Hindu matha Dharma Vilakkam - Chapter 14

 ஹிந்து மத தர்ம விளக்கம்




பாடம் - 14

ப்ரமாணங்கள்

(24.09.2020)

சென்ற வாரம்...
உலகின் தோற்றமும் ஒடுக்கமும்
பரமாத்மாவின் சக்தியாகிய மாயையிலிருந்து உலகம் தோன்றியது. ப்ரளயகாலத்தில் மாயையிலேயே ஒடுங்குகிறது.
பரமாத்மா நித்யமானவர் (தோற்றமும் மறைவுமில்லாதவர்).
தோன்றிமறைகின்ற உலகம் அநித்யமானது. நித்யமானதின்மேல் அநித்யமானது தோன்றிமறைகிறது. அநித்யமான அனைத்துள்ளும் நித்யமானது இருக்கிறது.

நித்யமானதை அறிந்துகொள்வது எப்படி?

ஞானத்தினால் கடவுள் காட்சி!

மெய்ப்பொருள் காண்பது அறிவு - அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது - திருக்குறள்.


கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபசினாலும், சுத்தமான சத்துவ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான்.

  • முண்டக உபநிஷத். 


ஞானம் எப்படி வரும்?

ஞானம் கல்வி கேள்விகளால் வரும்.


கற்றனைத் தூறும் அறிவு - திருக்குறள்.


ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் - அறிவைத் தரும் கருவிகள்)

உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு சாதனம் - கருவி - எதுவோ அது பிரமாணம் எனப்படும்.
பிரமா கரணம் பிரமாணம். பிரமா என்றால் அறிவு. கரணம் என்றால் கருவி. அறிவைத் தரும் கருவி பிரமாணம்.

அது பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, சப்தம், ஸம்பவம், ஐதிஹ்யம் என எட்டு விதம்.

1.பிரத்யக்ஷப் பிரமாணம்

அக்ஷம் என்றால் புலன்கள். புலன்வழி உண்டாகும் ஞானம் பிரத்யக்ஷ ஞானம். அது ஏற்படுவதற்கு கருவியாக இருக்கக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்கள் பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதைக் காட்சி அளவை என்று தமிழில் சொல்வர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து அறிவுகளும் புலன்கள் வழி நமக்கு ஏற்படுகின்றன. ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவிற்கு முந்திய ஐந்து அறிவுகள் இவையே.


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு - திருக்குறள்.

யோகிகள், பக்தர்களுக்கு  நேரில் பிரத்யட்சமாகவே காட்சி கொடுத்திருக்கிறார் கடவுள். (ஸகுண பிரம்மம் ப்ரத்யக்ஷ பிரமாணத்தினாலும் அறியத்தக்கது)


2.அனுமானப் பிரமாணம்

பிரத்தியட்ச பிரமாணத்தை அடிப்படையாகக்கொண்டு யூகித்து (அநுமானித்து) அறியும் அறிவு அநுமான ஞானம் ஆகும். இந்த அறிவுக்கு ஸாதனமாக இருக்கக்கூடிய ஊகமே அநுமான ப்ரமாணமாகும்.

இது ஊக அளவை என்று தமிழில் சொல்லப்படுகிறது.


உதாரணம் - புகையை வைத்து நெருப்பு இருப்பதை அனுமானித்தால் அறிதல்.


காரியமான உலகை வைத்து இதைச் செய்த காரணமாக கடவுள் இருக்கின்றார் என்பது  அனுமான அறிவு.


3.உவமான பிரமாணம்

தெரிந்த ஒன்றைக் கொண்டு அதேபோலுள்ள தெரியாத ஒன்றைப் பற்றிய அறிவைப் பெறுதல். இங்கு அறிவைத் தரும் சாதனமாக உவமானம் இருக்கின்றது.

எ.கா: அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. அதுபோல உலகம் ஆதிபகவன் என்ற இறைவனை முதலாகக் கொண்டது. எழுத்துக்கள் நமக்குத் தெரிந்தவை. இறைவன் நமக்கு தெரியாதவர். எழுத்துக்களுக்கெல்லாம் ஒரு முதல் (அகரம்) இருப்பதுபோல, நமக்கு தெரிகின்ற உலகிற்கும் ஒரு முதல் இருக்க வேண்டும் என்று பெறும் கடவுளைப் பற்றிய அறிவு.

4.அர்த்தாபத்தி பிரமாணம்

ஒரு பொருளைக் கொண்டு, அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளை வருவித்து அறிந்து கொள்ளுதல்.


எ-கா - மழை பெய்திருக்கிறது. (நிலத்திலுள்ள ஈரத்தைப் பார்த்து மழை பெய்திருக்கிறது என்ற அறிவைப் பெறுகிறோம்)


உலக இயக்கத்தில் இருக்கும் ஒழுங்கு, நேர்த்தி, அழகு, அறிவு. இதை ஒழுங்குபடுத்தி இயக்குபவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அறிவைத் தருகின்றது.


5.அனுபலப்தி அல்லது அபாவப் பிரமாணம்
ஒரு பொருள் காணப்படவில்லை என்பதால் அது இங்கு இல்லை என்று சொல்லும் அறிவு.

எ-கா : இங்கு யானை இல்லை.

உலகில் காரணம் இல்லாத காரியம் ஒன்று எங்கும் காணப்படவில்லை.

(ஆகவே, உலகமாகிய காரியத்திற்கு காரணமாக ஒன்று (கடவுள்) இருக்கிறார்.)

கடவுள் கண்ணுக்கு முன்னால் அவர்களுக்கு காணப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று நாத்திகர்கள் முடிவு செய்கிறார்கள். (அபாவ பிரமாணம் இங்கு இல்லை என்பதற்குத்தான் ப்ரமாணமே அன்றி எங்குமே இல்லை என்பதற்கு பிரமாணம் ஆகாது. மேலும் ஏற்கனவே அறிந்த ஒன்றைத் தான் இல்லையென்று சொல்லமுடியும்.)

6.ஸம்பவம்

சம்பவம் என்பது பொருந்துதல்/ ஒப்புதல் என்று பொருள்படும்.

ஒன்றைச் சொல்லுகின்ற பொழுதே அதற்குள் இன்னொன்று அடங்கி இருத்தல்.


எ-கா : 100 பேர் இருக்கிறார்கள் எனும் பொழுது நிச்சயமாக 99 பேர் அங்கு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


7.ஐதிஹ்யம்

ஐதிஹ்யம் என்பது உலக வழக்கு. பரம்பரை வழக்கம்.


எ- கா: முருங்கை மரத்தில் பேய் இருக்கு!

குறிப்பு: உபமானம் முதலாக ஐதிஹ்யம் ஈராக உள்ள ஐந்தும் அனுமானத்தில் அடங்கும். அனுமானம் ப்ரத்யக்ஷத்தை ஆதாரமாகக் கொண்டது.


8.சப்தப் பிரமாணம்

ஆப்த வாக்யம் - ஆன்றோர் வாக்கு - சப்த ப்ரமாணம்.


ஆப்தர் யார்?
உள்ளதை உள்ளவாறு அறிகின்ற சக்தி உடையவனும், தான் அறிந்ததை ஒளிக்காமல் உள்ளவாறு சொல்லுகின்ற நேர்மையுள்ள உள்ளவனான மனிதன் ஆப்தன். அவனுடைய சொல் ஆப்த வாக்கியம் எனப்படும். ஆப்த வாக்கியமே சப்த பிரமாணம். ஏனெனில் அது உண்மையானதாக இருக்கும். அதுவும் நமக்கு அறிவைத் தருகின்ற ஸாதனமாக இருப்பதனால் ப்ரமாணமாகிறது. அறியாமை, ஐயம், திரிபு இல்லாத வாக்கியங்கள் பிரமாண வாக்கியங்கள்.

எ-கா - பள்ளிப் பாடங்கள்,

குரு உபதேசம்.


எல்லா குருமார்களுக்கும் பரமகுருவாக இருக்கக் கூடியவர் இறைவன். இறைவனுடைய வாக்கு வேதங்கள், ஆகமங்கள்.

அறிவிக்கிறது வேதம். வேதப்பொருளை வருவித்துக் கொடுப்பது ஆகமம்.

பிரத்யக்ஷ, அநுமானங்களால் அறியமுடியாததை அறிவிப்பது வேதங்கள். அதாவது நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத விஷயங்களை பற்றிய அறிவைத் தருபவை வேதங்கள். அத்தகைய (பல பிறவிகள், பல உலகங்கள், புண்ணிய பாபம், சொர்க்க நரகம் போன்ற) விஷயங்களுக்கு வேதங்களே பிரமாணம்.

ஆகவே, வேதங்கள் சப்த பிரமாணம் எனப்படுகின்றன.


தோன்றாமை (அஞ்ஞானம்), ஐயம் (ஸம்ஶயம்), திரிபு (விபர்யயம்)


கற்க கசடற…. திருக்குறள்


இனி, ஹிந்து மதக் கொள்கைக்கு பிரமாணமாக இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.)

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101