேதத்தின் வேதாதியைக் கூறியதும் அத்தியயனம் செய்த வேதத்தின் பகுதியை முடிந்தவரை சொல்லி மற்ற வேதாதி கூறி முடிக்கவேண்டும். முடிவில் பிரும்மா அக்கினி பூமி முதலானோருக்கு மூன்று தடவை மந்திரத்தால் நமஸ்காரம் செய்யவேண்டும். இது பிரம்மயஜ்ஞம்.

பொதுவாக பிரும்மயஜ்ஞப்ரச்னம் சொல்வதாக ஸங்கல்பித்துத் தினம் ஒரு பிரச்னமாக யஜுர்வேதிகள் 82 நாட்களில் தன்சாகை முழுவதையும் சொல்லிவிடுவர். அதேபோல் மற்ற வேதத்தினரும் செய்வதுண்டு. இதனால் அத்தியயனம் செய்த வேதம் மறக்காதிருக்கும். வேதத்தை மறப்பது பெரும்பாவச் செயல். வேதத்தைத் தொடர்ந்து ஓதாதிருந்தால் பழையதாகிப் பலன் தராமல் போகும். பிரும்மயஜ்ஞப்ரச்னம் சொல்வதால் அக்குறை நீங்குகிறது. வேதத்தில் பல வேள்வி முறைகள் கூறப்பட்டுள்ளன. அந்த வேள்விகளை செய்வதால் உண்டாகிற பலன் அந்த வேதப்பகுதியைச் சிரத்தையுடன் ஓதுவதால் கிட்டுகின்றது. அதனால் தேவதைகளின் அருள் தொடர்ந்து அபரிமிதமாக கிட்டுகிறது. தொடர்ந்து வேதமோதாதவன் பிராமணன் அல்ல. அவனை துர் பிராமணன் என்பர். துர்பிராமணத்தன்மை வராதிருக்க முக்கால ஸந்தியாவந்தனமும் பிரும்மயஜ்ஞமும் உதவுகின்றன. வேதத்தின் ஒரு பகுதியை-வேதஸாரமான காயத்திரியைத் தினமும் சொல்லமுடிவதே இவற்றின் முக்கியப் பிரயோஜனம். ராமாயணம் பாகவதம் முதலியவற்றை இவற்றுடன் பாராயணம் செய்வதுண்டு.

தேவர்ஷி பித்ருதர்ப்பணம்

நாம் பிறந்ததும் மூவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம். 1.தேவர்கள் - பிரும்மா முதலானோர் 2. ருஷிகள் - வேதத்தைத் தன் தவவலிமையால் கண்டவர்களும் வேததேவதைகளும் 3. பித்ருக்கள் - நமது மூதாதையரான பித்ருக்கள் அதிவ்ய பித்ருக்கள். வஸு, ருத்ரர், ஆதித்தியர் என்ற திவ்ய பித்ருக்கள், ஸோமன், யமன், அக்னி போன்ற பித்ருக்களுக்கு உதவுபவர்கள். இந்த மூவரில் தேவர்கள் இயற்கையின் உதவியை அளித்து வாழச் செய்பவர்கள். ருஷிகள் வேதம் முதலிய அறிவு நூல்களைக் கருணையால் வெளியிட்டு வாழ வழிகாட்டியவர்கள். பித்ருக்கள், ஜீவன் தனக்கென உடலைத் தேடித்திரியும் போது உடல்தந்து வாழ்வில் நுழைத்தவர்கள். இவர்களைத் திருப்தி செய்வதற்கு தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். (தர்ப்பணம் = திருப்தி அளிக்கின்ற செயல்) இந்த தர்ப்பணம் ஆச்வலாயனம், ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய ஸூத்திரங்களில் ஒவ்வொரு வேதசாகையைச் சேர்ந்தவர்க்கும் தனித்தனியே கூறப்பட்டுள்ளது. அவர்கள் தந்தம் முறைப்படியே தர்ப்பணம் செய்யவேண்டும். முழுவதும் செய்ய இயலாவிடில் "ஆபஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது" - "பிரம்மாவிலிருந்து புழுவரை உள்ள எல்லா உயிரினங்களும் திருப்தி அடையட்டும்" என்று அஞ்சலி நிறைய ஜலம் எடுத்து மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தேவர்களுக்கு உபவீதியாயும் (இடது தோளிலிருந்து வலது விலா சுற்றி வரும்படி பூணூலை தரித்தும்) ருஷிகளுக்கு நிவீதியாகவும் (பூணூலை மாலையாகத் தரித்தும்) பித்ருக்களுக்கு பிராசீநா வீதியாயும் (பூணூலை வலது தோளிலிருந்து இடதுவிலா சுற்றிவரும்படி தரித்தும்) தர்ப்பணம் செய்யவேண்டும். தேவர்களுக்கு இருகை விரல்களின் நுனியைக் கீழே சாய்த்து அஞ்சலி நிறைந்த நீரைவிட வேண்டும். ருஷிகளுக்கு வலது கையின் உட்புறம் (சுண்டுவிரல் உள்ள பகுதியைத் தாழ்த்தி) அதன்வழியே நீர்விழும்படி விடவேண்டும். பித்ருக்களுக்கு கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே உள்ள பகுதியைத்தாழ்த்தி அதன்வழியே நீர்விடவேண்டும். நீரைத் தர்ப்பம் பரத்திய தரையில் விடவேண்டும். அல்லது தாமிரம் வெள்ளி தங்கம் வெண்கலம் இவற்றாலான பாத்திரத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன்மேல் நீர் விடவேண்டும், முடிவில் உபவீதியாகி ஆசமனம் செய்ய வேண்டும்.

தொடரும்..

Mar 18, 2020

அறம் செய விரும்பு - 12



தர்ப்பத்தால் பவித்ரம் தரித்தல்

பொதுவாக பிராமணன் செய்கின்ற நித்திய நைமித்திக கர்மங்களில் தர்ப்பத்தால் ஆசனம் ஆக அமைத்து அதன்மேல் உட்கார்ந்து மோதிரவிரலில் தர்பத்தால் ஆன பவித்ரத்தை தரித்து மேல் சில 2-4 தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு சங்கல்பம் செய்வர். தர்ப்பை ஆசனம் இல்லாவிடில் தர்ப்பங்களைப்பரப்பி அதன் மேல் உட்காரலாம். தர்ப்பம் மிகவும் புனிதமானது. தர்ப்பம்பட்ட கைகள், தர்ப்பத்தால் துடைக்கப்பட்ட பாத்திரங்கள், தர்ப்பம் பட்ட நீர், நெய் தரை முதலியவை தூய்மை பெறுகின்றன. ஸ்னானத்திற்கு ஸங்கல்பம் செய்வதிலிருந்து மந்திர பூர்வமாக செய்கின்ற பணிகள் அனைத்திலும் தர்ப்பமும் தர்ப்பத்தாலான பவித்ரமும் பயன்படுகின்றன. தர்ப்பத்திற்குப் பதிலாக தங்கத்தாலான பவித்ரம் என்ற மோதிரத்தை மோதிர விரலிலும் வெள்ளியாலானதை ஆட்காட்டி விரலிலும் தரிப்பர். தந்தையும் மூத்த சகோதரரும் உயிருடன் உள்ளவரை வெள்ளியாலானதைத் தரிப்பதில்லை. தாமிரம் 8 பங்கு, வெள்ளி 12 பங்கு, தங்கம் 11 பங்கு சேர்த்துச்செய்த திரிலோஹ மோதிரம் மிகவும் சிறந்தது. புண்ணியகருமங்கள் செய்யும் போது 2-4 தர்ப்பங்களாலும் பித்ருகர்மத்தில் (சிரார்த்தம் அமாவாசை தர்ப்பணம் முதலியவை) 3 தர்ப்பங்களாலும் அபரக்கிரியை  செய்யும்போது ஒரு தர்ப்பத்தாலும் ஆன பவித்ரத்தைத் தரிப்பர்.


தர்ப்பத்தைப்போல் விச்வாமித்ரம், நாணல்புல், அருகம்புல், நெற்புல், யவைப்புல், புல் இவற்றைக் கொண்டும் பவித்ரம் செய்து தரிக்கலாம். தர்ப்பமோ விச்வாமித்ரமோ கிடைக்காத இடத்தில் மற்றவை பயன்படும்.

தினமும் புதிதாய் கொணர்ந்த தர்ப்பமே சிறந்தது. ஒரு தடவை பயன்படுத்திய தர்ப்பம் மறுபடி உபயோகிக்கத்தக்கதல்ல. அமாவாசையன்று தர்ப்பம் கொணர்ந்தால் ஒரு மாதம் பயன்படுத்தலாம். மாசி ஆவணி அமாவாசையில் எடுத்த தர்ப்பம் பலதடவைகளில் பயன்படுத்தலாம். ஸந்தியாகாலத்திலும் இரவிலும் தர்ப்பம் பறிக்கக்கூடாது. அக்னி குண்டத்தைச் சுற்றியும் ஆஸனத்திலும் பிண்டத்தின் அடியிலும் பிரும்மயஜ்ஞம் பித்ரு தர்ப்பணம் இவைகளிலும் உபயோகப்படுத்திய தர்ப்பம் மறுபடி உபயோகிக்கத்தக்கதல்ல. கர்மாவின் நடுவில் ஆசமனம் பாதங்களை அலம்புதல் போன்றவை செய்ய நேரும் போது பவித்திரம் கழற்றி வலது காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் முதலியவை செய்தபின் மறுபடி விரலில் தரித்துக் கொள்வர். ஸங்கல்பித்த காரியம் முடிந்ததும் அந்த பத்திரம் கழற்றி முடிப்பு அவிழ்த்து வடக்கில் போடவேண்டும். உடன் வேறு கர்மாவிற்கு ஸங்கல்பம் செய்வதாயிருந்தால் புது பவித்ரம் தரிக்க வேண்டும்.


அக்னி உபாஸனை

பிராமணனின் முதலாவதும் முடிவானதுமான தேவதை அக்னி. அதிலேயே மற்ற தேவதைகளையும் அவன் ஆராதிக்கிறான். அதேபோன்று அவன் வழிபடுமிடம் ஜலம். இரண்டும் இயல்பாகவே மிகவும் தூய்மை மிக்கவை. தூய்மை மிக்க இடங்களில்தான் தேவதைகளின் அருட்சக்தி பரவும். அதனால் அக்னிஉபாசனை மிக முக்கியமானது. அக்னியை முன்னிட்டு உபநயனம், விவாஹம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மம் என்ற அனைத்துக் கர்மங்களும் நடைபெறுகின்றன. அவனது இறுதியும் அக்னியில் தான். உபனயனமாகி மந்திரங்கள் மூலம் தேவதை அருள்பெறத் தகுதி பெறுபவர் அனைவரும் அக்னியை வழிபடுகிறார்கள். உபனயனத்தன்றே பிரும்மசாரி அக்னியை உபாசிக்கத் தொடங்குகிறான். அதனை ஸமிதாதானம் என்பர். திருமணம் மூலம் கிருஹஸ்தனானதும் அக்னியை மனைவியின் உதவியுடன் வழிபடத் தொடங்குகிறான். அதனை ஒளபாஸனம் என்பர். மேலும் தகுதிகளை வளர்த்துக்கொண்டு வேள்விகள் செய்யத் தகுதிவந்ததும் அக்னியை மூன்று இடங்களில் வளர்த்து வழிபடுகிறான். அதனை அக்னி ஹோத்ரம் என்பர். இப்படி வழிபடுகின்ற அக்னியின் மூலமே அவனது இக-பர நன்மை நாடிச்செய்கின்ற நற்கருமங்கள் முழுமை பெறுகின்றன.

பிரம்மசாரி தான் வழிபட்ட அக்னியிடம் தன் உடல்-உள்ளங்களின் பாதுகாப்பு, வலிவு, தான் நல்வழிபடல், வாழ்வின் மேன்மை , புகழ், செல்வம், கல்வி, அறிவு, மேதை, தத்துவ அறிவு, ஒளிமிக்கதான எதிர்காலம், தனக்குரிய பங்கைப் பிறர் அபகரிக்க முடியாமற் செய்தல் முதலியவற்றை வேண்டிப் பெறுகிறான். அந்த ஹோம விபூதி கொண்டு தன்னிடம் எல்லா நன்மைகளும் நிலைத்திருக்கும்படி ரக்ஷை செய்துகொள்கிறான். அக்னியே இவனுக்கு உபாஸனா தெய்வம். இதன் விரிவே ஒளபாஸனமும் அக்னிஹோத்ரமும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உலகிற்கும் நன்மையை வேண்டி இவை செய்யப்படுகின்றன.

பிரும்மசாரி தனக்காகத் தான்மட்டும்தான் ஸமிதாதானம் செய்யமுடியும். கிருஹஸ்தன் தான் இல்லாதபோது மனைவி, புத்திரன், சிஷ்யன், குரு, சகோதரன், மருமகன், மாப்பிள்ளை அல்லது தன்னால் வரிக்கப்பெற்ற ருத்விக் இவர்களைக்கொண்டு செய்து கொள்ளலாம். ஆனால் தம்பதிகளில் ஒருவராவது இல்லாதபோது ருத்விக் அல்லது மற்றவர் மூலம் செய்ய முடியாது. தொடர்ந்து செய்யமுடியாவிடில் ஹோமத்திரவ்யத்தைக் கணக்கிட்டு அதனைத் தானம் செய்யலாம். அக்கினியில் ஸமித்து அன்னம் நெய் என்ற மூன்று பொருள்களைக் கொண்டு ஹோமம் செய்யப்படுகின்றது. உபாசிக்கின்ற தேவதையையும் நாடுகின்ற பலனையும் ஒட்டி ஸமித்தும் அன்னமும் மாறுபடும். நெய் எல்லாவற்றிலும் பொதுவானது. பசுவின் நெய் ஹோமம் செய்ய தகுந்தது.

அரசு, புரசு, அத்தி, கருங்காலி, நாயுருவி, எருக்கு, வன்னி இவற்றின் குச்சிகளும் அருகம்புல்லும் தர்ப்பமும் ஹோமத்திற்கான ஸமித்துகளாகப் பயன்படுபவை. அரசு, புரசு, தர்ப்பை என்ற மூன்றே பொதுவாக எல்லா கர்மாக்களிலும் பயன்படுகிறது. அரசு மரத்திலிருந்து தானே ஒடிந்து விழுந்த குச்சியையே பயன்படுத்துவர். மற்றவற்றில் புழு துவாரமிட்டது, கோணலானது, இருகிளையுள்ளது, தோலில்லாதது, தானே உதிர்ந்தது, பசை இல்லாதது இத்தகைய சமித்துக்கள் பயனற்றவை. எதையும் தானே சேகரிப்பது மிகச்சிறந்தது.

ஹோமம் செய்யும் போது அதன் மந்திர உச்சாரணத்தைத் தவிர மற்ற பேச்சு கூடாது.

அக்கினிக்கு ஏழுநாக்குகள். அக்னி குண்டத்தில் அக்னிபரவியுள்ள நிலையில் கிழக்கு தென்கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வடகிழக்கு நடுப்பகுதி என்ற ஏழிடங்களில் வெளியாகின்ற ஜ்வாலையே அதன் நாக்குகள், அவற்றிற்கு முறையே வரிசையாக ஸுப்ரபா, அதிரக்தா, கிருஷ்ணா, ஸுவர்ணா, ரங்தா, பஹுரூபா, கனகா என்று தனிப்பெயர் உண்டு. காம்யகர்மங்களில் (குறிப்பிட்ட பலனைக் கோரிச் செய்வதில்) கிழக்கில்; சாந்தி (கிரஹபீடை சத்துருபீடை முதலியவை அடங்க) கர்மங்களில் தென்கிழக்கில், பித்ருகார்யங்களில் தெற்கில், விவாஹத்தில் மேற்கில் உபனயனத்தில் வடக்கில், உக்கிர கர்மாக்களில் (சத்ரு- நாசம் முதலியவற்றில்) வடகிழக்கில் வேள்விகளில் நடுவில் உள்ள ஜ்வாலைகளில் ஹோமம் செய்வர்.

காலை அக்னியை வழிபட்டதும் மங்களப் பொருள்களைப் பார்க்கவேண்டும். அருகம்புல், நெய், தயிர், நீர் நிரம்பிய கலசம், கன்றுடன்கூடிய பசு, எருது, தங்கம், மண், கோமியம், அமாவாசை, தேன், கன்னிப் பெண், ஆசாரசீலரான பிராம்மணன், அக்னி, சந்தனம், வெள்ளைப் பூ, ரத்தினம், அரசன், துறவி, குரு, கடல் இவை மங்களப்பொருள்கள்.

பூனை, மாடப்புறா, கிளி இவற்றை வளர்ப்பது நல்லது. பசுவைச்சொரிந்து விட்டு, புல் ஆத்திக்கீரை முதலியவைகளைத் தருவதும், அரசமரத்தைச் மரத்தைச் சுற்றிவருவதும், தன்னை விட மூன்று வயது பெரியவர்களையும் குருவையும் வணங்குவதும் நல்லது.

அக்கினி உபாசனையில் கவனிக்கத்தக்கவை

பிரும்மசாரி ஸமிதாதானத்தை ஒவ்வொரு வேளையிலும் புதிதாகக் கொணர்ந்த அக்கினியில் செய்யலாம். ஒளபாஸனத்திற்கான அக்கினியை எப்போதும் அணையாமல் குண்டானில் வைத்துக் காப்பாற்றுவர். அப்படி அணைந்தால் அரணிக்கட்டையைக் கடைந்து அக்கினியைப் பெறலாம். அல்லது வேதமோதி அக்கினியைப் பரிபாலிக்கின்றவருடைய வீட்டிலிருந்து அக்கினியைக் கேட்டுப்பெறலாம். தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ந்து ஒளபாஸனம் செய்யாவிடில் அது லௌகிகாக்கினி (அடுப்பில் உள்ள நெருப்பாக) ஆகிவிடும். மறுபடி அக்கினி ஸந்தானம் பிராயச்சித்தத்துடன் செய்யவேண்டும். வெளியூர் செல்ல நேர்ந்தால் தன்னிடமோ, ஸமித்திலோ அரணிக் கட்டையிலோ ஆரோபணம் செய்து, புது இடத்தில் அரணி கடைந்தோ எடுத்துப்போன ஸமித்தைக் கொண்டோ அக்கினியை உண்டாக்கி ஒளபாஸனம் செய்யலாம். 

அக்கினியை வலுப்படுத்த வாயால் ஊதக்கூடாது. தமனிக்குழாயின் மூலம் ஊதியோ, விசிறியால் விசிறியோ பெரிதுபடுத்தலாம். 

அக்கினியில் இட்ட பொருள் அருள் வடிவம் பெற்று இடுபவனைக் காப்பதுடன் சூரியனிடம் செல்கிறது. சூரியன் அதை மேகமாக்கிப் பொழிகிறான். தானியங்களையும், ஜீவராசிகளையும் போஷிக்கிறான். ஒவ்வொரு அந்தணர் செய்கின்ற நற்செயலும். இவ்வாறு உலக நன்மைக்குப் பயன்படுகின்றது.

தொடரும்...

Mar 17, 2020

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 7

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 7


பந்தஸ்வரூபம் - பிறப்பு எப்படி?

புல்லறிவாண்மை
அழியாத ஆத்மாவாக இருக்கின்ற ஜீவர்கள் அறியாமையினால் மூடப்பட்டு, உடல் அபிமானம் கொண்டு தான் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டதாக கருதுகிறார்கள். நிலையில்லாத உடலையும் உலகையும் நிலையானதாகக் கருதுகிறார்கள்.

எல்லாப் பொருள்களுள்ளும் மாறாத இருப்பாக இருப்பவர் இறைவன். ஆகவே அவர் மெய்ப்பொருள் எனப்படுகின்றார். மற்ற எல்லாப் பொருள்களும் மெய்ப்பொருளான இறைவன் மேல் நாம ரூபங்களாக - பெயர்வடிவங்களாக - மாயையினால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாமரூபங்களில் மயங்குகின்ற ஜீவர்கள் நிலையில்லாத தோற்றமாத்திரமான உலகத்தினை உண்மை என்று நினைக்கும் கீழான அறிவை அடைகிறார்கள். 

நில்லாதவற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. (திருக்குறள் 331)

மருளானாம் மாணாப் பிறப்பு
உயிர்களுக்கு ஒரு பிறவி அல்ல. பல பிறவிகள் உண்டு அப்படி பிறவிகள் தோன்றுவதற்கு காரணம் மருள் என்ற மயக்கம்  - அறியாமை. மெய்ப்பொருளை அறியாது பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று கருதி வாழ்க்கையை நடத்துவதே மருள். இந்த அறியாமையே பிறவிக்கு காரணமாக இருக்கின்றது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு. (திருக்குறள் 351)

வகுத்தான் வகுத்த வகையல்லால்
மனிதன்கள் மனதில் உள்ள விருப்பு - வெறுப்புகளால் தூண்டப்பட்டு உடலிலுள்ள பொறிகளின் வழியாக உலக விஷயங்களைத் தொடர்புகொண்டு இன்பதுன்பங்களை அனுபவிக்கிறார்கள். உடலின் இன்ப துன்பங்களை தன்னுடையதாக கருதுகிறார்கள். இன்பங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் துன்பங்களை போக்கிக் கொள்வதற்காகவும் பல விதமான வினைகளை தர்மமாகவோ அதர்மமாகவோ செய்கிறார்கள். அவ்வாறு செய்கின்ற வினைகளுக்கு த்ருஷ்டபலனோடு அதிர்ஷ்டமாக புண்ணியபாப பலனும் ஏற்படுகின்றது. இந்த புண்ணிய பாபங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின்னர் ஈச்வரனால் இன்ப துன்பங்களாகக் கொடுக்கப்படுகின்றன. திருக்குறளில் ஊழ் அதிகாரம் அதையே காட்டுகின்றது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது (திருக்குறள் 377)

பிறப்பீனும் வித்து
ஒரு பிறவியில் அனுபவித்து முடியாத புண்ணிய பாப பலன்கள் அடுத்த பிறவிக்குக் காரணமாக அமைகின்றன. அடுத்த மனிதப்பிறவியில் மீண்டும் ஜீவனால் அறியாமையினாலும் ஆசையினாலும் புதிய வினைகள் செய்யப்பட்டு புண்ணிய பாபங்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி பிறவி தொடர்கின்றது முடிவில்லாமல்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து.  (திருக்குறள் 361)

தொடரும்...

Mar 16, 2020

அறம் செய விரும்பு - 11




ஸந்தியாவந்தனம்

சூரியனின் உதயத்திற்கு முன் 2 நாழிகை (48 நிமிஷங்கள்) காலை நேரத்து ஸந்தியாவந்தனத்திற்கு முக்கியகாலம். உதயத்திற்குப் பின் 3 3/4நாழிகை (1 1/2 மணி நேரம் ) கௌணகாலம். உதயம் முதல் 11 நாழிகைக்குமேல் 15 நாழிகை வரை (10.30 மணி முதல் 12 மணிக்குள்) மாத்யான்னிகத்திற்கு முக்யகாலம். அஸ்தமனம்வரை கெளணகாலம் அஸ்தமனத்திலிருந்து 2 நாழிகை வரை மாலை ஸந்தியாவந்தனத்திற்கு உரியகாலம். 

ஸந்தியாவந்தனத்தில் அர்க்க்யப்ரதானம் முக்யம் என்பர். பிரும்மைவாஹமஸ்மி என்ற பிரும்ம-ஆத்ம ஐக்ய அனுஸந்தானம் முக்கியமெனச்சிலர். காயத்ரி ஜபமும் காயத்ரியின் உபஸ்தானமும் முக்யமெனச்சிலர். இவற்றை அந்த முக்கிய ஸந்தியா காலத்தில் செய்யவேண்டும் என்பதுதான் நோக்கம். உரிய முக்கிய காலம் தவறினால் காலாதீத பிராயச்சித்தம் என்று ஒரு அர்க்க்யம் கூட விடவேண்டுமென்றிருப்பதால் அர்க்ய ப்ரதானத்தையாவது உரியகாலத்தில் செய்ய வேண்டும்.

பகலும், இரவும் அவ்வாறே இரவும் பகலும் சந்திக்கும் வேளை சந்தியா காலம். அக்காலத்தில் செய்யப்படுகின்ற வந்தனம் ஸந்தியாவந்தனமாகும். அக்காலத்தில் தியானிக்க வேண்டிய தேவதையின் பெயர் ஸந்தியாதேவி. அவளுக்கான வந்தனமிது. அதனாலும் ஸந்தியாவந்தனம். இந்த கர்மாவில் தியானம் கூடுவது முக்கியம். காயத்திரி தேவியை நன்கு தியானித்து வழிபடுவதால் சந்தியாவந்தனம். இதில் ஸங்கல்பம், ஜலதேவதையை பிரார்த்தித்து தூய்மை பெறுதல், சோம்பலை நீக்கித் தெய்வீகமான தூண்டுதல் பெற அர்க்க்யபிரதானம், ஆத்மானுஸந்தானம், நவக்ரஹங்கள், ரக்ஷா தெய்வமான விஷ்ணு இவர்களுக்கு தர்ப்பணம். பிரணவம், வ்யாஹ்ருதி, காயத்ரி, காயத்ரிசிரஸ் என்ற மந்திரங்களால் பிராணயாமமும் ஜபமும், காயத்ரிதேவியின் உபஸ்தானம், நேரத்தை ஒட்டி மித்ரன் ஆதித்யன் வருணன் என்ற வடிவில் உதவுகின்ற பரம்பொருளையும் திக்தேவதைகளையும் யமனையும் விச்வரூபரையும் நாராயணனையும் வணங்கி நாராயணனிடம் செய்ததை ஸமர்ப்பித்தல் என்பது முக்கால ஸந்தியாவந்தனத்தின் நிகழ்ச்சி நிரல். பொதுவாக பவித்ரம்-தர்ப்பம் தரித்தே எல்லா நற்பணிகளையும் செய்ய வேண்டும் எனும் நியமம் இதற்கும் பொருந்தும். எனினும் பெரும்பாலும் இதற்குப் பவித்ரம் தரிப்பதில்லை. ஏழு நாட்கள் தொடர்ந்து சந்தியாவந்தனம் செய்யாதவர்-பதிதன். மறுபடி உபனயனம் செய்து கொள்ளவேண்டும் என்பர்.

ஸந்தியாவந்தனத்தின் பொதுவழிகள்

ஆசௌச காலத்தில் கூட சந்தியாவந்தனம் முக்கியம். அபரக்ரியை தொடங்கும் நேரம் ஸந்தியாவந்தனத்திற்குரிய நேரமாயிருந்தால் ஸந்தியாவந்தனம் செய்த பின்னரே அபரக்ரியைத் தொடங்க வேண்டும். ஸந்தியாவந்தன வேளையில் வேறு எந்தப்பணி குறுக்கிட்டாலும் அதைத் தள்ளி வைத்து விட்டு ஸந்தியாவந்தனத்தைச் செய்ய வேண்டும். காலையில் ஸ்நானம் செய்ய இயலாதபோது கௌண ஸ்நான முறையில் உடலைச்சுத்தி செய்து புண்ட்ரதாரணம் செய்துகொண்டு உடன் முறைப்படி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

காலையிலும் மத்யான்னத்திலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்கியம் விடவேண்டும். இரண்டு கைகளிலும் ஜலத்தை நிரப்பி வணங்கி நின்று சூர்யனுக்கு எதிராய் உயர்த்தி அர்க்க்யம் விடவேண்டும். இரண்டு கைகளையும் பிரித்து கைகளின் இடையே ஜலம் விழும்படி விட வேண்டும். இரு கட்டை விரல்களையும் மற்ற விரல்களுடன் சேராமல் பிரித்துவிட வேண்டும்.

ஜபம்

கிழக்கு அல்லது வடக்கு முகமாய் அமர்ந்து செய்ய வேண்டும். அமைதியுடன் அமர்ந்து தியானம் கூடும் வகையில் ஆஸனமிட்டு உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். மான்தோல், புலித்தோல், தர்ப்பம், வஸ்திரம், கம்பளி, மரப்பலகை இவற்றால் உறுத்தாதவாறு ஆஸனம் அமைத்து அதில் பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம் முதலியதில் ஏதேனும் ஒரு பழக்கப்பட்ட ஆஸனமுறைப்படி அமரவேண்டும். காலையிலும் மத்யான்னத்திலும் நின்றுகொண்டும் மாலையில் உட்கார்ந்தும் ஜபம் செய்வது உத்தமம். காலையில் மூக்குக்கு நேராகக் கைகளை நிமிர்த்தி வைத்துக்கொண்டு கைகளை உத்தரியத்தால் மறைத்து ஜபம் செய்யவேண்டும். மத்யான்னத்தில் மார்பிற்கு நேராகவும் மாலையில் நாபிக்கு சமமாக மலர்த்திக் கீழ்தாழ்த்தியும் வைத்து ஜபம் செய்யவேண்டும். பிரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்திரியின் மூன்று பாதங்கள் என்ற ஐந்தையும் சேர்க்காமல் தனித்தனியே உச்சரிக்க வேண்டும். மனத்திற்குள் ஜபிப்பது சிறந்தது. பிறர் காதுபடச் சொல்லாமல் வாய்க்குள் சொல்லிக்கொள்வது மத்யமம். பிறர் காதுபட ஜெபிப்பது அவ்வளவு சிரேஷ்டமல்ல. பொருள் உணர்ந்து தேவதை மந்திரம் இரண்டையும் உணர்ந்து ஜபிப்பது நல்லது. ஜபிக்கும்போது தொப்புளுக்குக் கீழுள்ள பகுதியைத் கைகளால் தொடக்கூடாது. தொட்டால் கைகளை ஜலம் இட்டு அலம்ப வேண்டும். அல்லது வலதுகாதைத் தொடவேண்டும். ஜலத்தில் நின்று ஜபிப்பதானால் ஈரவஸ்திரத்துடனும் ஜெபிக்கலாம். ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம், தாமரைக் கொட்டை இவற்றைக் கொண்டு 27-54-108 மணிகள் கொண்ட மாலைகட்டி நடுவில் மேருவாக ஒரு மணியைத் தொங்கவிட்டு அதனைக் கொண்டு ஜபத்தை கணக்கிடலாம். விரல்களைவிட்டு எண்ணுவதும், விரல்களின் ரேகையில் கட்டை விரலைப் பதித்து எண்ணுவதும் உண்டு. தியானம் சிதறாமல் எண்ணிக்கையும் தவறாமல் ஜபிப்பது நல்லபலன் அளிக்கும். ஜபமாலையை நடுவிரலில் அல்லது மோதிர விரலில் தொங்கவிட்டு கட்டை விரலால் தள்ளிக் கணக்கிடலாம். கட்டை விரல் வைத்து நடுவிரலால் உருட்டலாம். மேருவைத் தாண்டாமல் மறுபடி திருப்பி உருட்டுவதும் அவசியம். அம் ஆம் இம் ஈம் என்று மாத்ருகாக்ஷரங்களை கொண்டு புற சாதனமின்றி ஜபிப்பது மிகச்சிறந்தது. குருமுகமாக இம்முறையைப் பெறுவது அவசியம், 

ஜபம் முடிந்து காயத்ரி உபஸ்தானம் தொடங்கி ஜப ஸமர்ப்பணம் வரை செய்து முடித்ததும் அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை குருவின் உபதேசம் பெற்றுச் செய்யலாம், ஸ்ரீருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் முதலிய ஸூக்தங்களையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்வது பாபத்தைப் போக்கி மன அமைதியைத் தரும்.

தொடரும்...

Mar 13, 2020

அறம் செய விரும்பு - 10

வஸ்திரதாரணம் - ஆடை உடுத்தல்

மேலாடை (உத்தரீயம்) இடுப்பு வஸ்திரம் என இரண்டு ஆடைகள் எப்போதும் தரிக்க வேண்டும். உத்தரீயமின்றி ஒரு நற்கருமமும் செய்ய முடியாது. உத்தரீயத்தை இடுப்பிலும் இடுப்பாடையை உத்தரீயமாகவும் தரிக்கக்கூடாது. வெளுத்த ஆடை நல்லது. வேறு சாயம் உள்ள ஆடையை தரிக்கக் கூடாது. உலர்ந்த ஆடை உடுத்தியே நற்கருமங்கள் செய்ய வேண்டும். ஆடை உலர்ந்திராவிடில் ஈரவஸ்திரத்தை ஏழு தடவை காற்றில் உதறித் தரிக்கலாம். சணல் கம்பளி பருத்தி பட்டு இவற்றால் ஆடையை தரிக்கலாம். உத்தரியமில்லாத நிலையைத்தவிர்க்க கிருஹஸ்தன் மூன்று பூணூல்களைத் தரிப்பது உண்டு. இடது தோளின்மேல் பூணூல் போல் போட்டு வலது விலாப்புறமாகச் சுற்றி உத்தரீயத்தைத் தரிக்க வேண்டும். வஸ்திரம் தரித்தபின் இருதடவை ஆசமனம் செய்ய வேண்டும். வேண்டும். ஸ்னானத்தின் போது தரித்திருந்த இடுப்பாடையை நான்காய் மடித்து நிவீதியாய் நின்று மரத்தடியில் பிழியவேண்டும். "உச்சிஷ்ட பாகிநோ தாஸா: யே ம்ருதாஸ் தே த்வமந்த்ரகா: த்ருப்யந்து தருதாம் யாதா: மம ஸம்பந்த்திநோ நரா:" என்னோடு தொடர்புகொண்டு என் வீட்டில் மீதமுள்ள உணவை உண்டு எனக்குப் பணியாளாயிருந்தவர், இறந்து மந்திரமில்லாமல் உத்தரக்ரியை நடந்து நற்கதி பெறாமல் மரம் செடியாகப் பிறந்தவர்கள், இந்த துணி பிழிந்து நீரால் திருப்தியடையட்டும்" என்று கோரி விட்ட அந்த நீரைத் தர்பணமாக நினைக்க வேண்டும். பிழிந்த வஸ்திரத்தை இடது கையின் மணிக்கட்டின்மேல் வைத்துக்கொண்டு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். புதிய ஆடையாயின் மந்திர பூர்வமாக தரிக்க வேண்டும்.

ஆடை தரிப்பதில் முறையுண்டு. உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக்கொண்டு பூணூலை மாலையாக (நிவீதமாக) வலது காதில் சுற்றிக் கொண்டு கீழாடையை தரிக்க வேண்டும். சிவப்பு கருப்பு மற்றும் நீலச்சாயம் ஏற்றிய ஆடை, தலைப்பில்லாத ஆடை உடுத்தக்கூடாது. கச்சமுறையில் கிருஹஸ்தன் ஆடை உடுத்த வேண்டும். கச்சமுறையில் ஆடை உடுத்தாதவன் நல்ல கர்மா செய்வதால் பலனில்லை. ஆடையின் நுனி தனித்துத் தொங்காமல் உடுத்துவதே இந்த கச்சமுறையின் சிறப்பு. உடல் உள்ளங்களின் சக்தி சிதறாதிருப்பதற்கே இந்த கச்சமுறை. நுனியின் ஒருபக்கத்தை மட்டும் செறுகிக்கட்டுவது புச்சகச்சம். தலைப்பைவிட்டு நடுவில் சொருகிக் கொள்வது திர்யக்கச்சம். தொங்கும் நடுப்பகுதியை நடுவில் தூக்கிக்கட்டுவது ஊர்த்த்வகச்சம். அறை நாண்கயிற்றின் வலிவில் கச்சம் கட்டுவது கடிஸூத்ரகச்சம். இவை ஆடை இல்லாத நிலைக்கு ஒப்பானது. அரைஞாண் கயிறும் கௌபீனம் இல்லாதவனும், தட்டுச்சுற்றாக ஆடையை கட்டிக்கொண்டவனும், உத்தரீயமில்லாதவனும் ஆடையில்லாதவனே. உத்தரீயம் பூணூலைப்போன்று சுத்தமாகவும் இடுப்பிற்குக்கீழ் கொணராமலும் உடுத்தவேண்டும். அசுத்தநிலையில் தலையில் கட்டிக் கொள்ளலாம்.




புண்ட்ரதாரணம் - நெற்றிக்கு இட்டுக்கொள்வது 

நெற்றிக்கு அவரவர் குலாசாரப்படி ஏதேனும் இட்டு கொள்ள வேண்டும். அபரக்கிரியை செய்யும்போது மட்டும் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. விபூதியை ஜலம்விட்டுக் குழைத்து நெற்றிக்குக் குறுக்கே மூன்று பட்டையாக இட்டுக்கொள்வதை திரிபுண்ட்ரம் என்பர். கோபிசந்தனம், நாமக்கட்டி, ஸ்ரீசூர்ணம் முதலியவற்றால் நெற்றியில் கீழிருந்து மேல் இட்டுக்கொள்வது ஊர்த்வபுண்ட்ரம். புண்ட்ரத்தை அவரவர் குலாசாரத்தையொட்டித் தரிக்கவேண்டும். விபூதியால் ஊர்த்வபுண்ட்ரமோ கோபிசந்தனத்தால் த்ரிபுண்ட்ரமோ த்ரிபுண்டரத்தின் மேல் ஊர்த்வ புண்ட்ரம் இட்டு கொள்வதில்லை. கோபிசந்தன ஊர்த்வ புண்ட்ரத்தின் மேல் விபூதியால் திரிபுண்டரம் இட்டுக்கொள்வதும், உத்தூலானமாக (புழுதிவிபூதியாக ஜலத்தில் குழைக்காமல்) இட்டுக்கொள்வதும் வழக்கில் உள்ளது.

அக்னிஹோத்திரத்தில் கிடைத்த பஸ்மம், விரஜாஹோமம் செய்தெடுத்த பஸ்மம், ஒளபாஸனம், கணபதி முதலிய தேவதைகள் குறித்து ஹோமம் செய்தெடுத்த பஸ்மம் தரிக்கத் தக்கது. விபூதி இட்டுக் கொள்ளும்போதும் கோபிசந்தனமிட்டுக்கொள்ளும் போதும் இறைவனின் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபிப்பது நல்லது.

தொடரும்...

Mar 12, 2020

அறம் செய விரும்பு - 9



புண்யகாலத்தில் புண்ய தேசத்தில் ஸ்நானம்
சிவலிங்கத்திற்கு எதிரில் உள்ள குளம் சிவகங்கை எனப்படும். விஷ்ணுவின் ஆலயத்தின் அருகில் உள்ள குளம் விஷ்ணுகங்கை எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்யப் பாவமனைத்தும் நீங்கும். சித்திரை மாதத்து கிருஷ்ண சதுர்தசியில் சிவகங்கையில் நீராடுவது மிகச்சிறந்தது. கார்த்திகை பவுர்ணமியில் புஷ்கரத்திலும் மாசி பௌர்ணமியில் பிரயாகையிலும் செவ்வாய்க்கிழமை கூடிய அமாவாசையில் கங்கையிலும் ஸ்நானம் செய்வது மிகச்சிறந்தது. ஜன்ம நக்ஷத்திரம், பூசம், வ்யதீபாதம், வைத்ருதி, ஞாயிறு- செவ்வாய்-சனிக்கிழமைகள் இவைகளில் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது சிறந்தது. மாசியில் சுக்லஸப்தமியில் புண்ய நதியில் அருணோதயத்தில் ஸ்நானம் செய்வது சூரியகிரகண ஸ்நானத்தை ஒத்தது. புதன்கிழமை புனர்வஸு கூடியிருந்தால் நதியில் நீராடுவது வாஜபேயயாகம் செய்த பலனைத்தரும். ஏகாதசியில் நெல்லிக்காய் தேய்த்துப்பின் ஸ்நானம் செய்வது விஷ்ணுவின் அருளைப்பெறச் செய்யும். பெரும் செல்வத்தை விரும்புபவன் த்விதீயை, ஷஷ்டி, ஸப்தமி, நவமி, தசமி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி, ஸங்கிரமணம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் நெல்லிக்காய் தேய்த்து நீராடுவது நல்லது. அரசமரத்தின் நிழல்படுகின்ற நீர்நிலையில் வியாழனன்றும் அமாவாசையன்றும் ஸ்நானம் செய்வது பிரயாகையில் ஸ்நானத்திற்கு ஒத்தது. மாசி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆண்கள் சூரிய உதயத்திற்கு முன்னும், பெண்கள் உதயத்தின் போதும் ஹர மஹாதேவ ஹரி: மாதவ கோவிந்த அச்யுத கிருஷ்ண என்று இறைவன் நாமத்தைக் கூறிக்கொண்டு நதியில் ஸ்நானம் செய்தல் மிகச்சிறந்தது. ஆடி கார்த்திகை, மாசி, வைகாசி மாதத்தில் பௌர்ணமியில் (ஆகாமாவை) காலையில் நதியில் ஸ்நானம் செய்வது சிறந்தது.

அப்யங்க ஸ்நானம் -
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்

திங்கள், புதன், சனி, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஸப்தமி, நவமி, திரயோதசி இவை எண்ணெ ய்க் குளியலுக்கு நல்லவை. செவ்வாய், வெள்ளி பெண்களுக்கு ஏற்றது. ஞாயிறு, வியாழன், ஸங்க்ரமணம், கிரஹணம், வியதீபாதம், ஜன்ம நக்ஷத்திரம், பிரதமை, ஷஷ்டி, அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி, திருவாதிரை, உத்திரம், கேட்டை, திருவோணம் இவையும் சந்தியா காலம், இரவுவேளையும் ஏற்றவையல்ல. சனிக்கிழமையாயின் மற்ற தோஷங்களிருந்தாலும் பித்ருதினங்களைத்தவிர மற்ற நாட்களில் குளிக்கலாம். கடுகெண்ணை, மணமூட்டி எண்ணெய், மருந்து சரக்குகள் கூட்டி தயாரித்த எண்ணெய், துளசி தளத்துடன் கூடிய எண்ணெய், நெய் சேர்த்த எண்ணெய் இவை எப்போதும் சேர்க்கத்தக்கவை. அரிசிமா, கடலைமா, கஞ்சி, சேர்த்துக்குளிப்பதாலும் தோஷமில்லை. ஞாயிறில் புஷ்பமும் வியாழனில் அறுகும் வெள்ளியில் கோமியமும் செவ்வாயில் மண்ணும் சேர்த்த எண்ணெய் குளி செய்யலாம். நோயாளி நோய் நிலைக்கு ஏற்றவாறு எப்போதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பாலர் கர்ப்பிணி முதியவர் இவர்களுக்கும் நியமமில்லை. விடியற்காலை, அருணோதயம், ஸந்தியாகாலம் இந்த வேளைகளிலும் பிறந்தநாள், திருமண நாள், உபவாசநாள் இவற்றைக் கொண்டாடும்போது க்ஷவரம் செய்த அன்றும் எண்ணெய்க்குளி கூடாது. தீபாவளியன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது கங்கையில் ஸ்நானம் செய்ததற்கு ஒப்பானது. 

புண்யதீர்த்தஸ்நானம்

நதி நதம் ஸ்ரோதஸ் முதலிய நீர்நிலைகளில் ஸ்நானம் செய்வதை க்ரியாஸ்நானம் என்பர். முதலில் ஸங்கல்பம் செய்து அங்குள்ள மண்ணை ஜலத்தில் குழைத்துப் பூசிக்கொண்டு நீராடி ஆசமனம் செய்து பின் அந்தந்த தீர்த்த தேவதையை (கங்கையாயின் கங்கா தேவியை, காவேரியாயின் காவிரி தேவியை) நீரில் ஆவாஹனம் செய்து அதனால் தலையிலும் உடலிலும் தெளித்துக்கொண்டு பின் முறைப்படி மந்திரங்கள் கூறி ஸ்நானம் செய்ய வேண்டும். 

தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்போது சுகமாக வாகனங்களில் செல்வதால் பயனில்லை. குடை, செருப்பு போன்ற பாதுகாப்பும் வண்டி டோலி போன்ற வாகனவசதியும் நல்லதல்ல. புண்ணிய சேமிப்பும் பாபநீக்கமும் பெற உடல்-மனவருத்தத்தை பொருட்படுத்தாத தீவிர ஆர்வம் தேவை. வேறு காரியத்திற்கென க்ஷேத்திரங்களுக்குச் சென்றவன் க்ஷேத்திர தரிசனம், தீர்த்த ஸ்நானம் செய்து நன்மை பெறலாம். எனினும் க்ஷேத்ர தரிசனத்திற்கென்றே ஆர்வத்துடன் செல்வதால் பெறக்கூடிய பலன் இதில் இருக்காது. தன் மாதா பிதா குரு முதலானோருக்காக ஸங்கல்பித்துத் தீர்த்தஸ்நானம் செய்வதனால் இவனுக்கும் பலன் உண்டு. 

ஆறுகுளங்களில் நீராடத்தகாத நாட்கள்

ஆடிமாதம் பிறந்ததும் புதுப்பெருக்கைப் பெறும் ஆறுகளும், குளங்களும் ரஜஸ்வலைகளாக- மாதவிடாய் பெறும் பெண்கள் ஆகின்றன. அதனால் அவற்றில் ஸ்நானம் செய்யக்கூடாது. கங்கை, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, சரயு முதலிய மகாநதிகளுக்கும் நதங்களுக்கும் இந்த தோஷம் இல்லை. மற்ற நதிகளுக்கு ஆடி முதல் மூன்று நாட்கள் (அல்லது புதுப்பெருக்கேற்பட்ட முதல் மூன்று நாட்கள்) தோஷமுண்டு. வற்றாத ஜலமுள்ள குளம் ஓடை கிணறு முதலியவற்றிற்கு இந்த தோஷம் இல்லை. உபாகர்ம, பிரேததகனத்திற்குப்பின் ஸ்நானம், கிரகணம் இவை நேரும்போது வேறு தோஷமற்ற நீர் நிலை இல்லாவிடில் ஆறுகளில் தோஷம் பார்க்காமல் ஸ்நானம் செய்யலாம். பொதுவாக புதுப்பெருக்காக வந்த நீர் தோஷம் உள்ளது. 

கௌண ஸ்நான முறை

ஸசேலஸ்நானம் செய்வது முக்கியமான ஸ்நானமுறை. அது இயலாதபோது ஈரத்துணியால் உடலைத் துடைத்துக் கொள்ளலாம். தலையை நனைக்காமல் உடலை மட்டும் நனைத்துக் குளிக்கலாம். இது காபீலஸ்நானம். மந்திரம் உச்சரித்துத் தலையில் நீரைத்தெளித்துக் கொள்ளலாம். இது பிரம்மஸ்நானம். விபூதியை நீர் கலக்காமல் உத்தூலனமாக உடல் எங்கும் பூசிக் கொள்ளலாம். இது ஆக்நேயஸ்நானம். பசுக்களின் குளம்படிமண்ணைப் பூசிக்கொள்ளலாம். இது வாயவ்யஸ்நானம். மூச்சடக்கி, மனமடக்கி யோகநிலையில் இறைவனை தியானிக்கலாம். இது யௌகிக ஸ்நானம். காயத்ரியைப் பத்துதடவை சொல்லி மந்த்ரித்த ஜலத்தைத் தெளித்துக்கொள்வது காயத்ரிஸ்நானம். வெயிலோடு மழை தூறும்போது அதில் நனைவது திவ்யஸ்நானம். வேதமோதுபவர் வாக்கால் அனுக்கிரகித்த ஜலத்தைத் தெளித்துக் கொள்வது ஸாரஸ்வத ஸ்நானம். இவை கௌண ஸ்நான முறைகள். முக்கிய ஸ்நானமுறை இயலாத போது கடைப்பிடிக்க கடைபிடிக்கத்தக்கவை.

தொடரும்...