கடவுள் இருக்கிறாரா ?





கடவுள் இருக்கிறாரா?

கடவுள் பற்றி இந்துமத வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள வேதாந்தம் எனப்படுகிற உபநிஷத்துகள் என்ன சொல்லுகின்றன என்பதைப்பற்றி சொல்லுகின்றேன்.

ஒருபொருள் தோன்றுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் தேவை. ஒன்று மூலகாரணம், மற்றொன்று அறிவுக் காரணம். உதாரணமாக பானை இருக்கிறது என்றால் பானை தோன்றுவதற்கு மண் மூலகாரணம் அதாவது மூலப்பொருள். குயவன் அறிவுக்காரணம் அல்லது உயிர்க்காரணம்.
ஆகவே பானை இருக்கிறது; பானைக்கு மூலப்பொருளாக மண் இருக்கிறது; (மண்ணே பானையாக ஆகி இருக்கின்றது.) மண்ணைப் பானையாக ஆக்கிய குயவன் இருக்கின்றான்.

அதுபோல உலகம் இருக்கிறது என்றால் உலகம் தோன்றுவதற்கான மூலப்பொருளும் அறிவு பொருளும் இருக்க வேண்டும் அல்லவா! அதுவே கடவுள்.


மண்ணை பானையாக ஆக்கிய குயவன் போல் உலகை ஆக்கியவர் கடவுள்.

குயவன் பானையை செய்வதற்கான மூலப் பொருளான மண்ணை பூமியிலிருந்து எடுத்தது போல கடவுள் உலகை படைப்பதற்கான மூலப்பொருளை எங்கிருந்து எடுத்தார் என்ற கேள்வி வரலாம். கடவுள் உலகைப் படைக்க வேறு எங்கிருந்தோ மூலப்பொருளை எடுத்தார் என்று சொன்னால் அந்த மூலப்பொருளை  எதிலிருந்து எப்பொழுது யார் படைத்தார் என்று கேள்வி வரும். உபநிஷத் சொல்லுகின்றது கடவுளே உலகிற்கான மூலப்பொருளாகவும் இருக்கின்றார்.

அதாவது  தானே உலகமாக ஆனார். சிலந்திப்பூச்சி வலை பின்னுவதற்கான நூலை தன்னிடமிருந்து எடுத்து தானே பின்னுவது போல் கடவுள் தன்னுடைய மாயா சக்தியை கொண்டு உலகை படைத்திருக்கின்றார்.
கடவுளே உலகிற்கு மூலப் பொருளாகவும் அறிவுக் அறிவுக்காரணமாகவும் இருக்கின்றார்.

மண்ணே பானையாக விளங்கிக்கொண்டு இருப்பதுபோல் கடவுளே உலகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் அதேசமயம் உலகிற்கு வேறாகவும் அவர் இருக்கின்றார் குயவன் போல்.

இதில் இன்னொரு நுட்பமான விஷயமும் உண்டு. மண்ணிற்கு வேறாக தனியாக பானை இல்லை. மண்ணே பானையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
அதேசமயம் பானைகளாக ஆகாமல் தனித்த மண்ணும் இருக்கவே இருக்கின்றது.

அதுபோல, கடவுளே உலகம் ஆகியிருக்கிறார் என்பதனால் கடவுளுக்கு வேறாக உலகம் இல்லை; ஒரே மண்ணே பானைகள் என்ற பெயர் வடிவங்களுடன் விளங்குவது போல் ஒரே கடவுளே உலகில் பல்வேறு பெயர் வடிவங்களுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆகவே காண்பதெல்லாம் கடவுளே!
அதே சமயம் உலகத்திற்கு வேறாகவும் இருக்கின்றார் கடவுள்,
பானை ஆகாமல் தனித்த மண்ணும் இருப்பதுபோல.

ஆகவேதான் இந்து மதம் கல்லையும் மண்ணையும் கூட கடவுளாக வணங்கலாம் என்று சொல்லி இருக்கின்றது.

ஆகவே இந்த உலகம் கடவுளின் ஓர் அம்சமாக இருக்கின்றது என்பதே ஹிந்து மதம் சொல்லுகின்ற கடவுள் தத்துவம்.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101